கோயில் பூக்களை மறுசுழற்சி செய்து பூஜை பொருட்களாக மாற்றும் சமூக தொழில்முனைவர்!
ராஜீவ் பன்சால், சுரபி தம்பதி நிறுவியுள்ள Nirmalaya நிறுவனம் கோயில்களில் இருந்து பூக்கள் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை சேகரித்து மறுசுழற்சி செய்து ஊதுபர்த்தி, கோன் போன்ற பூஜைப் பொருட்களாக மாற்றுகிறது.
கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பூ, பழம், தேங்காய் போன்றவற்றைக் கொண்டு செல்வது வழக்கம். சாமியை தரிசித்த பிறகு தேங்காய், பழம் போன்றவற்றை பக்தர்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று பயன்படுத்துவார்கள். ஆனால் கடவுளை அலங்கரிக்கவும் பூஜை செய்யவும் பயன்படுத்தப்படும் பூக்கள் என்னவாகிறது?
கடவுளுக்கு பூஜை செய்ய பயன்படுத்தப்படும் பூக்கள் வாடிய பின்னரும்கூட குப்பைகளில் கொட்டப்படுவதில்லை. ஏனெனில் இவை புனிதமானதாகக் கருதப்படுகிறது. அப்படியானால் இவற்றை எவ்வாறு அப்புறப்படுத்துவார்கள்?
இந்தப் பூக்களை நீர்நிலைகளில் கொட்டிவிடுவது வழக்கம். ஆனால் இன்று பூக்களில் பூச்சிக்கொல்லிகளும் ரசாயனங்களும் இருப்பதை நாம் அறிவோம். இதனால் நீர்நிலைகள் மாசுபடுகின்றன. அப்படியானால் இதற்குத் தீர்வுதான் என்ன?
கடவுளுக்கு அலங்கரிக்கப்பட்ட இந்தப் பூக்களை சேகரித்து மறுசுழற்சி செய்து மீண்டும் பூஜைப் பொருட்களாகவே மாற்றுகிறது டெல்லியைச் சேர்ந்த சமூக நிறுவனம் நிர்மாலயா ’Nirmalaya’.
இந்நிறுவனம், டெல்லியில் உள்ள 120-க்கும் மேற்பட்ட கோயில்களுடன் இணைந்து செயல்படுகிறது. இந்தக் கோயில்களில் இருந்து பூக்களின் கழிவுகளைப் பெற்றுக்கொண்டு ஊதுபர்த்தி, கோன், தூபம் போன்றவற்றைத் தயாரிக்கிறது.
நிர்மாலயா சமூக நிறுவனம்
’நிர்மாலயா’ நிறுவனத்தை ராஜீவ் பன்சால், சுரபி தம்பதி நிறுவியுள்ளனர். 2019-ம் ஆண்டு ராஜீவ் பன்சால் மகாராஷ்டிராவில் உள்ள ஷீரடி கோவிலுக்குச் சென்றுள்ளார். அங்கு கடவுளை வழிபடுவதற்குப் பயன்படுத்தப்படும் பூக்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு ஊதுபர்த்திகளாக மாற்றப்படுவதைக் கவனித்துள்ளார்.
பூக்களை மறுசுழற்சி செய்யும் முறை குறித்து சில மாதங்கள் தீவிரமாக ஆய்வு செய்தார். இந்தப் பிரிவில் செயல்படுவதற்காக மனைவி சுரபியுடன் இணைந்து ‘நிர்மாலயா’ நிறுவினார்.
இவர்கள் டெல்லி தாம் காம்பிளெக்ஸ் பகுதியில் தொழிற்சாலை அமைத்தனர். சொந்தமாக மறுசுழற்சி செயல்முறையை உருவாக்கினார்கள். அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மையத்தில் காப்புரிமை பெற்றனர்.
70 லட்ச ரூபாய் முதலீட்டுடன் இந்நிறுவனம் இதுவரை சுயநிதியில் இயங்கி வருகிறது.
ஊழியர்கள் மற்றும் தொழிற்சாலை அமைப்பு
ஆரம்பத்தில் தொழிற்சாலையில் நலிந்த பின்னணி கொண்ட சுமார் 40 பெண்கள் வேலை செய்தார்கள். ஆனால் கொரோனா பெருந்தொற்று சமயத்தில் கோயில்கள் மூடப்பட்டன. பக்தர்கள் இல்லாத நிலையில் வேலையும் முடங்கியது. பல ஊழியர்களை வேலையை விட்டு நிறுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தற்போது 15 பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிறுவனத்தின் ஊழியர்கள் பூக்களை வகைப்படுத்துகிறார்கள். ஆர்கானிக் மூலிகைகளை சேர்க்கிறார்கள். பேக்கேஜிங் பணிகளையும் மேற்கொள்கிறார்கள். இந்தப் பெண் ஊழியர்கள் வேலை செய்யும் நேரத்தில் அவர்களது குழந்தைகளும் அவர்களுடனேயே இருக்க அனுமதிக்கப்படுவது இந்நிறுவனத்தின் கூடுதல் சிறப்பு, தொழிற்சாலையும் அதற்கேற்றவாறு பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
விற்பனை
நிர்மாலயாவின் தயாரிப்புகள் 150 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுகின்றன. இந்த ஸ்டார்ட் அப் அதன் வலைதளம் மட்டுமல்லாது அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற மின்வணிக தளங்கள் மூலமாகவும் விற்பனை செய்கிறது.
இதுதவிர கோவா, பெங்களூரு மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களில் Rare Planet என்கிற பிராண்ட் மூலம் சில்லறை வர்த்தகம் செய்யப்படுகிறது.
“2020-ம் ஆண்டு நவம்பர் மாதம், முதல் சர்வதேச ஆர்டர் கிடைத்தது. அந்த வாடிக்கையாளருக்கு எங்கள் தயாரிப்புப் பிடித்திருந்தது. தற்போது அவர் மூலமாகவே சர்வதேச சந்தையில் செயல்பட்டு வருகிறோம். இவர் எங்களிடம் மொத்தமாக வாங்கிக்கொண்டு வெளிநாட்டு சந்தையில் விற்பனை செய்கிறார்,” என்கிறார் சுரபி.
இப்படி திருப்தியடைந்த வாடிக்கையாளர்களின் பரிந்துரை மூலமாகவே வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஆர்கானிக் விழிப்புணர்வு
கோயில் நிர்வாகத்திடமும் பூஜை செய்பவர்களிடமும் இந்தத் திட்டத்தை எடுத்துரைத்து சம்மதிக்க வைப்பது மிகப்பெரிய சவாலாக இருந்ததாக சுரபி தெரிவிக்கிறார். பூக்களை மறுசுழற்சி செய்தாலும் இறுதித் தயாரிப்புகளும் பூஜை சார்ந்தவையே என்பதை புரியவைத்தனர். இறுதியாக அவர்களது நம்பிக்கையை பெற்று சம்மதிக்கவும் வைத்தனர்.
அத்துடன் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கு குறித்தும் இந்தத் தம்பதி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
ஆங்கில கட்டுரையாளர்: டென்சின் நார்சம் | தமிழில்: ஸ்ரீவித்யா