‘கிராமப்புற மாணவிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவேன்’ - நல்லாசிரியர் விருது பெறும் தலைமை ஆசிரியை லலிதா!
புதிய கற்பித்தல் முறை, பள்ளி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியது, சமூகமேம்பாட்டில் மாணவிகளை ஈடுபட செய்தது, மாணவிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தலைமை ஆசிரியை லலிதா தேர்வாகியுள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆசிரியராக இருந்து குடியரசுத்தலைவர் ஆனவர். அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 44 ஆசிரியர்களை மத்தியக் கல்வி அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. இதில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை லலிதா மற்றும் திருச்சி மாவட்டம், பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஆஷா தேவி என தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் தலைமை ஆசிரியை லலிதா, ஈரோடு மூலப்பாளையத்தைச் சேர்ந்தவர். முதுகலை இயற்பியல் ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய அவர், ஆசிரியப் பணியில் 19 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். கடந்த 2019-ம் ஆண்டு வரை சிவகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை இயற்பியல் ஆசிரியராகப் பணிபுரிந்தவர், பின் பதவி உயர்வில் சத்தியமங்கலம் அருகே தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியாராகப் பொறுப்பேற்றார்.
புதிய கற்பித்தல் முறை, மாணவியர் சேர்க்கை, பள்ளியில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியது, சமூக மேம்பாட்டில் மாணவிகளை ஈடுபட செய்தது, மாணவிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தியது என கற்பித்தல் முறையில் பல்வேறு கோணங்களில் சிறந்து விளங்கியதற்காக இந்தாண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது லலிதாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
''மாணவர்களுக்கு ஆராய்ச்சி சார்ந்த கல்வியை, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கற்றுக் கொடுக்கும் செயல்முறைகளை, நான் பணியாற்றும் பள்ளிகளில் செயல்படுத்தி வருகிறேன். தொழில்நுட்பம் மூலம் மாணவர்களுக்கு எளிதாகக் கற்றுக்கொடுக்க முடியும்.
மாணவர்களுக்குப் பாடங்கள் தொடர்பாக 160 வீடியோக்களை யூடியூப் சேனலில் பதிவு செய்து வைத்துள்ளேன். இதுபோல் பல்வேறு பணிகளை நான் எனது வாழ்நாளில் மாணவ, மாணவியருக்காக செய்து வருகிறேன். கடந்தாண்டு தேசிய விருதுக்கு இறுதிச்சுற்று வரை சென்றேன். இம்முறை விருது கிடைத்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரியை பணியை மேலும் ஊக்குவிப்பதாக இது அமைந்துள்ளது,” என தலைமை ஆசிரியை லலிதா மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
லலிதாவின் கணவர் காமராஜ், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா கலை கல்லுாரியில் வணிகவியல் துறை பேராசிரியராக உள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் சக்தி பிரியங்கா, பிளஸ் 1 படிக்கிறார். மகன் அபி நந்தன், எட்டாம் வகுப்பு படிக்கிறார்
“தலைமைப் பண்பு குறித்து சர்வதேச அளவிலான ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளேன். இயற்கைப் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். இயற்கை சூழலில் வீடு ஒன்றைக் கட்டுவதற்கான மாதிரியை தயார் செய்து வைத்துள்ளேன்.
”கிராமப்புற மாணவிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது தான் என் நோக்கம். நிறைய குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகிறது. இது தொடர்பாக பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மீண்டும் பள்ளிகள் திறந்ததும் பெற்றோர்களை அழைத்து அவர்களிடம் இது தொடர்பாக பேச வேண்டும். இன்னும் எனக்கு நிறைய பணி ஆண்டுகள் மீதம் உள்ளது. அவற்றையும் மகிழ்ச்சியுடன் இதே போல் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் செயல் படுத்துவேன்,'' என தனது எதிர்காலத் திட்டம் குறித்து லலிதா கூறுகிறார்.
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட தலைமையாசிரியை லலிதாவிற்கு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணாவிகள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வழக்கமாக விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் டெல்லி விக்யான் பவனில் செப்டம்பர் 5-ம் தேதி குடியரசுத் தலைவர் கையால் விருது வழங்கி கௌரவிக்கப்படும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக டெல்லியில் அந்த விருது நிகழ்ச்சி நடைபெறவில்லை. அதற்குப் பதிலாக அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் குடியரசுத் தலைவர் சார்பில் காணொலிக் காட்சி மூலம் விருதுகள் வழங்கப்பட்டன.
தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால், விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு டெல்லி விக்யான் பவனில் செப்டம்பர் 5ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையால் விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.