52 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் இந்திய எலக்ட்ரிக்கல் பிராண்ட்!
1991-ம் ஆண்டு பிரேம் கண்ணா தொடங்கிய Gourav Luminaries இன்று அவரது மகன்கள் கௌரவ் மற்றும் பங்கஜ் தலைமையில் 52 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் எலக்ட்ரிக்கல் பிராண்டாக உருவெடுத்துள்ளது.
தலைநகர் டெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு எப்படியாவது டெல்லிக்கு சென்று குடியேறிவிடவேண்டும் என்பதும் அங்கேயே தங்கியிருந்து வேலை பார்க்கவேண்டும் என்பதும் கனவாக இருக்கும்.
பிரேம் கண்ணாவுக்கும் அப்படித்தான் இருந்தது. இவர் டெல்லிக்கு அருகிலிருக்கும் கார்கோடா கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது கனவு நிறைவேற வேண்டும் என்பதற்காக இவரது பெற்றோர் 5,000 ரூபாய் கையில் பணம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
ஷாதாரா மாவட்டத்தில் ஒரு சிறிய அறை எடுத்தார். அங்கு இரவு நேரங்களில் சொந்தமாக சோக் கருவி தயாரித்தார். பகல் நேரங்களில் அதைக் கொண்டு சென்று விற்பனை செய்தார்.
இப்படித் தொடங்கியது பிரேம் கண்ணாவின் பயணம். கணிசமான தொகையாக சேமிப்பு அதிகரித்ததும் அதைக் கொண்டு 1991-ம் ஆண்டு 'கௌரவ் லூமினரீஸ்’ (Gourav Luminaries) பிராண்ட் தொடங்கினார்.
இவருக்கு கௌரவ், பங்கஜ் என இரண்டு மகன்கள். இவர்கள் இருவரும் 2010-ம் ஆண்டு அப்பாவின் வணிகத்தில் இணைந்துகொண்டார்கள்.
ஒரு சிறிய அறையில் தொடங்கப்பட்ட தொழில் முயற்சி பிரம்மாண்டமான ஒரு எலக்ட்ரிக்கல் பிராண்டாக உருவானது. இந்த பிராண்டின் Otto modular switches, Yodha switchgear, Hilyt LED Lights, Viktor ceiling fans போன்றவற்றைத் தயாரிக்க சாஹிபாபாத் இண்டஸ்ட்ரியல் ஏரியாவில் நான்கு தொழிற்சாலைகள் இயங்குகின்றன.
”என் அப்பா தனி ஆளாகக் கஷ்டப்பட்டு இந்த வணிகத்தை உருவாக்கினார். சம்பாதித்த பணத்தை சேர்த்து வைத்து தொழில் தொடங்கினார். நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கு வேலை வாய்ப்பு வழங்கி குழுவை உருவாக்கினார். இத்தனை ஆண்டுகளில் எங்களது எலக்ட்ரிக்கல்ஸ் பிராண்ட் 52 கோடி ரூபாய் வருமாய் ஈட்டும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. 85 பேர் கொண்ட வலுவான குழுவாக செயல்படுகிறது. இதுதவிர 115 ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் இணைந்திருக்கிறார்கள்,” என்கிறார் கௌரவ் லூமினரீஸ் சிஇஓ கௌரவ்.
தற்சமயம் ஷாதரா பகுதியில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்படும் கௌரவ் லூமினரீஸ் விரைவில் காசியாபாத் பகுதியின் சாஹிபாபாத் தொழிற்பேட்டைக்கு மாற்றலாக உள்ளது.
விநியோகஸ்தர்கள் சார்ந்த சில்லறை விற்பனை
பிரேம் கண்ணா வணிக முயற்சியைத் தொடங்கி 25 ஆண்டுகள் முடிந்ததும் அன்றாட செயல்பாடுகளில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார். கடந்த மூன்றாண்டுகளாக அவரது மகன்கள் கௌரவ் (சிஇஓ) மற்றும் பங்கஜ் (சிஎஸ்ஓ) பொறுப்பேற்று நடத்தி வருகிறார்கள்.
