மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் ஆனார் சத்ய நாதெல்லா!
இந்தியர்களின் மேற்பார்வையில் நடைபோடும் உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள்!
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜான் தாம்சனுக்குப் பதிலாக சத்யா நாதெல்லா அந்தப் பதவியை பெற்றுள்ளார். 2014ம் ஆண்டு பில் கேட்ஸ் விலகிய பிறகு தாம்சன் மைக்ரோசாப்டின் தலைவரானார். அதே ஆண்டு சத்யா நாதெல்லா மைக்ரோசாப்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆனார்.
லிங்க்ட்இன், நுவான்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஜெனிமேக்ஸ் போன்ற பல நிறுவனங்களை பில்லியன் டாலர் கையகப்படுத்துவது உள்ளிட்ட மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது வணிகத்தை அதிகரித்ததில் சத்யா நாதெல்லாவின் பங்கு அதிகம்.
இந்த நிலையில் தான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். மைக்ரோசாப்ட் கார்ப் இயக்குநர்கள் ஏகமனதாக நாதெல்லாவை தேர்ந்தெடுத்துள்ளனர். இது தொடர்பாக விடுக்கப்பட்ட அறிக்கையில்,
"இந்தப் பதவியில், நிறுவனத்துக்கான அஜென்டாவை அமைப்பதற்கான பணிகளை நாதெல்லா வழிநடத்துவார்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்யா நாதெல்லா 1967 ஆம் ஆண்டில் ஹைதராபாத்தில் பிறந்தவர். ஹைதராபாத் பப்ளிக் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்த பின்னர் 1988 ஆம் ஆண்டில் மணிபால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியிலிருந்து பொறியியல் பட்டம் பெற்றார். இதன் பின்னர் கம்ப்யூட்டர் சயின்ஸில் முதுகலைப் பட்டம் படிக்க அமெரிக்கா சென்றார். 1996-ல் சிகாகோவின் பூத் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்பிஏ முடித்திருக்கிறார்.
இதற்கிடையே, தான் உலக பிரபலமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயல் அதிகாரியாக பதவியேற்று திறம்பட செயலாற்றினார். இவர் மைக்ரோசாப்ட் நிறுவன சி.இ.ஓவாக பதவியேற்றபோது அந்த நிறுவனம் மொபைல் பிரிவு, தேடுபொறி என்ஜின் ஆகிய பிரிவில் வீழ்ச்சியை சந்தித்திருந்தது. இதனை உணர்ந்த நாதெல்லா நிறுவனத்தை கள்வுட் ஸ்டோரேஜ் போன்றவற்றின் பக்கம் கவனத்தை திருப்பி மீண்டும் முன்னேற்றப் பாதையில் கொண்டு வந்தார்.
இதன்மூலம் லாபம் பார்க்க ஆரம்பித்தது மைக்ரோசாப்ட். அவரின் இந்தப் பணிக்கு கிடைத்த பலனாக தான் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக பில்கேட்ஸ் மற்றும் ஜான் தாம்சன் ஆகியோர் மட்டுமே பதவி வகித்திருந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பதவியை முதன்முதலாக இந்தியரான சத்யா நாதெல்லா அலங்கரிக்க இருக்கிறார்.
இதன்மூலம் உலகின் இரு முன்னணி டெக் நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட் ஆகியவை இந்தியர்களின் மேற்பார்வையில் நடைபோட இருக்கிறது.
தொகுப்பு: மலையரசு