'ஒரு உயிரை எடுக்க என் வளர்ப்பு எனக்குக் கற்றுத் தரவில்லை’- Man vs Wild பியர் க்ரில்ஸ் உடன் நரேந்திர மோடி!
டிஸ்கவரி சேனலின் பிரபலமான நிகழ்ச்சி 'மேன் vs வைல்ட்' 'Man vs Wild', இதில் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான பியர் க்ரில்ஸ் காடுகளுக்குச் சென்று அங்கே மாட்டிக்கொண்டால் அந்த சூழலில் எப்படி தப்பிக்கவேண்டும் என்று செய்துக்காட்டுவார். இது எப்பொழுதும் ஒளிப்பரப்பாகும் பிரபல நிகழ்ச்சி.
ஆனால் விரைவில் ஒளிப்பரப்பாக உள்ள மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பியர் க்ரில்ஸ் உடன் பயணம் மேற்கொண்டு காடுகளில் அவர் என்ன செய்வார் என்று படமாக்கப்பட்டுள்ளது.
சில நாட்கள் முன்பு இதுகுறித்து ட்ரைலர் ஒன்றை பியர் க்ரில்ஸ் வெளியிட்ட உடனே நெட்டிசன்கள் மத்தியில் அந்த வீடியோ வைரலாக பரவியது. தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை வெளியிட்ட அவர்,
“180 நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பிரதமர் மோடியின் மறுபக்கத்தை பார்ப்பார்கள்...” என பதிவிட்டிருந்தார்.
அதன் பின் இந்நிகழ்ச்சியின் ப்ரோமோவை சேனல் வெளியிட்டத்தை தொடர்ந்து உத்தர்கந்த் வனப்பகுதியில் பியர் க்ரில்ஸ் மற்றும் நரேந்திர மோடி வலம் வரும் நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
4 நிமிடம் வரும் அந்த வீடியோவில் பியர் க்ரில்ஸ் தற்காப்புக்காக ஈட்டியை எப்படி பயன்படுத்துவது என்று மோடிக்கு கற்றுக்கொடுக்கிறார், அப்பொழுது
“இந்தியாவின் மிக முக்கிய நபர் நீங்கள், உங்களை காப்பற்றவேண்டியது என் கடமை, புலி தாக்க வந்தால் இதை பயன்படுத்துங்கள்,” என்றார்.
அதற்கு பிரதமர் நரேந்திர மோடி,
“வனப்பகுதியில் உயிருக்கு ஆபத்து வந்தாலும் எனது வளர்ப்பு மற்றொரு உயிரை எடுக்கச் சொல்லித் தரவில்லை நீங்கள் வலியுறுத்துவதால் இதை வைத்துக்கொள்கிறேன்,” என்கிறார்.
ஆனால் நம் அனைவருக்கும் தெரியும் மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் உயிர் வாழ கண்ணில் தென்படும் பூச்சியில் துவங்கி மிருகங்கள் வரை விஷமற்றவைகளை கொன்று பியர் க்ரில்ஸ் சமைத்தும் சமைக்காமலும் உண்பார். நரேந்திர மோடியுடனான பயணத்திலும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்ததா என்று கேட்டதற்கு,
“மோடி முழு சைவம், அதனால் காட்டில் அதுப்போன்ற அசைவங்கள் எதுவும் உண்ணவில்லை. அதற்கு அவசியமும் இல்லை, வனப்பகுதிகளில் தாவரங்கள், பெர்ரிகள், சில வேர்கள், இலைகளையும் உண்ணலாம். மேலும் சிறுவயதிலே வனப்குதிக்கு பரிட்சயமானதால் இது மோடி அவர்களுக்கு சிரமமாக இல்லை” என்றார்.
நிகழ்ச்சியின் முடிவில் மிகவும் குளிரில் நனைந்து இருக்கும் பொழுது பிரதமர் மோடியுடன் இந்திய தேனீரை அருந்தியது நாளின் சிறப்பான அம்சமாக பியர் க்ரில்ஸ் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி முழுவதும் க்ரில்ஸ் உடன் பயணம் செய்த மோடி அவர்கள், இயற்கை மற்றும் வனப்பகுதிகளை காக்கும் முக்கியத்துவத்தை பகிர்ந்துள்ளார். இயற்கையை காக்கவில்லை என்றால் வனவிலங்குகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
“இந்த இடத்தை அபாயமாக நினைக்கக்கூடாது, இயற்கைக்கு புறம்பாக நாம் நடந்தால் தான் அனைத்தும் அபாயமாக மாறும் ஏன் மனிதர்கள் கூட அபாயகரமாகலாம். இயற்கைக்கு நாம் ஒத்துழைத்தால், இயற்கையும் நமக்கு ஒத்துழைக்கும்,”
என நரேந்திர மோடி மிக இயல்பாக சொன்னதாக தெரிவிக்கிறார் க்ரில்ஸ். ஆகஸ்ட் 12ம் தேதி காலை 9 மணிக்கு 180 நாடுகளில் இந்நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகத் தயாராகவுள்ளது.
இந்நிகழ்ச்சி குறித்து இதற்கு முன்பே பேசி இருந்த மோடி அவர்கள்,
“நான் காடுகளுக்கும், மலைகளுக்கும் நடுவில் தான் வளர்ந்தேன். அது என் வாழ்வின் முக்கியமான நாட்கள், இப்பொழுது அரசியலைத் தாண்டி இயற்கைக்கு நடுவில் ஒரு பயணம் என்ற சிறப்பான நிகழ்ச்சியில் பங்கேற்பது எனக்கு மகழ்ச்சி,” என தெரிவித்திருந்தார்.
இந்தியாவின் வளத்தை காட்டுவதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு மிகப்பெரிய வாய்ப்பு என்றும் பிரதமர் தெரிவித்திருந்தார். சுற்றுச்சுழல், இயற்கைவளம் பற்றியும் இந்நிகழ்ச்சியில் பேசியுள்ளார் மோடி.
12 டிஸ்கவரி சேனலில், பெங்கால், ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே சமையத்தில் இந்நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகவுள்ளது.
தகவல் உதவி: ANI | கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்