'மிகப் பெரிய திட்டம் கொண்டு வர இருக்கிறோம்' - சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி!
ஒலிம்பிக் வீரர்களை கௌரவப்படுத்திய மத்திய அரசு!
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
"நாட்டு மக்களுக்கு எனது சுதந்திர தின வாழ்த்துகள். இந்தத் தருணத்தில் நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுத் தந்த போராட்டத் தியாகிகள் அனைவரையும் நினைவுகூறுகிறேன். 75வது சுதந்திரதினம் கொண்டாடும் இந்த தருணத்தில் கொரோனா காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், தடுப்பூசி தயாரித்தவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார்.
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலகிலேயே நம் நாடுதான் முதலிடத்தில் உள்ளது. தடுப்பூசியை இந்தியாவிலேயே உருவாக்கியதால்தான் இது சாத்தியப்பட்டது. மேலும் மக்களுக்கு எளிதாக தடுப்பூசி கிடைக்கிறது.
உலகின் மற்ற முன்னணி நாடுகளில் எப்போது கொரோனா தடுப்பூசி கிடைக்க தொடங்கியதோ, அப்போதே இந்தியாவிலும் கிடைத்துவிட்டது. இன்றைய சுதந்திர தின விழாவில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு நாட்டின் பெருமையை உலகறியச் செய்த ஒலிம்பிக் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியா புதிய வரலாற்றை படைத்தது மிகப்பெரிய விஷயம், என்று அவர்களை பாராட்டிய பிரதமர் மோடி,
“எங்கள் ஆட்சியில் மின் இணைப்பு, ஓய்வூதியம், கேஸ் இணைப்பு கடைக்கோடி மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறோம். கடந்த இரண்டு வருடத்தில் 4 கோடி மக்களுக்கு சுத்தமான நீர் கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்துள்ளது. அனைத்து கிராமங்களிலும் சாலைகள், அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்பதே நமது நோக்கம். அதனை திறம்பட செய்துள்ளோம். அரசின் திட்டங்கள் ஒரு சிலரை சென்று சேராமல் போகும் அவல நிலை இப்போது நமது நாட்டில் இல்லை. ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுகாதாரம், ஆரோக்கியம் கொடுப்பது அரசின் முக்கியப் பணியாகும்.
ஒவ்வொரு கிராமங்களிலும் டிஜிட்டல் இந்தியாவின் தாக்கம் எதிரொலித்துள்ளது. நமது நாட்டிலும், வெளிநாட்டிலும் மிகப்பெரிய சந்தையை உருவாக்க டிஜிட்டல் இந்தியா உதவி வருகிறது. இன்னும் சிறிது காலத்துக்குள் மிகப்பெரிய திட்டம் ஒன்றினை நாட்டு மக்களுக்கு கொண்டுவர இருக்கிறோம். நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக உள்ள தடைக்கற்களை உடைத்து செல்லும் வகையில் அந்தத் திட்டம் இருக்கும். நாட்டின் வளர்ச்சியை வேகமடையச் செய்ய ’கதிசக்தி' திட்டம் கொண்டுவரப்பட இருக்கிறது.
நாட்டின் பெருமையின் சின்னமாக சிறு விவசாயிகள் மாற வேண்டும். 110 பின்தங்கிய மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிக்கு தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. புதிய கல்விக்கொள்கை அவசிய தேவை. நாட்டின் வளர்ச்சியில் இளைஞர் சமுதாயம் ஈடுபாடு காட்ட புதிய கல்விக்கொள்கை தேவைப்படுகிறது.
”தற்போது நம் நாட்டில் மொழிகள் தொடர்பாக தேவையற்ற விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஒருவர் தன் தாய்மொழியில் படிக்கும்போது மட்டுமே அவர்களுக்குத் தேவையான நியாயம் கிடைக்கும், என்று பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார் பிரதமர் மோடி.
முன்னதாக, சுதந்திர தின விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர். இது தவிர அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், அதிகாரிகள், வெளிநாட்டுத் தூதர்கள் உள்ளிட்டோர்களும் விழாவில் பங்கேற்றுள்ளனர்.
பிரதமர் தேசியக்கொடியை ஏற்றும்போது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது. நாடு முழுவதும் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. இதனைப்யடுத்து நாடு முழுவதும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பாதுகாப்பும் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.