’ஆதார் திட்டம்’ 10 ஆண்டுகள்: ஆய்வு அறிக்கையில் 10 முக்கிய குறை-நிறைகள்!
ஆதார் அட்டை பயன்பாடு தொடர்பாக நடத்திய ஆய்வில், 95% பெரியவர்கள் மற்றும் 75% குழந்தைகள் இதுவரை ஆதார் அட்டை பெற்றிருப்பதாக தெரிவிக்கிறது. இன்னும் பல முக்கிய கண்டுபிடிப்புகள்:
இந்தியாவின் தேசிய பயோமெட்ரிக் அடையாள அட்டை திட்டமான ஆதார் திட்டம், 90 சதவீத மக்கள் தங்களின் தரவுகளை ஒப்படைப்பது பாதுகாப்பானது என கருதும் நிலையை பெற்றிருந்தாலும், தகவல்களை அப்டேட் செய்வது சவாலாக இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.
ஓமிடியார் நெட்வொர்க் இந்தியாவின், ஆலோசனை பிரிவான டால்பெர்க் அண்ட் இன்வெஸ்ட்மண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் இருந்து:
1. இந்தியாவில் 95 சதவீத பெரியவர்கள், 75 சதவீத குழந்தைகள் ஆதார் அட்டை பெற்றுள்ளதாக தெரிவிக்கிறது.
2. விடுபட்ட 28 மில்லியன் பெரியவர்களில் பெரும்பாலானோர் அசாம் மற்றும் மேகாலயாவில் இருக்கின்றனர். இவர்களின் சட்டப்பூர்வ குடியுரிமை அந்தஸ்து கேள்விக்குறியாக இருப்பதால், ஆதார் அட்டை பெறும் செயல்முறை மெதுவாக உள்ளது.
3. அப்டேட் செய்வது தான் ஆதார் செயல்முறையில் கடினமானதாக இருக்கிறது. ஆதார் விவரங்களை அப்டேட் செய்ய முயன்ற ஐந்து பேரில் ஒருவர் தான் வெற்றி பெற்றுள்ளனர். 4 சதவீத ஆதார் அட்டைகள் பிழை கொண்டுள்ளன.
4. ஆதார் நிலை 2019 (State of Aadhaar 2019) எனும் தலைப்பிலான இந்த அறிக்கை, வங்கி கணக்குகளுக்கு ஆதார் அடையாள அட்டை எண்ணை வழங்குவது சட்டப்படி கட்டாயம் என 90 சதவீத மக்கள் தவறாக நினைத்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கிறது.
5. பெரும்பாலான இந்தியர்கள் மாதம் ஒரு முறை ஆதார் பயன்படுத்துகின்றனர், மற்றும் மேம்பட்ட சேவை அனுபவத்தை உணர்கின்றனர். 1.4 லட்சம் மக்களைக் கொண்ட, இரண்டு ஆய்வுகள் அடிப்படையிலான இந்த ஆய்வறிக்கை பொதுவிநியோகம் மூலமான ரேஷன், கிராமப்புற வேலை வாய்ப்புகள் மற்றும் சமூக பென்ஷனை மேலும் நம்பகமாக்கி இருப்பதாக 80 சதவீதம் பேர் தெரிவித்துள்ளதை உணர்த்துகிறது.
6. மற்ற வகை அடையாள அட்டைகளை பயன்படுத்துவதை விட, ஆதார் அட்டை மூலம், 40 சதவீத மக்கள் ஒரே நாளில் செல்போன் சிம் பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இருப்பினும், ஆதார் சார்ந்த சிக்கல்கள், நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல் போகும் நிலையை ஏற்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது.
7. 0.8 சதவீத மக்கள், அவர்கள் அதற்கு முன்பு பெற்று வந்த முக்கிய நலத்திட்டங்களில் (ரேஷன், வேலைவாய்ப்பு உறுதி திட்டம், சமூக பென்ஷன்) இருந்து வெளியேற்றப்பட்டனர் (ஆதார் அல்லாத விஷயங்களினால் 3.3 சதவீதம்) என்றும் அறிக்கை தெரிவிக்கிறது. 49 சதவீத மக்கள், வங்கிச்சேவை, சமூக பென்ஷன் போன்றவற்றை பெற ஆதாரை பயன்படுத்தியுள்ளனர் என்றும் தெரிவிக்கிறது.
8. 72 சதவீதம் பேர் இதை வசதியாக உணர்ந்தாலும், 50 சதவீதம் பேருக்கு மேல், அளவுக்கு அதிகமான சேவைகளுடன் ஆதார் இணைக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்,” என அறிக்கை தெரிவிக்கிறது.
9. "91 சதவீதத்தினர் அது தரவுகளை பாதுகாப்பாக வைத்திருப்பதாகக் கூறியுள்ளனர். 61 சதவீதத்தினர் இது மற்றவர்கள் தங்கள் சார்பில் பலன் பெறுவதை தடுப்பதாக தெரிவித்துள்ளனர். 80 சதவீதத்தினர் இது தவறாக பயன்படுத்தப்படலாம் என கவலை தெரிவித்துள்ளனர்.
10. 8% மக்களுக்கு ஆதார் தான் முதல் அடையாள அட்டையாகும். 100 நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்ட அட்டை வைத்திருப்பவர்களில் 100ல் ஒருவர், ஆதார் சார்ந்த பிரச்சனைகளால் கடந்த முறை வேலைக்கு முயன்ற போது பெற முடியாமல் போயிருக்கிறது. 0.5 சதவீத சமூக பென்ஷன் பயனாளிகள், ஆதார் சார்ந்த பிரச்சனைகளால் கடந்த முறை பென்ஷன் பெற முயன்ற போது பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
"இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்குமான அடையாள அட்டை திட்டமான ஆதாரை மக்கள் எப்படி புரிந்து கொள்கின்றனர், அதை எப்படி பெறுகின்றனர், எப்படி அப்டேட் செய்கின்றனர் மற்றும் பொது, தனியார் சேவைகள் பெற அதை எப்படி பயன்படுத்துகின்றனர், அதன் மீதான நம்பிக்கை ஆகியவற்றை இந்த ஆய்வு உணர்த்துகிறது. மேலும், ஆதாரின் எந்த அம்சம் செயல்படுகிறது, எது செயல்படவில்லை என்பதையும் தரவுகள் உணர்த்துகின்றன, என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
ஆதார் சார்ந்த பிரச்சனைகள்
இன்னமும் 102 மில்லியன் மக்களுக்கு ஆதார் இல்லை என்றும் அறிக்கை தெரிவிக்கிறது. வீடில்லாதவர்களில் 30 சதவீதம் பேர், 27 சதவீத மூன்றாம் பாலினத்தவர், ஆதார் இல்லாமல் உள்ளனர்.
அசாமில் 90% பேர் மற்றும் மேகாலயாவில் 61% பேர் ஆதார் இல்லாமல் உள்ளனர்.
"உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை மீறி, பெரும்பாலானோர், வங்கிக் கணக்கு, சிம் கார்டு, பள்ளி சேர்க்கை ஆகியவற்றுக்கு ஆதார் கட்டாயம் என நினைத்துக்கொண்டுள்ளனர். சிம் கார்டு பெற அல்லது வங்கிக் கணக்கு துவக்க ஆதார் அட்டை பயன்படுத்தியவர்களில் பாதி பேருக்கு மேல், இவ்வாறு வலியுறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
6 முதல் 14 வயது உள்ளவர்களில் 0.5 சதவீதத்தின் ஆதார் சார்ந்த சிக்கல்களால் பள்ளியில் சேரவில்லை. பெரும்பாலானோர் ஆதார் பரவலாக ஏற்கப்படுவது குறித்து பாராட்டினாலும், இதில் சிக்கல் இல்லாமல் இல்லை.
வங்கிச்சேவை
பெரும்பாலான மக்கள் ஆதார் குறித்து திருப்தி தெரிவித்துள்ளனர். 92 சதவீத மக்கள் ஆதார் குறித்து திருப்தி தெரிவித்துள்ளனர் என்றால், எதேனும் சேவையில் இருந்து ஆதார் காரணமாக விலக்கப்பட்டவர்களில் 67 சதவீதத்தினர், அதை மீறி ஆதார் குறித்து திருப்தி தெரிவித்துள்ளனர்.
ஆதார் திட்டத்தின் தகுதி குறித்து தீர்மானிப்பது அல்ல இந்த ஆய்வி்ன் நோக்கம். ஆதார் திட்டத்தை மேலும் சிறப்பாக செயல்படுத்த மக்களின் கருத்தறிவதற்கான முயற்சி இது. ஆதாரை தங்கள் தினசரி வாழ்வில் பயன்படுத்துபவர்கள் அல்லது பயன்படுத்த முடியாதவர்கள் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்வதில் தான் ஆதார் திட்டத்தின் வெற்றி அடங்கியிருப்பதாக கருதுகிறோம்,” என்று டால்பெர்க் பாட்னர், ஆசிய பிராந்திய இயக்குனர் கவுரவ் குப்தா கூறினார்.
"தொழில்நுட்பம் சரியாக பயன்படுத்தப்பட்டால், அனைவரையும் உள்ளடக்கிய தன்மைக்கான சிறந்த கருவியாகும் என நம்புகிறோம். அனைவரையும் உள்ளடக்கிய தன்மைக்கான, தொழில்நுட்பச் சேவைகளை உருவாக்குவது, மேம்படுத்துவதற்கான தரமான ஆய்வில் நம்பிக்கைக் கொண்டுள்ளோம்,” என்று, ஒமிடியார் நெட்வொர்க் இந்தியா நிர்வாக இயக்குனர் ரூபா குட்வா கூறினார்.
’அறிக்கை உணர்த்துவது போல, கிட்டத்தட்ட 1.2 பில்லியன் மக்களை சென்றடைந்துள்ள ஆதார் திட்டம் முக்கியமனாதாகும். இது அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ள மக்களுக்கு பலன் கொடுத்திருக்கிறது. அதே நேரத்தில் இந்த பிரிவினரிடம் தான் சிக்கலும் உள்ளது. இந்த ஆய்வின் பின்னே உள்ள தரவுகள் மக்கள் நலனுக்காக பொதுவெளியில் வைக்கப்படுகிறது’ என்றும் ரூபா கூறியுள்ளார்.
கட்டுரை தொகுப்பு: சைபர்சிம்மன்