‘Paytm வருவாய் அடுத்த காலாண்டுகளில் அதிகரிக்கும்’ - விஜய் சேகர் ஷர்மா நம்பிக்கை!
இரண்டாம் காலாண்டில் நஷ்டத்தில் பேடிஎம்!
ஆன்லைன் பேமெண்ட் நிறுவனமான பேடிஎம் தளத்தின் வருவாய் அடுத்த சில காலாண்டுகளில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேடிஎம் தலைமை நிர்வாக அதிகாரியான விஜய் சேகர் ஷர்மா,
"அடுத்த சில காலாண்டுகளில், வருவாயை விரிவுபடுத்துவது மட்டுமின்றி, அதிக எண்ணிக்கையிலான பணமாக்குதல் முறைகளை அதிகரிக்கவும், பின்னர் உரிய நேரத்தில் பங்களிப்பு வரம்புகளை அதிகரிக்கவும் முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் முன் உள்ள வாய்ப்புகளை நினைத்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் சிறந்த முடிவுகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் வழங்குவதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்," என்று வருவாய் தொடர்பாக பேசியுள்ளார்.
முன்னதாக, பேடிஎம் நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டுக்கான நிதி நிலை அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் பேடிஎம் நஷ்டத்தை சந்தித்தது தெரியவந்துள்ளது.
செப்டம்பர் 30, 2021 உடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், செயலாக்கக் கட்டணங்கள் அதிகரித்ததன் காரணமாக பேடிஎம் நிறுவனம் சந்தித்த ஒருங்கிணைந்த இழப்பு சுமார் ரூ.473 கோடியாக அதிகரித்துள்ளது. அதேநேரம், ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலாண்டில் பேடிஎம் ரூ.436.7 கோடி நஷ்டம் அடைந்ததாக ஒரு எக்ஸ்சேஞ்ச் ஃபைலிங் தெரிவிக்கிறது.
பேடிஎம்-ன் ஒருங்கிணைந்த மொத்த வருமானம் 2020-21ஆம் ஆண்டின் இதே காலாண்டில் ரூ.663.9 கோடியிலிருந்து 64 சதவீதம் அதிகரித்து ரூ.1,086.4 கோடியாக உள்ளது. இது தொடர்பாக பேசிய விஜய் சேகர் ஷர்மா,
"எங்கள் வருவாய்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன. யு.பி.ஐ. அல்லாத பண பரிவர்த்தனை சேவை ஆகியவை அடுத்த கட்ட பணமாக்குதலைத் தருகின்றன," என்று பேசியுள்ளார்.
பேடிஎம் குழுமத்தின் CFO மதுர் தியோரா பேசுகையில், "தொழில்நுட்பம் தலைமையிலான நிதிச் சேவைகள் மூலம் அரை பில்லியன் இந்தியர்களை பிரதான பொருளாதாரத்திற்கு கொண்டு வருவதே எங்கள் நிறுவனத்தின் நோக்கம்," என்று தெரிவித்துள்ளார்.
பேடிஎம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"பெரிய வணிகர்கள் இப்போது பெரிய அளவு எங்களின் தளத்திற்கு மாறுவதைக் காண்கிறோம். இதன் காரணமாக, நடுத்தர அளவிலான சந்தை கைப்பற்றுவதற்கான ஒரு பெரிய வாய்ப்பை இப்போது காண்கிறோம்," என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே, பேடிஎம் நிறுவனம் மிந்த்ரா, ஓயோ, டோமினோஸ் போன்ற வணிக நிறுவங்களுடன் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் உண்மையான விவரங்களைச் சேமிக்காமல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ’பேடிஎம் டோக்கன் கேட்வே' சேவைக்காக கூட்டணி அமைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில்: மலையரசு