மீண்டும் ரெட் ஆன அதானி பங்குகள் - MSCI வெளியிட்ட அதிரடி முடிவு!
கடந்த இரண்டு நாட்களாக உயர்வுடன் வர்த்தகமாகி வந்த அதானி பங்குகள், இன்று மீண்டும் சரிய MSCI குறியீடு அமைப்பு வெளியிட்ட அறிவிப்பு காரணமாக அமைந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக உயர்வுடன் வர்த்தகமாகி வந்த அதானி பங்குகள், இன்று மீண்டும் சரிய MSCI குறியீடு அமைப்பு வெளியிட்ட அறிவிப்பு காரணமாக அமைந்துள்ளது.
அதானிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி:
Hindenburg அறிக்கையின் படி, அதானி குழும நிறுவன பங்குகள் பங்குச்சந்தை மற்றும் கணக்கியம் மோசடியில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனையடுத்து, கடந்த வாரம் முதலே அதானி எண்டர்பிரைசஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரியத் தொடங்கின.
இதனையடுத்து அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எக்கனாமிக் ஜோன் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் என மூன்று அதானி குழுமப் பங்குகள் நிஃப்டியில் குறுகிய காலத்திற்கு ஏஎஸ்எம் (கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கை) பட்டியலில் சேர்க்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் டவ் ஜோன்ஸ் நிலைத்தன்மை குறியீடுகளில் இருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் சர்வதேச அளவில் அதானியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது.
மற்றொருபுறம் அதானி குழுமப் பங்குகளின் மதிப்புகள் தொடர்ந்து சரிவடைந்து வருவதைக் கணக்கில் கொண்டு, உள்நாட்டு் வங்கிகள் அதானி குழுமத்துக்கு கடன் கொடுத்த விவரங்களை ரிசர்வ் வங்கி கோரியது. இப்படி அதானி குழுமம் மீது அடி மேல் அடி விழுந்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பங்குகளின் மதிப்பு மீண்டும் உயர ஆரம்பித்தது.
நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில் அதானி எண்டர்பிரைசஸ் 15 சதவீத உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
MSCI எடுத்த அதிரடி முடிவு:
கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குழும நிறுவனங்களின் MSCI அமைப்பின் சில குறியீடுகளில் இடம்பெறுவதற்கான தகுதிகள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், இந்த மறு ஆய்வு முடிவை எடுத்துள்ளது.
இதனையடுத்து, இன்று பட்டியலிடப்பட்ட அதானி குழுமத்தின் 10 நிறுவன பங்குகளில் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் மிகவும் மோசமான அளவாக 15 சதவீதம் வரை சரிந்தது. அதானி போர்ட்ஸ் 7%, அதானி பவர் 5 %, அதானி டிரான்ஸ்மிஷன் 5%, அதானி டோட்டல் கேஸ் 5%, அதானி கிரீன் எனர்ஜி 5%, ஏசிசி 3.7%, அம்புஜா சிமெண்ட் 6.3% மற்றும் என்டிடிவி 3.7% சரிந்தன.
மறுபுறம், இந்த குழுவில் அதானி வில்மர் மட்டுமே லாபத்தில் வர்த்தகம் ஆனது. இன்று காலை 10.50 மணியளவில் பிஎஸ்இயில் 4.42% அதிகரித்து ரூ.437.95 ஆக இருந்தது.
தங்களது கொள்கையின் படி, நிச்சயமற்ற நிறுவனங்களை சுதந்திரமாக மிதக்க அனுமதிக்க மாட்டோம் என்று MSCI அறிவித்ததை அடுத்து, அதானி குழும பங்குகள் இன்று இறங்குமுகம் காண ஆரம்பித்தன.
MSCI Global Investable Market Indexes-ல் தனது வழக்கமான பிப்ரவரி மாதம் ஆய்வுக்குப் பின்பு அதானி குழுமத்தின் செக்யூரிட்டிகள் குறித்த தகுதிகளை அறிவிக்கும் என விளக்கம் கொடுத்துள்ளது. ஆனால், இன்று காலை வரையில் தகுதிகளில் எவ்விதமான மாற்றமும் செய்யப்படவில்லை.
MSCI இன்டெக்ஸ் என்றால் என்ன?
MSCI குறியீட்டை மதிப்பாய்வு செய்து ப்ரீ ஃப்ளோட் தகுதி மாற்றங்களைச் செயல்படுத்தும், பங்கு எடையை மாற்றும். MSCI குறியீட்டைப் பின்பற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் அல்லது முதலீட்டு நிறுவனங்கள் அதன் குறியீட்டில் உள்ள பங்குகளின் எடைக்கு ஏற்ப முதலீடு செய்கின்றன. இந்தக் குறியீட்டில் ஒரு பங்கின் வெயிட்டேஜ் அதிகரித்தால், அந்தப் பங்கின் வெளிநாட்டு கொள்முதல் அதற்கேற்ப அதிகரிக்கும்.
வெயிட்டேஜ் குறைந்தால் அன்னிய முதலீடு குறையும். MSCI குறியீட்டிலிருந்து ஒரு பங்கு நீக்கப்பட்டால், குறியீட்டைப் பின்பற்றும் முதலீட்டாளர்கள் அந்தப் பங்கிலிருந்து தங்கள் முதலீடுகளை திரும்பப் பெறுவார்கள். அதாவது, தங்களிடம் உள்ள பங்குகளை விற்கிறார்கள். இது பங்குகளின் விற்பனை அழுத்தத்தை அதிகரிக்கும்.
’ப்ரீ ஃப்ளோட்’ தகுதி என்பது சர்வதேச சந்தை முதலீட்டாளரால் பொதுப் பங்குச் சந்தைகளில் வாங்குவதற்குக் கிடைக்கக்கூடிய பங்குகளின் விகிதமே ஒரு செக்யூரிட்டி-யின் ப்ரீ ஃப்ளோட் தகுதியை வரையறுக்கிறது. இதேபோல், ஒரு செக்யூரிட்டி-யின் குறிப்பிட்ட நிலையற்ற தன்மை கொண்டு இருந்தால் மட்டுமே ப்ரீ ஃப்ளோட் தகுதியை நீக்கப்படும். இதற்கான ஆய்வை தான் இன்று MSCI செய்ய உள்ளது.
MSCI அறிவிப்பு அதானி குழுமம் பங்கு வர்த்தக முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை கூறியதை உறுதிபடுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு:
கெளதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் குறித்து வெளியாகியுள்ள ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கை குறித்து விசாரணை செய்ய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் ஒரு குழுவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விஷால் திவாரி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட தனி மனு பிப்ரவரி 10ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளதையும், தனி மனுவுடன் தனது மனுவையும் வெள்ளிக்கிழமை விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதனை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏற்றுக்கொண்டதோடு, நாளை வழக்கை விசாரிக்கவும் அனுமதி அளித்துள்ளார்.
‘கெளதம் அதானி’ - மீண்டும் மீண்டெழ முடியுமா? அவர் வளர்ந்த கதையின் வழியே ஒரு பார்வை!