பாகுபாடுகளைக் கையாண்டு தொழில் முனைவராக வெற்றியடைந்தது எப்படி? யுவர்ஸ்டோரி ஷ்ரத்தா ஷர்மா!
முதலீட்டாளர் பாலா ஸ்ரீனிவாசாவின் Inner Reel பாட்காஸ்ட் மூலம் தன்னம்பிக்கையுடன் தொழில்முனைவில் களமிறங்கி வெற்றியை வசப்படுத்தியது குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார் யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சிஇஓ ஷ்ரத்தா ஷர்மா.
’ஸ்டார்ட் அப்’ என்கிற வார்த்தை அதிகம் பரிச்சயமில்லாத காலகட்டம். புத்தம் புதிய யோசனைகளுடன் கண்முன் இருக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வை உருவாக்கும் உந்துதலுடன் பலர் ஸ்டார்ட் அப் உலகில் அடியெடுத்து வைக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் புதிய யோசனைகள்; புதிய துறைகள்; புதிய தீர்வுகள்; புதிய சவால்கள்.
இந்த ஸ்டார்ட் அப் உலகில் அடியெடுத்து வைக்கிறார் பீகாரின் சிறிய நகரைச் சேர்ந்த ஷ்ரத்தா ஷர்மா. ஆனால் இவரது யோசனை மற்றவர்களைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டது.
மற்றவர்கள் புதிய தயாரிப்பு அல்லது சேவையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் கால் பதித்தார்கள்.
ஆனால், ஷ்ரத்தா ஷர்மா இந்த உலகில் வளர்ந்து வரும் தொழில் முனைவோர்களின் கடின உழைப்பையும் சிந்தனைகளையும் சாதனைகளையும் வெளியுலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதற்கான மேடையை அமைத்துக் கொடுக்க விரும்பினார். அதற்காக அவர் உருவாக்கிய தளம் ‘யுவர்ஸ்டோரி’.
இன்று பலருக்கு முன்மாதிரியாகத் திகழும் ஷ்ரத்தா ஷர்மா இந்த நிலையை எப்படி எட்டினார்? தன்னம்பிக்கையை எப்படி வளர்த்துக்கொண்டார்? தன்னம்பிக்கைக்கும் பணிவிற்கும் இடையில் இருக்கும் மெல்லிய வேறுபாட்டை எப்படி அடையாளம் கண்டார்?
மற்றவர்கள் தாங்கள் கடந்து வந்த பாதையை வெளியுலகத்துடன் பகிர்ந்துகொள்ள தளத்தை அமைத்துக் கொடுத்த ஷ்ரத்தா ஷர்மா Inner Reel பாட்காஸ்ட் மூலம் முதலீட்டாளர் பாலா ஸ்ரீனிவாசாவிடம் தன்னுடைய பயணத்தை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஷ்ரத்தா ஷர்மா தன்னுடைய லிங்க்ட்இன் பதிவில்,
”நாம் அனைவருமே இரண்டு விதமான வாழ்க்கையை வாழ்கிறோம். ஒன்று வெளியுலகத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் பயணம். மற்றொன்று நம் மனதிற்குள் இருக்கும் தனிப்பட்ட, உணர்வுப்பூர்வமான பயணம். நான் உட்பட, அனைத்து தொழில்முனைவோரும் நம் மனதிற்குள் கடந்து வந்த பயணத்தைப் பற்றி அதிகம் வெளிப்படுத்திக்கொள்வதில்லை.”
Inner Reel பாட்காஸ்ட் மூலம் நான் சந்தித்த பாகுபாடுகள் பற்றியும் என் மனதிற்குள் இருக்கும் உணர்வுகளையும் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். என்னுடைய பயணத்தைக் கேட்பவர்கள் சிறியளவிலாவது பயனடைவார்கள் என நம்புகிறேன். தொழில்முனைவோராக நாம் சந்திக்கும் உணர்வுப்பூர்வமான பயணத்தைத் தயக்கமின்றிப் பகிர்ந்துகொள்வதற்கான சூழலை இது ஏற்படுத்திக்கொடுக்கும் எனவும் நம்புகிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.
ஷ்ரத்தா ஷர்மா ஆணாதிக்கச் சிந்தனைகள் நிறைந்த சூழலில் பீகாரில் வளர்ந்தது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நேர்காணல் எடுத்தது குறித்தும் தன்னுடைய நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டார்
ஷ்ரத்தா ஷர்மா உரையாடலில் பகிர்ந்துகொண்ட சில தகவல்கள்:
உந்துதல் பிறந்தது பற்றி கூறும்போது...
“சிறு நகரில் இருந்து பெருநகரங்களுக்குச் செல்லும்போது, அது ஒரு புதிய உலகம் போல் காட்சியளிக்கும். நான் பேசிய இந்தியைக் கேட்டு பலர் என்னை கிண்டல் செய்துள்ளனர். முதல் முறையாக இந்தப் புதிய உலகில் அடியெடுத்து வைக்கும்போது இதைக் கையாள முடியாமல் திணறுவோம். நான் அவர்களில் ஒருவர் அல்ல என்பது எனக்குப் புரிந்தது, இதை உணர்ந்தபோது நான் தேர்வு செய்ய என் முன்னே இரண்டு வாய்ப்புகள் இருந்தன...” என்றார்.
மற்றவர்கள் எப்படி மதிப்பிடுவார்கள் என்பது பற்றி கூறும்போது,
”முன்பெல்லாம் என்னைக் காயப்படுத்திவிட்டதாக உணர்வேன், உணர்ச்சிவசப்படுவேன். சந்திப்புகள் நடக்கும்போதுகூட இப்படிப்பட்ட உணர்வு ஏற்பட்டிருக்கிறது. அது பலவீனம் என்று நினைத்தேன். ஆனால் இன்று, அதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று பெண்களிடம் கூறி வருகிறேன்...”
தனக்கான அடையாளம் அல்லது பிம்பம் குறித்து கூறும்போது...
“இதுதான் என்னுடைய அடையாளம் என்பதை மற்றவர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கான அவசியம் இல்லை என்பது என் கருத்து. அன்பிற்கான தேடல் 90 சதவீதம் இல்லை என்பேன். தற்போது என்னை உள்முகமாக ஆராய்ந்து வருகிறேன்...”
ஆங்கில கட்டுரையாளர்: அஞ்சு நாராயணன் | தமிழில்: ஸ்ரீவித்யா