தொழில்முனைவோர்களுக்கு ஊக்கம் அளிக்கும் தேசிய ஸ்டார்ட் அப் விருதுகள்!
சோதனை மிகுந்த ஆண்டில் புதுமையான சேவைகள் மூலம் சிறந்து விளங்கிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான அங்கிகாரத்தை தேசிய ஸ்டார்ட் அப் விருதுகள் வழங்க உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஆட்டிப்படைத்த சூழலில், வளர்ச்சிக்கு சாதகமாக இல்லாத வர்த்தகச் சூழல், தயக்கம் நிறைந்த முதலீட்டாளர்கள், பொது முடக்கம் உள்ளிட்ட சவால்களை ஸ்டார்ட் அப்கள் எதிர்கொண்டன.
இருப்பினும், இவற்றில் பல ஸ்டார்ட் அப்கள் மேலும் வலுவடைந்து, தங்கள் சேவைகள் மற்றும் தயாரிப்புகள் மூலம் சமூகத்தின் மீதும் தாக்கம் செலுத்தின.
இந்த ஸ்டார்ட் அப் நிறுவவங்களின் துடிப்பு மற்றும் புதுமையாக்கத்தை அங்கீகரிக்கும் வகையில், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக வளர்ச்சிக்கான துறை (DPIIT) ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ், 2020ல் தேசிய ஸ்டார்ட் அப் விருதுகளை அறிவித்தது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களை அங்கீகரிப்பது மற்றும் வேலைவாய்ப்பைஉருவாக்கி, சமூகத்தில் தாக்கம் செலுத்தும், புதுமையான தீர்வுகள் மற்றும் சேவைகளை உருவாக்கும் ஸ்டார்ட் அப் சூழல் ஊக்குவிப்பாளர்களை அங்கீகரிப்பதை இந்த விருதுகள் நோக்கமாக கொண்டுள்ளன.
2021 தேசிய ஸ்டார்ட் அப் விருதுகள், 15 பிரிவுகளில் வழங்கப்படும். இவற்றில் உள்ள 49 துணைப் பிரிவுகளிலும் ஒரு வெற்றியாளர் நிறுவனம் தேர்வு செய்யப்படும். பயணம், விவசாயம், கல்வி, விண்வெளி ஆகிய உட்பிரிவுகள் உள்ளன. இந்த விருதுகளின் ஒரு பகுதியாக, இன்குபேட்டர் மற்றும் ஆக்சலேட்டர் அமைப்புகளும் கவுரவிக்கப்படும். சிறப்புப் பிரிவுகளின் கீழும் ஸ்டார்ட் அப்களுக்கு விருது வழங்கப்படும்.
இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிரிவு ஒன்று,
கோவிட்-19 தடுப்பு, கண்டறிதல், சிகிச்சை ஆகியவற்றில் புதுமையான தீர்வுகளை உருவாக்கிய நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. பெண்களால் துவக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் கல்லூரி வளாகங்களில் உருவான ஸ்டார்ட் அப்கள் சிறப்புப் பிரிவுகளில் விருது பெறும்.
என்ன பரிசு?
ஒவ்வொரு பிரிவிலும் தேர்வு செய்யப்படும் நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும். முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடிக்கும் நிறுவனங்களுக்கு டிபிஐஐடி நடத்தும் தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் முன்னுரிமை அளிக்கப்படும். வெற்றி பெறும் இன்குபேஷன் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம் ரொக்கப்பரிசு கிடைக்கும்.
வெற்றி பெறும் நிறுவனங்கள், வர்த்தக ஒப்பந்தம் மற்றும் நிதி ஆகியவற்றை ஈர்ப்பதோடு, மற்ற தொழில்முனைவோருக்கான முன்னுதாரணமாகவும் விளங்கலாம்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், சக நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளவும், வலைப்பின்னலை உருவாக்கிக் கொள்வதற்கான வாய்ப்பாகவும் இந்த விருது அமையும். இந்த விருதுக்காக விண்ணப்பிப்பதன் மூலம், மாறிக்கொண்டே இருக்கும் இத்துறையின் போக்குகளையும் அறியலாம்.
சமூகத்தில் தாக்கம் செலுத்தியதாகக் கருதும் ஸ்டார்ட் அப்கள் இந்த விருதுக்காக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இம்மாதம் 31ம் தேதி கடைசி நாள்.
விண்ணப்பம்
இதில் பங்கேற்க விரும்பும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் DPIIT அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். நிறுவன சான்றிதழ் அல்லது பங்குதாரர் ஒப்பந்ததை சமர்பிக்க வேண்டும். சந்தையில் உள்ள மென்பொருள் அல்லது வன்பொருள் சேவையை கொண்டிருக்க வேண்டும்.
ஒரு நிறுவனமாக அல்லது அறக்கட்டளை, கழகமாக பதிவு செய்துள்ள இன்குபேட்டர்கள், ஆக்சலேட்டர் நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம். இவை குறைந்தது இரண்டு வருடங்களாக செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
தேசிய ஸ்டார்ட் அப் விருதுகளுக்கு விண்ணப்பிக்க: startupindia.gov.in.