பேங்க் ஆஃப் பரோடாவின் உலகளாவிய விளம்பரத் தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமனம்!
“சச்சின் ஒரு உலகளாவிய ஆளுமையாக இருக்கிறார், அவர் எப்போதும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார். களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தனது செயல்களின் மூலம் நம்மை உத்வேகப்படுத்துகிறார் சச்சின்.
நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் பரோடா வங்கி தங்கள் பிராண்டை விளம்பரப்படுத்த உலகளாவிய விளம்பரத் தூதராக லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை நியமித்துள்ளது.
இது தொடர்பாக பேங்க் ஆஃப் பரோடா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பேங்க் ஆஃப் பரோடா தனது மாற்றத்தின் அடுத்தக் கட்டம் நோக்கி நகர்வதால் சச்சின் என்னும் பிராண்ட் ஒளிவட்டத்தின் பாதையில் அடுத்தக் கட்ட வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கின்றது. இதன் முதற்கட்டமாக ‘மாஸ்டர் ஸ்ட்ரோக் விளையாடுங்கள்’ என்ற வாசகத்துடனான தலைப்பில் சச்சின் இடம்பெறும் விளம்பரங்கள் வரவிருக்கின்றன,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேங்க் ஆஃப் பரோடாவின் நிர்வாக இயக்குநரும் செயல் தலைவருமான தேவதத்தா சந்த் கூறும்போது,
சச்சின் ஒரு உலகளாவிய ஆளுமையாக இருக்கிறார், அவர் எப்போதும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார். களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தனது செயல்களின் மூலம் நம்மை உத்வேகப்படுத்துகிறார் சச்சின்.
தனது அபாரமான கிரிக்கெட் வாழ்க்கையின் மூலம் நாட்டையே மேம்படுத்தியது போல் பாங்க் ஆஃப் பரோடா நாடு முழுவதும் உள்ள லட்சக் கணக்கானவர்களுக்கு நம்பகமான கூட்டுறுவுடன் அவர்கள் தங்கள் நிதி ஆசைகளை எட்டி மேம்பாடு அடைய உதவுகிறது, என்றார்.
குறிப்பாக பிரீமியம் சேவைகளை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட சேமிப்பு வங்கிக் கணக்கான ‘பாப் மாஸ்டர்ஸ்ட்ரோக் சேமிப்புக் கணக்கு’ அறிமுகம் செய்வதையும் வங்கி அறிவித்துள்ளது.
இந்த புதிய விளம்பரத்தூதர் பதவி குறித்து சச்சின் டெண்டுல்கர் தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் போது,
“பேங்க் ஆஃப் பரோடா நிறுவனத்துடன் கூட்டாளியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் தன் சாதாரண தொடக்கத்திலிருந்து, பேங்க் ஆஃப் பரோடா ஒரு முன்னணி வங்கி நிறுவனமாக வளர்ந்துள்ளது, இதற்குக் காரணம் அதன் நேர்மை, சிறப்பான செயல்பாடு மற்றும் புதுமை புகுத்தல்கள்தான்,” என்றார்.