5 அமெரிக்க சிஇஓ-க்களை சந்தித்த பிரதமர்: யார் அவர்கள்? என்ன விவாதிக்கப்பட்டது?
இந்திய வம்சாவளி சிஇஓக்கள் இருவர் சந்திப்பில் இடம்பிடிப்பு!
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் உச்ச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மூன்று நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு வசிக்கும் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பைக் கொடுத்தனர்.
இதனிடையே, இந்த சந்திப்பின்போது உலகளாவிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் மோடி உரையாட உள்ளார். இந்த சந்திப்பின் போது இந்தியாவில் பொருளாதார வாய்ப்புகளை முன்னிலைப்படுத்த போவதாக ஏற்கனவே பிரதமர் மோடி கூறி இருந்தார். அதன்படி, ஐந்து தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
குவால்காம் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டியானோ அமோன்!
குவால்காம் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டியானோ அமோனுடனான அவரது சந்திப்பில், லட்சியத் திட்டங்களுக்கான அளவு இந்தியாவிடம் உள்ளது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இதேபோல்,
5G, PM WANI மற்றும் பிறவற்றை உள்ளடக்கிய லட்சிய டிஜிட்டல் உருமாற்றத் திட்டங்களில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற பிரதமர் மோடியிடம் குவால்காம் சிஇஓ அமோன் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.
மேலும், செமிகண்டக்டர் துறையில் துறையில் பணியாற்ற இந்தியாவுடன் கூட்டுசேர்வதற்கும் அவர் விருப்பம் தெரிவித்தார். முன்னதாக அமோனிடம், இந்தியாவின் புதிய ட்ரோன் கொள்கை குறித்தும் விவாதித்தர பிரதமர் மோடி குவால்காம் இந்திய திறமைகளை நம்பி, உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தின் நன்மையுடன் உற்பத்தியைத் தொடங்குமாறு கேட்டுக் கொண்டார்.
குவால்காம் என்பது ஒரு அமெரிக்க பன்னாட்டு நிறுவனமாகும். இது செமிகண்டக்டர், மென்பொருள் மற்றும் வயர்லெஸ் தொழில்நுட்பம் தொடர்பான சேவைகளை உருவாக்குகிறது. இந்நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உட்பட இந்தியாவில் ஒரு பெரிய இருப்பைக் கொண்டுள்ளது. கிறிஸ்டியானோ அமோன், குவால்காம் இன்கார்பரேட்டட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.
மேலும், நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவிலும் பணியாற்றுகிறார். அவர் இந்த ஆண்டு ஜூன் 30 அன்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்பதற்கு முன், குவால்காமின் 5 ஜி வியூகத்தை முன்னெடுப்பதிலும், அதன் முடக்கம் மற்றும் உலகளாவிய வெளியீட்டில் அமோன் முக்கியப் பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடோப் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தனு நாராயண்!
இந்திய அமெரிக்கரான சாந்தனு நாராயண் உலகின் மிகப்பெரிய மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான அடோப்பின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். 1998ல் பொறியியல் தொழில்நுட்பக் குழுவின் துணைத் தலைவர் மற்றும் பொது மேலாளராக நிறுவனத்தில் சேர்ந்தார். இறுதியில், அவர் 2005 இல் சிஓஓவாகவும், 2007 இல் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், 2017 இல் வாரியத்தின் தலைவராகவும் ஆனார்.
பிரதமர் மோடி ஆலோசனை நடத்திய இரண்டாவது சிஇஓ இவர். பிரதமர் மோடியுடனான தனது கலந்துரையாடலில், சாந்தனு கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கும் குறிப்பாக விரைவான தடுப்பூசித் திட்டங்களுக்கும் இந்தியாவின் முயற்சிகளைப் பாராட்டியவர், இந்தியாவின் 75வது சுதந்திர தின விழாவில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் வீடியோ, அனிமேஷன் கொண்டு வர வேண்டும் என்ற தங்கள் நிறுவனத்தின் விருப்பத்தை பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தார் சாந்தனு நாராயண்.
இந்தியாவில் அடோப் நிறுவனத்தின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் எதிர்கால முதலீட்டுத் திட்டங்கள் குறித்தும் இருவரும் சந்திப்பில் விவாதித்தனர். கூடுதலாக, இந்தியாவின் முதன்மைத் திட்டமான டிஜிட்டல் இந்தியா, மற்றும் சுகாதாரம், கல்வி மற்றும் ஆர் & டி போன்ற துறைகளில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துவது தொடர்பாக இருவரும் விவாதித்தனர்.
பர்ஸ்ட் சோலார் (First Solar) சிஇஓ மார்க் விட்மர்!