”2010-ம் ஆண்டு வணிகத்தில் இணைந்த நாங்கள் இருவரும் 2017-ம் ஆண்டு வரை அப்பாவின் வழிகாட்டுதல்படி செயல்பட்டு வந்தோம். பின்னர் நாங்களே பொறுப்பேற்றுக்கொண்டோம். கடந்த மூன்றாண்டுகளில் 100 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளோம்,” என்கிறார் கௌரவ்.
இந்நிறுவனம் வட இந்தியா முழுவதும் 250-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் டீலர்கள் நெட்வொர்க்கை உருவாக்கியுள்ளது. தொழிற்சாலைகள் அமைக்கும் வேலைகளில் அப்பாவிற்கு உதவியுள்ளார் கௌரவ். பங்கஜ் விற்பனைக்கு பொறுப்பேற்று சில்லறை வர்த்தக விரிவாக்கப் பணிகளை கவனித்துள்ளார்.
“தயாரிப்புப் பணிகள் முடிந்ததும் விநியோகஸ்தர்களுக்கும் சில்லறை வர்த்தகர்களுக்கும் நுகர்வோருக்கும் செல்லும் வகையில் வணிக மாதிரி அமைந்துள்ளது. தயாரிப்பில் சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம்; விநியோகச் சங்கிலியை ERP சிஸ்டம் கொண்டு நிர்வகிக்கிறோம்; இப்படி செலவுகளை முடிந்தவரை குறைக்க முயற்சிகள் மேற்கொண்டோம்,” என்கிறார் பங்கஜ்.
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்களை கௌரவ் லூமினரீஸ் இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. இதன் விற்பனை பெரும்பாலும் வட இந்தியாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் நடைபெறுகிறது.
ஆன்லைன் செயல்பாடுகள்
கௌரவ் லூமினரீஸ் போட்டியாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு ஒழுங்கமைக்கப்பட்ட துறைக்கு மாறுவதற்கு இணையத்தை சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டது.
வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் பிராண்டைக் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதே சகோதரர்கள் இருவரின் நோக்கம்.
மிகுந்த அர்ப்பணிப்புடன் வணிகத்தை நடத்தி வந்த பிரேம் கண்ணா விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் என அனைவர் மீதும் அக்கறை காட்டியுள்ளார். அவரது மகன்களும் இதைப் பின்பற்ற்யே பிராண்டை வளர்ச்சியடையச் செய்து வருகிறார்கள்.
“விற்பனை, விநியோகம் போன்ற அம்சங்களில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்க முடியும். ஆனால் எங்கள் பிராண்ட் ஆன்லைனில் செயல்படுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டோம். ஆன்லைனில் நேரடியாக எங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவில்லை. மாறாக குழுவை உருவாக்கினோம். இவர்கள் சுய கற்றல், திறன் மேம்பாடு தொடர்பான உள்ளடக்கங்களைப் பகிர்ந்துகொள்வார்கள். கடந்த ஆண்டு மேரி கோம் எங்கள் பிராண்ட் அம்பாசிடராக ஒப்பந்தமாகியுள்ளார்,” என்கிறார் கௌரவ்.
இவ்வாறு சந்தையில் செயல்படும் மற்ற பிராண்டுகளைக் காட்டிலும் இந்த பிராண்ட் தனித்துவமாக செயல்பட்டு வருகிறது.
வருங்காலத் திட்டங்கள்
கௌரவ் லூமினரீஸ் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் வீட்டு உபயோகப் பொருட்களில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. கோவிட்-19 ஏற்படுத்தியுள்ள பாதிப்பில் இருந்து மீண்டதும் இதற்கான திட்டமிடலைத் தொடங்க இருக்கின்றனர்.
”கொரோனா இரண்டாம் அலை மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. எங்கள் விநியோகஸ்தர்களின் குரலில் பயமும் பதட்டமும் இருப்பதை உணரமுடிந்தது. தற்சமயம் எங்களது சேல்ஸ் பார்ட்னர்களுக்கு அவர்களது குடும்பத்தினருக்கும் எங்கள் செலவில் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன,” என்கிறார் பங்கஜ்.
பெருந்தொற்று பரவல் கட்டுக்குள் வந்து தேவையும் விற்பனையும் அதிகரிக்கும் போது நிறுவனத்தின் வளர்ச்சி மேலும் துரிதமாக இருக்கும் என சகோதரர்கள் இருவரும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா