20,000-க்கும் மேற்பட்ட மாடுகளை மீட்டுள்ள பத்மஸ்ரீ விருது வென்ற ஜெர்மானிய பெண்!
ஜெர்மனியில் இருந்து சுற்றுப்பயணமாக இந்தியா வந்த ஃப்ரெட்ரிக் ப்ரூனிங் இந்திய கலாச்சாரத்தின் மீது ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக இங்கேயே தங்கியிருந்து 20,000-க்கும் மேற்பட்ட மாடுகளை மீட்டுள்ளார்!
ஃப்ரெட்ரிக் ப்ரூனிங் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனியில் இருந்து சுற்றுப்பயணமாக இந்தியா வந்தார். அப்போது அவருக்கு 19 வயது. இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் போன்றவை இவரைப் பெரிதும் கவர்ந்தன.
வாழ்க்கையின் அர்த்தத்தை நோக்கிய இவரது தேடலுக்கு பகவத் கீதையில் பதில் கிடைத்துள்ளது. இருப்பினும் குருவின் வழிகாட்டலைத் தேடினார். இறுதியாக உத்திர பிரதேசத்தின் மதுராவிற்கு அருகில் ராதாகுண்ட் பகுதியில் டின் கோரி பாபாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இங்கு இவருக்கு தீக்ஷை கிடைத்த பிறகு இவர் சுதேவி மாதாஜி என்று அழைக்கப்பட்டார்.
ஒருமுறை இவர் காயம்பட்ட கன்றுக்குட்டி ஒன்றைக் கண்டார். அதைப் பார்க்கவே அவருக்குப் பரிதாபமாக இருந்தது. இதுபோன்ற விலங்குகளுக்கு உதவவேண்டும் என்கிற உந்துதல் அவருக்கு ஏற்பட்டது.
“ஒரு குப்பை போல் அந்தக் கன்றுக்குட்டி தூக்கியெறியப்பட்டிருந்தது. பின்னங்கால் உடைந்திருந்தது. எலும்பு முறிந்து பெரிய காயம் இருப்பதைப் பார்க்கமுடிந்தது. புண் ஏற்பட்டிருந்த இடத்தில் ஏராளமான புழுக்கள். அவை உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்திருந்தது,” என்று சுதேவி சோஷியல் ஸ்டோரி இடம் தெரிவித்தார்.
அந்தக் கன்றுக்குட்டிக்கு உதவ நினைத்த சுதேவி அதை வீட்டுக்கு எடுத்து வந்து கவனித்துக் கொண்டார். கைவிடப்பட்ட, நோயுற்ற, காயம்பட்ட மாடுகளையும் கன்றுகளையும் பராமரிக்கும் இவரது பயணம் இப்படித் தான் தொடங்கியுள்ளது.
இவர் பராமரித்த மாடு, கன்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே கிராமத்திற்கு வெளியே ஒரு பெரிய இடத்திற்கு மாற்றலானார். பத்மஸ்ரீ விருது வென்றுள்ள சுதேவி இன்று உத்திர பிரதேசத்தின் மதுராவில் ராதா சுரபி கோசாலைவில் 2,500-க்கும் மேற்பட்ட மாடுகளைப் பராமரித்து வருகிறார்.
காயம்பட்ட மாடுகளுக்கு தங்குமிடம்
“சாலையில் ஆதரவின்றி இருக்கும் மாடுகளையும் எங்களிடம் அழைத்து வரப்படும் மாடுகளையும் நாங்கள் பராமரித்து உணவு, தங்குமிடம், மருந்து, சிகிச்சை போன்றவற்றை வழங்குகிறோம்,” என்கிறார் சுதேவி.
அவர் மேலும் கூறும்போது,
”சில மாடுகளை நோயிலிருந்து மீட்கமுடியும். இந்த நிலையில் இருக்கும் மாடுகளை முறையாகப் பராமரித்து மீட்கிறோம். சில மாடுகள் இறக்கும் தருவாயில் இருக்கும். இந்த மாடுகள் தங்கள் இறுதி நாட்களை நிம்மதியாகக் கழிக்க உதவுகிறோம்,” என்றார்.
கோசாலையில் தற்போது 2,500 மாடுகள் இருக்கின்றன. ஆரோக்கியமாக இருக்கும் பசுக்கள் மதுராவுக்கு அருகில் உள்ள பர்சானாவில் அமைந்துள்ள பெரிய கோசாலைக்கு அனுப்பப்படுகின்றன.
தினமும் சராசரியாக 5 முதல் 15 பசுக்களை மீட்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில் 20,000-க்கும் அதிகமான மாடுகளை இவர்கள் மீட்டுள்ளனர். சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏழை மக்களும் மாடுகளைப் பராமரிப்பதில் உதவுவதாக சுதேவி தெரிவிக்கிறார்.
”என்னுடன் இருக்கும் சிலர் பள்ளிக்கே சென்றதில்லை. ஆனாலும் அவர்கள் புத்திசாலிகளாகவும் பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்கிறார்கள். நான் தெரிந்துகொண்டவற்றை அவர்களுக்கும் கற்றுக்கொடுக்கிறேன். அவர்களும் நன்றாகக் கற்றுக்கொள்கிறார்கள். ஜாதி, மத வேறுபாடில்லாமல் அனைவரும் இங்கு ஒன்றாக இணைந்திருக்கிறார்கள். நான் தொடர்ந்து சமத்துவத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறேன்,” என்கிறார்.
2019-ம் ஆண்டு இவரது முயற்சிகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களிடமிருந்து பத்மஸ்ரீ விருது பெற்றார். இது அவரது நோக்கத்திற்கு சிறப்பாக உதவியதாக தெரிவிக்கிறார் சுதேவி.
இந்த கோசாலையில் பசுக்கள் மட்டுமின்றி எருமை மாடுகள், குதிரைகள், கழுதைகள் போன்றவற்றிற்கும் அடைக்கலம் கொடுக்கப்படுகிறது.
கொரோனா ஏற்படுத்திய தாக்கங்கள்
சுதேவிக்கு அவரது பெற்றோரிடமிருந்து கிடைத்த தொகையைக் கொண்டே ஆரம்பத்தில் செலவுகளை நிர்வகித்து வந்தார். சமீபத்திய காலம் வரை கோசாலையின் செலவுகள் நன்கொடைகள் மூலம் பெறப்படும் தொகையைக் கொண்டே நிர்வகிக்கப்பட்டு வந்தது.
ஆனால், கொரோனா பெருந்தொற்று பரவலுக்குப் பின்னர் மாடுகளுக்கு உணவளிப்பது சிரமமாகியுள்ளது. இருப்பினும் கூட்டுநிதி மூலம் சுதேவி சமாளித்து வந்துள்ளார்.
பெருந்தொற்று சமயத்தில் கோசாலாவிற்குத் தேவையான பொருட்களை வாங்க Donatekart என்கிற பிரபல கூட்டுநிதி தளம் 1.55 கோடி ரூபாய் வரை நிதி உயர்த்த உதவியுள்ளது. உணவு, மருந்து போன்றவற்றை வாங்குவதற்கு நன்கொடைத் தொகை பெருமளவு உதவியதாக தெரிவிக்கிறார் சுதேவி.
”Donatekart ஏற்கெனவே 50 கோசாலைக்கு உதவியுள்ளது. இருந்தாலும் சுதேவிஜி அவர்களுக்கான பிரச்சாரம் தனித்துவமானது. பசுக்கள் மீது அவர் அளவுகடந்த அன்பு காட்டுகிறார். கிட்டத்தட்ட 10,000-க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள் 1.5 கோடி ரூபாய் வரை கொடுத்து உதவியுள்ளார்கள்,” என்கிறார் Donatekart சிஇஓ மற்றும் இணை நிறுவனர் அனில் குமார் ரெட்டி.
மாடுகள் மூலம் வருவாய் ஈட்டலாம் என்கிற நிலை இருந்தால் மட்டுமே இந்த விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. அவற்றால் லாபம் கிடைக்கவில்லை எனில் அவை புறக்கணிக்கப்படுகின்றன. இந்த மனநிலை மாறவேண்டும் என்கிறார் சுதேவி. வரும் நாட்களில் மேலும் பல விலங்குகளை மீட்க விரும்புவதால் அதிக இடவசதி தேவை என்கிறார்.
”இடப்பற்றாக்குறை நாங்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. நாங்கள் இடம் வாங்க முயற்சி செய்து வருகிறோம். அரசாங்கத்தின் தரப்பிலும் உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும்,” என்கிறார் சுதேவி.
ஆங்கில கட்டுரையாளர்: அஞ்சு அன் மேத்யூ | தமிழில்: ஸ்ரீவித்யா