[TechSparks 2020] ‘தொழில் முனைவர்களின் விடாமுயற்சி ஊக்கம் அளிக்கிறது, அரசு உதவிகள் செய்யக் காத்திருக்கிறது” - நிர்மலா சீதாராமன்!
அரசாங்கம் மற்றும் பொதுமக்களிடையே வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும் என்பதை டெக்ஸ்பார்க்ஸ் 2020 நிகழ்வில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று சூழலில் இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் வணிகங்கள் ஈடுபட்டுள்ளது என்பதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புக்கொண்டார். நாட்டின் தேவையை அரசுக்கு எடுத்துரைப்பதில் பொதுத்துறையின் பங்களிப்பு ஊக்குவிக்கப்படவேண்டும் என்றார்.
“கடினமான சூழலை சிறப்பாகக் கையாண்டு வெற்றிகரமாக அதிலிருந்து மீண்டெழ ஊக்கத்துடன் செயல்பட்ட ஒவ்வொரு வணிகத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று மெய்நிகர் வடிவில் நடைபெற்ற டெக்ஸ்பார்க்ஸ் 2020 நிகழ்வின்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
இத்தகைய கடினமான சூழலில் இருந்து மீண்டெழ வணிகங்களும் இந்திய மக்களும் தைரியத்துடன் செயல்பட்டது தன் கண்களில் கண்ணீரை வரவழைத்தது என்றும் அவர் உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்தார்.
’தற்சார்பு இந்தியா’ திட்டமானது ஏற்றுமதிக்கும் வெளிநாட்டு வர்த்தகங்களுக்கும் எதிரானது அல்ல என்றும் உள்நாட்டு சந்தையை விரிவுபடுத்துவதே இதன் நோக்கம் என்றும் அவர் தெளிவுப்படுத்தினார். பிரதமர் நரேந்திர மோடியின் ‘ஆத்மநிர்பர்’ திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
”தற்சார்பு இந்தியாவின் நோக்கம் உள்முகமாக அணுகி, இறக்குமதியை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்பதாகும். உலகளாவிய மதிப்புச் சங்கிலியில் பங்களிப்பதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ளவேண்டிய அதேசமயம் இந்தியாவின் வலிமை அழிந்துவிட அனுமதிக்கக்கூடாது,” என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
தற்சார்பு நாடாக இந்தியா உருவாக இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகள் உற்பத்தி செய்யப்படவேண்டும். இதற்கு இறக்குமதியை சார்ந்திருக்கக்கூடாது. இத்தகைய உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகள் உள்நாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன் சர்வதேச தேவைகளையும் பூர்த்தி செய்யும் தரத்துடன் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
“அரசாங்கம் செவி மடுத்து கேட்டுக்கொண்டிருக்கிறது. உங்களுக்குத் தேவையானதை கேளுங்கள்,” என்பதே இளைஞர்கள், வெவ்வேறு அளவுகளில் செயல்படும் வணிகங்கள், பொதுமக்கள் என அனைவரிடமும் அவர் பகிர்ந்துகொள்ள விரும்பும் முக்கியத் தகவலாகும்.
“நாம் ஒன்றைச் செய்ய விரும்பினால் அதை செயல்படுத்துவதற்கான மிகச்சிறந்த தருணம் இன்றுதான். எனவே தயங்கவேண்டாம். இந்தியா உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று எங்களிடம் சொல்லுங்கள். நாங்கள் செய்ய விரும்புவதை யாராலும் தடுக்க முடியாது,” என்றார்.
“எது நடக்கவில்லை என்று இந்தியாவின் இளைஞர்களான நீங்கள் கருதுகிறீர்களோ அதை எங்களிடம் சொல்லுங்கள். அது முறையாக பரிசீலிக்கப்படும். கேள்விகளைக் கேளுங்கள். பதிலளிக்க நாங்கள் இருக்கிறோம். எது நடக்கவில்லை என்பது குறித்து நீங்கள் வெளிப்படையாக பேசவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்,” என்றார்.
மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் டெக்ஸ்பார்க்ஸ் 2020 நிகழ்வில் குறிப்பிட்ட கருத்தை வலியுறுத்தும் விதமாக வணிகங்கள் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதுடன் அதைப் பயன்படுத்தி புதுமை படைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
“நாங்கள் புதிய இந்தியாவை உருவாக்க விரும்புகிறோம். அதற்கு உதவத் தயாராக இருக்கிறோம்,” என்றார்.
பொருளாதாரத்தை ஊக்குவிக்க அரசாங்கம் ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக 73,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் ஒரு பகுதியை முன்பணமாக பெற்றுக்கொள்ளும் வசதி, LTC-க்கு பதிலாக பணமாக பெற்றுக்கொள்ளும் வசதி என பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் திட்டங்களை அறிவித்தார்.
இந்த ஆண்டு மே மாதம் தற்சார்பு இந்தியாவை ஊக்குவிக்கும் வகையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க 20 லட்சம் கோடி ரூபாய் சிறப்பு தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது.