சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி’க்கு ’பத்ம விபூஷன்’ விருது!
முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்ளிட்டோருக்கு அவர்கள் மறைவுக்கு பிறகு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், ஜார்ஜ் பெர்னாண்டஸ், ஒலிம்பிக் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் மொருஷியஸ் முன்னாள் பிரதமர் அனிரூத் ஜெகனாத் உள்ளிட்டோர் பத்ம விபூஷன் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புகழ் பெற்ற சாஸ்திரிய பஜன் பாடகர் சன்னுலால் மிஸ்ரா, அண்மையில் சமாதி அடைந்த உடுப்பியின் ஸ்ரீ பெஜாவர் அதோகஜ மடத்தின் விஸ்வேஷதீர்த்த ஸ்வாமிஜி ஆகியோரும் பத்ம விபூஷன் பெறுகின்றனர்.
முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கர், தொழிலதிபர்கள் ஆனந்த் மகிந்திரா, வேணு ஸ்ரீனிவாசன, ஒலிம்பிக் பாட்மிண்டன் வீராங்கனை சிந்து, முன்னாள் நாகாலாந்து முதல்வர் எஸ்.சி.ஜமீர், ஜம்மூ காஷ்மீர் அரசியல் தலைவர் முஜாபர் உசைன் பைக் ஆகியோர் பத்ம பூஷன் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குடியரசு தினத்தன்று இதற்கான அறிவிப்பு வெளியானது.
அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், ஜார்ஜ் பெர்னாண்டஸ், மனோகர் பரிக்கர் மற்றும் வீஸ்வேஷ தீர்த்த ஸ்வாமி ஆகியோருக்கு அவர்கள் மறைவுக்கு பிறகு விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு குடியரசுத்தலைவர் 141 பத்ம விருதுகளுக்கு அனுமதி அளித்துள்ளார்.
"34 பெண்கள் பத்ம விருதுகள் பெறுகின்றனர். விருது பெறுபவர்கள் பட்டியலில் வெளிநாட்டினர்/NRI/PIO/OCI பிரிவைச்சேர்ந்த 18 பேர் மற்றும் மறைந்த பிறகு விருது பெறும் 12 பேர் இடம் பெற்றுள்ளனர்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளை கொண்டது. 16 பேருக்கு பத்ம பூஷன் விருதும், 118 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்படுகிறது.
பத்ம விபூஷன், அசாதரணமான, நிகரில்லாத சேவை ஆற்றியவர்களுக்காக வழங்கப்படுகிறது. பத்ம பூஷன் சிறந்த சேவை ஆற்றுபவர்களுக்கும், பத்ம ஸ்ரீ எந்த துறையிலும் சிறப்பாக செயல்படுபவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.
”பத்ம விருது பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் இருந்து இயக்குனர்கள் கரன் ஜோகர், ஏக்தா கபூர், நடிகை கங்கனா ராவத் பத்ம ஸ்ரீ விருது பெறுகின்றனர்.
பாடகர்கள் சுரேஷ் வாத்கர், அத்னன் சாமி, மூத்த டிவி நடிகை சரிதா ஜோஷி, ஆகியோரும் இவ்விருது பெறுகின்றனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான், இந்திய பெண்கள் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், முன்னாள் ஹாக்கி வீரர் எம்.பி.கணேஷ், துப்பாக்கி சுடும் வீரர் ஜித்து ராய், முன்னாள் பெண்கள் கால்பந்து அணி கேப்டன் பெம்பம் தேவி மற்றும் வில்வித்த வீரர் தரூந்தீப் ராய் ஆகிய விளையாட்டு துறையினருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.
Naukri.com நிறுவனர் சஞ்சீவ் பிக்சந்தானி, தொழிலதிபர் பார்த் கோயங்கா, தொழில்நுட்ப வல்லுனர் நேம்நாட்ன் ஜெயின் ஆகியோரும் பத்ம ஸ்ரீ பெறுகின்றனர். வரலாற்று ஆசிரியர், பத்திரிகையாளர் யோகேஷ் பிரவீன், வரலாற்று ஆசிரியர் ஜோகேந்திர நாத் புக்கன் ஆகியோரும் பத்ம ஸ்ரீ பெறுகின்றனர்.
சண்டிகரில் உள்ள மருத்துவமனை நோயாளிகள், பார்வையாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் ஜெகதீஷ் லால் அகுஜா, 25,000 க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத சடலங்களுக்கு இறுதி சடங்கு செய்த முகமது ஷெரிப், யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் குஷால் கோன்வர் உள்ளிட்ட அதிகம் அறியப்படாத 21 சேவையாளர்களுக்கும் விருது வழங்கப்படுகிறது.
காடுகளின் களஞ்சியம் என போற்றப்படும் கர்நாடகாவின் துளசி கவுடாவுக்கும் பத்ம ஸ்ரீ வழங்கப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் கல்வி சேவை ஆற்றி வரும் சத்யநாராயணன் முண்டயார், போபால் விஷ வாய் விபத்தில் பாதிக்கப்பட்டுவர்களுக்காக போராடி வரும் அப்துல் ஜபார் மற்றும் தலீத் சமூக சேவையாளர் உஷா சவுமார் உள்ளிட்டோரும் பத்ம ஸ்ரீ பெறுகின்றனர்.
செய்தி: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்