First Solar வெற்றிகரமாக 150 மெகாவாட் பயன்பாட்டு-அளவிலான சூரிய மின்சக்தியை இந்தியாவில் கட்டமைத்து 1.8 ஜிகாவாட் சோலார் திறனை நிறுவியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்தியாவில் ஒரு புதிய 3.3 GW வசதியை நிறுவுவதற்கான விருப்பத்தை First Solar வெளிப்படுத்தியிருந்தது. இப்படியான நிலையில் தான் மார்க் விட்மர் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் மோடியுடனான சந்திப்பில்,
“PLI திட்டத்தைப் பயன்படுத்தி தனித்துவமான மெல்லிய-பட தொழில்நுட்பத்துடன் சூரிய மின்சக்தி உபகரணங்களை உற்பத்தி செய்வதற்கான திட்டங்களையும், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் இந்தியாவை ஒருங்கிணைத்தல்," தொடர்பாகவும் மார்க் விட்மர் ஆலோசித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, விட்மரிடம் சூரிய சக்தியைப் பயன்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகளை மோடி விரிவாக விவரித்தார் என்று பிரதமர் அலுவலகம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது. இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலப்பரப்பு, குறிப்பாக சூரிய ஆற்றல் திறன் மற்றும் 2030க்குள் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து 450 GW மின் உற்பத்தி பற்றிய இந்தியாவின் இலக்கு பற்றி பிரதமர் மோடி ஆலோசித்தார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஜெனரல் அடோமிக்ஸ் சிஇஓ விவேக் லால்!
ஐவரும் ஒரு இந்திய அமெரிக்கர். ஜூன் 2020ல் ஜெனரல் அடோமிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியானார். மே 2018ல், வாஷிங்டன் டிசியில் உள்ள அமெரிக்க கேபினட் செயலாளர் போக்குவரத்து துறை (ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் போன்ற நிறுவனங்களை உள்ளடக்கிய) அமெரிக்க கேபினட் செயலாளருக்கு இரண்டு வருட காலத்திற்கு ஒரு முக்கிய ஆலோசகராக அமெரிக்க அரசால் நியமிக்கப்பட்டு பதவியை வகித்த பெருமைக்குரியவர்.
இதனிடையே, நேற்றைய சந்திப்பில், பிரதமர் மோடியும், லாலும் ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முன்னேற்றங்கள் மற்றும் பிஎல்ஐ திட்டம் குறித்து விவாதித்ததாக பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
“இந்தியாவில் பாதுகாப்புத் தொழில்நுட்பத் துறையை வலுப்படுத்துவது பற்றி இருவரும் ஆலோசித்தார்கள். சந்திப்பின்போது இந்தியாவில் பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப உற்பத்தி மற்றும் மேம்பாட்டு திறன் மேம்பாட்டுக்கான சமீபத்திய கொள்கை மாற்றங்களை லால் பாராட்டினார்," என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018ல் இந்தியாவில் தனது முதல் அலுவலகத்தைத் திறந்த ஜெனரல் அடோமிக்ஸ் இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்த குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்து வருகிறது. தேசிய பாதுகாப்புக்கு ஆதரவளிக்கும் சமீபத்திய அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்கும் முயற்சியில் இது இரு அரசாங்கங்களுடனும் இணைந்து செயல்படுகிறது. இந்திய அணுசக்தி மற்றும் திறன் மேம்பாட்டுக்கான தீர்வுகளை உருவாக்க ஜெனரல் அடோமிக்ஸ் இந்திய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிளாக்ஸ்டோன் சிஇஓ ஸ்டீபன் எ ஸ்வார்ஸ்மேன்!
684 பில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்ட உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனங்களில் ஒன்று இந்த பிளாக்ஸ்டோன் நிறுவனம். இதன் சிஇஓ மற்றும் இணை நிறுவனர் தான் ஸ்டீபன் ஸ்வார்ஸ்மேன். 1985ல் நிறுவப்பட்ட பிளாக்ஸ்டோனின் வளர்ச்சியின் அனைத்து கட்டங்களிலும் பங்களித்த நபர் ஸ்வார்ஸ்மேன்.
இதனிடையே, நேற்றைய பிரதமர் மோடியுடனான உரையாடலில் நியூயார்க்கை அடிப்படையாகக் கொண்ட தங்கள் நிறுவனத்தின் சார்பாக இந்தியாவில் நடந்து வரும் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் மேலும் முதலீடு செய்வதில் உள்ள ஆர்வம் பற்றி மோடிக்கு விளக்கினார்.
பிளாக்ஸ்டோன், இந்தியாவில் 2006ல் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது மற்றும் இதுவரை தனியார் பங்கு, ரியல் எஸ்டேட், கல்வி, ஃபேஷன், பேக்கேஜிங் மற்றும் வீட்டுவசதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுமார் $ 15 பில்லியன் அளவுக்கு முதலீடும் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி: பிடிஐ | தமிழில்: மலையரசு