‘என் வாழ்க்கைக் கதையை ரசிகர்களிடம் பகிர்வது உற்சாகம் அளிக்கிறது’ - சானியா மிர்சா
டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா தனது வாழ்க்கைக் கதையை திரைப்படம் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளார்.
டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, தனது வாழ்க்கைக் கதையை திரைக்குக் கொண்டு வருவதில் உற்சாகம் கொள்வதாகவும், இது தொடர்பாக சில இயக்குனர்களுடன் பேசி வருவதாகவும் கூறியிருக்கிறார்.
டென்னிஸ் களத்தில் இரட்டையர் ஆட்டத்தில் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ஒரே இந்திய வீராங்கனையான சானியா மிர்சா, ரோனி ஸ்கூருவாலாவின் ஆர்.எஸ்.வி.பி மூவிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருப்பதாக கடந்த ஆண்டு செய்தி வெளியானது.
"சில இயக்குனர்களை சந்தித்து பேசியுள்ளேன். அதற்காக தான் மும்பை வந்திருக்கிறேன். பேச்சுகள் ஆரம்பக் கட்டத்தில் உள்ளன,” என்று சானியா திரைப்பட திட்டம் பற்றி தெரிவித்துள்ளார்.
வாழ்க்கையை தனது விதிகளின்படியே வாழ்த்திருப்பதாகவும், இந்த பயணத்திற்கான ரசிகர்கள் எதிர்வினை எப்படி இருக்கும் என்பது சுவாரஸ்யமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
"என் டென்னிஸ் வாழ்க்கையை கவனித்து வரும் யாரும், மனதில் பட்டதை நான் வெளிப்படையாக பேசிவிடும் வழக்கம் கொண்டிருப்பவள் என்பதை புரிந்து கொள்ள முடியும். இது குறித்து எனக்கு அச்சம் இல்லை. என்னுடைய் வாழ்க்கை கதையை சொல்வது உற்சாகமாக இருக்கிறது. ரசிகர்களுக்கும் இது சுவாரஸ்யம் அளிக்கும்,” என்று சானியா பிடிஐயிடம் தெரிவித்துள்ளார்.
33 வயதாகும் சானியா, வீராங்கனைகளின் கடின உழைப்பு மற்றும் போராட்டங்களுடன் பார்வையாளர்களால் எளிதாக தொடர்புப் படுத்திக்கொள்ள முடியும் என்பதால் விளையாட்டுத் துறையினர் வாழ்க்கை திரைப்படங்களுக்கு ஏற்றது என்று கூறியுள்ளார்.
"விளையாட்டு வீரர் உருவாகத் தேவைப்படும் கடின உழைப்புடன் பலரும் பல விதங்களில் தொடர்புப் படுத்திக்கொள்ள முடியும். நாம் எல்லோரும் கடினமாக உழைக்கிறோம் ஆனால் விளையாட்டுத்துறை என வரும் போது நீங்கள் இரத்தத்தை வியர்வையாக்கி உழைக்கிறீர்கள். எல்லோரும் சாம்பியன்களை விரும்புகின்றனர்,” என்று அவர் கூறியுள்ளார்.
"மேலும் நான் உள்பட பல விளையாட்டு நட்சத்திரங்கள் சாதாரண பின்னணியில் இருந்து வந்தவர்கள். ஒன்றும் இல்லாமல் துவங்கி பெரிய சாம்பியன்களாகி நாட்டுக்கு விளையாடும் நிலையில் எங்கள் வாழ்க்கை எல்லோருக்கும் ஈர்ப்புடையதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
லாக்மே பேஷன் வார நிகழ்ச்சியில் பங்கேற்ற போது செய்தியாளர்களிடம் பேசிய சானிய இதைத் தெரிவித்தார். பேஷன் கலைஞர் ரீனா சிங், உருவாக்கிய ஆடைகளுக்காக அவர் பேஷன் அரங்கில் பவனி வந்தார்.
ரீனா சீங், தெலுங்கானா கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்துடன் இணைந்து இந்த ஆடைகளை அறிமுகம் செய்துள்ளார். மக்கள் அறிந்த பிரபலம் என்ற முறையில், சமூகத்தின் மேம்பாட்டிற்காக தனது பங்களிப்பை செலுத்துவது அவசியம் என்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது பற்றி சானியா குறிப்பிட்டார்.
"பொது மக்கள் அறிந்த நபர் என்ற முறையில் எனக்கு பொறுப்பு இருக்கிறது. முடிந்த வழிகளில் சமூகத்திற்கு பங்களிப்பு செலுத்த வேண்டும். என் மன்சாட்சிப்படி சரியான வழிக்கான உதாரணமாக இருக்க விரும்புகிறேன். என் வாழ்க்கையை இப்படி தான் வாழ்கிறேன்,” என்றும் கூறினார்.
செய்தி : பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்