கர்நாடகா தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வாக ஆறுகளைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்ட நபர்!
ஹெச்எம்டி நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான நாகராஜ் கங்கோலி ஆறுகளை புதுப்பிப்பதுடன் சிறைக்கைதிகளை சீர்திருத்தும் பணியிலும் ஈடுபட்டு பலருக்கு வேலை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோடைக்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. பெங்களூருவில் மக்கள்தொகை அதிகரித்து வருவதாலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதாலும் அடுத்த சில ஆண்டுகளில் பெங்களூரு மனிதர்கள் வாழத்தகுதியில்லாத பகுதியாக மாறிவிடும் என இந்திய அறிவியல் நிறுவனத்தின் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
ஹெச்எம்டி நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான நாகராஜ் கங்கோலி இந்தப் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்தார். கர்நாடகாவில் உள்ள ஆறுகளை புதுப்பிப்பதற்கான தீர்வை முன்வைத்துள்ளார்.
நாகராஜின் சொந்த ஊரான லக்ஷ்மிபுரா என்கிற கிராமத்தில் உள்ள சுமார் 100 விவசாய குடும்பங்களுக்கு நிலத்தடிநீர் கிடைக்க உதவியுள்ளார். அத்துடன் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண புதுமையான தீர்வு ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.
மிகச்சிறிய கிளை ஆறு மற்றும் அவை சங்கமிக்கும் ஆறுகளைச் சென்றடையும் வகையில் மைக்ரோ ஆற்றுப்பள்ளத்தாக்குகளை உருவாக்கப்படும் என்றும் அது நிரம்பியதும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் நீரோட்டத்தைக் கொண்டிருக்கும் பருவகால ஆறுகளுக்கு அந்தத் தண்ணீர் விநியோகிக்கப்படும் என்றும் நாகராஜ் குறிப்பிட்டார். நாகராஜ் இந்தத் தீர்வைக் கண்டறிந்த பிறகு ’தி ஆர்ட் ஆஃப் லிவிங்’ ஆறு மீட்டெடுக்கும் திட்டத்தின்கீழ் வேதவதி ஆறு திட்டத்தில் பணியாற்றினார்.
இந்தத் திட்டம் இரண்டாண்டுகளில் வெற்றி பெற்றது. ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்ட 6 கோடி ரூபாய்க்கு பதிலாக வெறும் 3 கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக நாகராஜ் தெரிவிக்கிறார்.
2005, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தைப் பயன்படுத்தி நாகராஜ் இந்தத் திட்டங்களுக்கான நிதிப்பிரச்சனையை கையாண்டார். இதன் மூலம் இந்த திட்டங்களின் கட்டமைப்புகளுக்கு அரசாங்கம் நிதியுதவு அளித்தது. அதேபோல் இந்தத் திட்டங்களில் பணியாற்றிய உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
"ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செயல்திட்டத்தை உருவாக்க உள்ளூர் அரசாங்கங்களுடன் நாங்கள் பணியாற்றுகிறோம். பின்னர் மாவட்ட அல்லது தாலுகா ஒருங்கிணைப்பாளர் மற்றும் பஞ்சாயத்து அல்லது கிராம ஒருங்கிணைப்பாளர்கள் அடங்கிய குழுவை உருவாக்குகிறோம். செயல்படுத்தும் முறையில் அவர்களுக்கு பயிற்சியளிக்கிறோம். மக்களை ஒன்று திரட்டி திறன் மேம்பாட்டை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை கிராம ஒருங்கிணைப்பாளருக்குக் கற்றுக்கொடுக்கிறோம்,” என ’தி இந்து’ இடம் தெரிவித்தார்.
489 கிராமங்களையும் 49,000-க்கும் அதிகமானோர் அடங்கிய மக்கள்தொகையையும் சென்றடைந்து திட்டத்தின் முதல்கட்டம் நிறைவுசெய்யப்பட்டது. 1,097 கிராமங்களையும் 24 கிராம பஞ்சாயத்துகளையும் சென்றடைந்து இரண்டாம் கட்ட செயல்பாடுகளை 2019 ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய நாகராஜ் திட்டமிட்டுள்ளார்.
தற்போது நாகராஜ் பெங்களூருவில் உள்ள ’தி ஆர்ட் ஆஃப் லிவிங்’ மையத்தின் முழுநேர ஆலோசகராக பணியாற்றுகிறார். சிறைக்கைதிகள் பலரின் வாழ்க்கையில் மாற்றத்தையும் ஏற்படுத்துவதற்கும் கிராமப்புறம் மற்றும் குடிசைப்பகுதிகளைச் சேர்ந்த வேலை வாய்ப்பு கிடைக்காத நபர்களை தனது திட்டத்தில் நியமித்துக்கொள்வதற்கும் பொறுப்பேற்றுள்ளார்.
முன்பு சங்கிலி பறிப்பு, திருட்டு போன்றவற்றில் ஈடுபட்டு போலீஸாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளியான ஏவி பிரவீன் இன்று திருந்தி மரியாதையுடன் வாழ்க்கையை நடத்தி வருகிறார். நாகராஜின் கீழ் வேதவதி திட்டத்தில் முக்கிய ஒருங்கிணைப்பாளராக இவர் பணியாற்றியுள்ளார். இவரது நடத்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் கண்ட காவல் அதிகாரிகள் இவரை வெகுவாகப் பாராட்டியுள்ளதாக ’தி லாஜிக்கல் இண்டியன்’ தெரிவிக்கிறது.
கட்டுரை: THINK CHANGE INDIA