'கட்சி தொடங்கவில்லை; மன்னியுங்கள்’ – அரசியலில் இருந்து விலகினார் நடிகர் ரஜினி!
தான் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்திருந்த நடிகர் ரஜினிகாந்த், வரும் 31ம் தேதி கட்சி மற்றும் விவரங்களை அறிவிக்க உள்ளார் என்றிருந்த நிலையில், தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியலுக்கு ரஜினி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஜினி. அப்போது, விரைவில் கட்சி தொடங்கி, மக்களை சந்தித்து தேர்தலை சந்திப்போம் என்று கூறியிருந்தார்.
இம்மாத இறுதியில் ரஜினி கட்சி அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே ‘அண்ணாத்த’ படபிடிப்புக்காக ஹைதராபாத் சென்றிருந்தார் ரஜினி. அங்கு படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட, தற்காலிகமாக படத்தின் ஷூட்டிங் ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைப்பெற்று வந்தவர், நேற்று சென்னை திரும்பினார். இந்நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். அதில்,
"கட்சி தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை,” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
''மருத்துவர்களின் அறிவுரையும் மீறி அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஹைதராபாத் சென்றேன். கிட்டத்தட்ட 120 பேர் கொண்ட படக்குழுவினருக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்து ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி முகக்கவசம் அணிவித்து மிகவும் ஜாக்கிரதையாக படப்பிடிப்பை நடத்தி வந்தோம். ஆனாலும் 4 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.
உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்தனர். எனக்கு கொரோனா நெகட்டிவ் வந்தது. ஆனால் ரத்தக் கொதிப்பில் ஏற்றத்தாழ்வு இருந்தது. அப்படி இருந்தால் என்னுடைய மாற்று சிறுநீரகத்தை கடுமையாக பாதிக்கும். ஆகையால் 3 நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க நேரிட்டது. படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. பல கோடி ரூபாய் நஷ்டம். இவை அனைத்துக்கும் காரணம் என்னுடைய உடல்நிலை.
“இதை ஆண்டவன் எனக்குக் கொடுத்த ஒரு எச்சரிக்கையாத்தான் பார்க்கிறேன். ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி என்னக்கு மட்டும் தான் தெரியும்,” என தெரிவித்துள்ளார்.
இதன்படி தான் அரசியலுக்கு வரப்போவதில்லை, கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று ரஜினி தெளிவுப்பட கூறியுள்ளார்.