சீரான தேர்தல் பிரச்சாரங்கள் நடக்க தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சில கட்டுப்பாடுகள்..!
இந்திய தேர்தல் பிரச்சாரம் களைக்கட்டத் தொடங்கிவிட்ட நேரத்தில், சமூக வலைதளங்கள் மூலம் வெளிவரும் தேர்தல் விளம்பரங்கள் மற்றும் பிரச்சாரங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவது தேர்தல் பிரச்சாரம் திருவிழா போல் களைக்கட்டியுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் பிரச்சாரம் தீவிரமாக நடந்து கொண்டு வருகிறது. எங்கு பார்த்தாலும் கட்சிகளின் படமும் அவர்கள் வாக்குறுதிகளும் வந்து போகின்றன. இந்த பிரச்சாரத்தை சீர் செய்ய தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள சில கட்டுப்பாடுகள் இதோ...
கட்சி கொடி கம்பங்கள் அகற்றம்:
பிரசாரத்திற்காக, கட்சிகளின் கொடி மற்றும் சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைக்கும் நோக்கில் பல கட்சிகள் பூங்கா, சாலை ஓர நடைப்பாதை, விளையாட்டுதிடல் போன்ற பொது இடங்களில் அவர்களின் கொடி கம்பங்களை நட்டு வைத்துள்ளனர். ஆனால் இக்கம்பங்கள் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்று சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழகம் முழுவதும் பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் அனுமதியற்ற கொடி கம்பங்களை ஏப்ரல் 1க்குள் அகற்ற உத்தரவிட்டுள்ளது. இதனால் தேர்தல் ஆணையமும் பொதுஇடங்களில் உள்ள கம்பங்கள் மற்றும் போர்டுகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது. இதுவரை 58,172 கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகணிப்புக்குத் தடை:
இந்த நாடாளுமன்ற தேர்தல் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டிய நிலையில் பல கருத்து கணிப்புகள் வெளியில் வந்த வண்ணம் உள்ளன. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலின் கருத்துக்கணிப்புகளை ஏப்ரல் 9 முதல் மே 19 வரை தடை செய்துள்ளது தேர்தல் ஆணையம்.
தமிழகத்தில் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் ஜெயிக்கப்போவது யார் என்பது போன்ற பல கருத்துகள் வெளிவருகிறது. இது போன்ற கருத்துக் கணிப்பால் தேவையற்ற குழப்பம் ஏற்படும் என இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 11 -ம் தேதி தேர்தல் துவங்குகிறது, இதற்கு 2 நாட்களுக்கு முன், 9-ம் தேதி பிரச்சாரம் நிறைவடைகிறது. அப்பொழுது இருந்து தேர்தல் முடிவு வரும்வரை கருத்துக்கணிப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதள பிரசாரத்திற்கு கட்டுப்பாடு:
இப்பொழுது சமூக வலைத்தளத்தில் பங்கேற்காத நிகழ்வுகளே இல்லை, அதுவும் அரசியல் கட்சிகள் பல சமூக வலைதளத்தில் மாறி மாறி கருத்துக்களை பதிவு செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தை சமூக வலைதளத்திற்கு கொண்டு வராமல் இருக்க முடியுமா? அதனாலே சில கட்டுப்பாடுகளை சமூக வலைதள பிரச்சாரங்களுக்கு தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
- சமூக வலைதளத்தில் போடப்படும் அனைத்து விளம்பரங்களும் முன் பரிசீலனை செய்யப்பட்ட பிறகே வெளியிடப்பட வேண்டும்.
- வேட்பாளர்கள் அவர்களின் அனைத்து சமூக வலைதள தகவல்களையும் தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்க வேண்டும்
- சமூக வலைதள விளம்பர பிரச்சாரமும் பிரச்சார செலவில் அடங்கும்
- கூகிள், ஃபேஸ்புக், யூ டியூப் மற்றும் ட்விட்டர் எல்லா அரசியல் விளம்பரங்களும் முன் பரிசீலனைக்கு உட்படும்.
- சமூகவளைதலத்திலும் தேர்தலுக்கு 4 மணி நேரம் முன்பு பிரச்சாரங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
இவை அனைத்தும் தேர்தல் ஆணையம் விதித்துள்ள சில கட்டுப்பாடுகள்.
தமிழ் கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்