ஆண் வேடத்தில் பயிற்சி எடுத்து, இன்று இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற இளம் வீராங்கனை!
பெண் என்ற காரணத்தால் பயிற்சி தர மையங்கள் மறுத்த போது, தன் மகளுக்கு ஆண் போன்று வேடமிட்டு, கிரிக்கெட் பயிற்சி எடுக்க வைத்தார் இவரின் அப்பா.
சமயங்களில் நிஜ சம்பவங்களில் இருந்து சினிமாக்கள் எடுக்கப்படுகிறதா அல்லது சினிமாக்களைப் பார்த்து சில சம்பவங்கள் நடக்கிறதா என்ற சந்தேகமே நமக்கு வந்து விடுகிறது. அந்தளவிற்கு திரையில் மட்டுமே பார்த்த சில சம்பவங்கள் நிஜத்தில் நடந்து நமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றன.
தமிழில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ’கனா’. சிறுகிராமத்தில் இருந்து பெண்கள் அதிகம் சோபிக்க இயலாது எனக் கூறப்படும் கிரிக்கெட்டில் பல்வேறு போராட்டங்களை சந்தித்து, உரிய பயிற்சிகளைப் பெற்று, இறுதியில் இந்தியாவிற்காக விளையாடும் இளம் பெண்ணைப் பற்றியது தான் அப்படம். அப்படத்தில் தன் மகளின் கனவிற்காக அவரது தந்தை உறுதுணையாக இருப்பார். நிஜத்திலும் நமக்கு அப்படி ஒரு அப்பா கிடைப்பாரா என ஏங்க வைத்த கதாபாத்திரம் அது.
ஆனால் நிஜத்தில் அப்படியான அப்பாக்கள் நிறைய பேர் இருக்கின்றனர். தங்கள் பிள்ளைகளின் கனவிற்காக எந்த எல்லைக்கும் செல்லும் துணிச்சலானவர்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் ஹரியானாவைச் சேர்ந்த சஞ்சீவ் வர்மா.
கனா படத்தில் வருவது போலவே, ஹரியானாவில் தன் மகளை கிரிக்கெட்டில் ஜொலிக்க வைக்க வேண்டும் என பல்வேறு போராட்டங்களை சந்தித்து, இன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் ஒரு அப்பா. இப்படி ஒரு அப்பாவைப் பெற்ற அதிர்ஷ்டசாலி தான் தற்போது பெண்கள் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருக்கும் ஷஃபாலி வர்மா.
ஹரியானாவின் ரோடாக் பகுதியைச் சேர்ந்தவர் ஷஃபாலி. சிறு வயதில் இருந்தே அவருக்கு கிரிக்கெட்டில் அதிக ஆர்வம். எனவே, அவரை முறைப்படி கிரிக்கெட் பயிற்சியில் சேர்த்து விட முடிவு செய்தார் அவரது அப்பா சஞ்சீவ் வர்மா. ஆனால் அவர்கள் வசித்த பகுதியில் பெண்களுக்கு கிரிக்கெட் பயிற்சி தரும் மையங்கள் எதுவும் இல்லை. ஆண்களுக்கு பயிற்சி தரும் மையங்களில் பெண் குழந்தையான ஷஃபாலியைச் சேர்த்துக் கொள்ளவில்லை.
“ஷஃபாலியை கிரிக்கெட் பயிற்சிக்காக நான் மையங்களில் சேர்க்க முயற்சித்த போது, அவர்கள் மறுப்பு தெரிவிக்க சொன்ன முக்கியக் காரணம் அவள் ஒரு பெண் என்பதுதான். அவள் பெண் என்பதால் காயம் பட்டால், நீங்கள் எங்களிடம் கேள்வி கேட்பீர்கள், சண்டைக்கு வருவீர்கள் என்றார்கள். நான் அப்படியெல்லாம் செய்ய மாட்டேன் எனக் கூறியும் அவர்கள் அதனை ஏற்க மறுத்து விட்டார்கள்,” என்கிறார் சஞ்சீவ் வர்மா.
இதனால் எந்தத் தந்தையும் எடுக்கத் தயங்கும் துணிச்சலான முடிவை எடுத்தார் சஞ்சீவ். தனது ஒன்பது வயது மகளான ஷஃபாலியின் நீண்ட கூந்தலை வெட்டினார். பையன்களுக்கு இருப்பது போன்ற ஹேர்ஸ்டைலை அவருக்கு வைத்தார். அதோடு, ஆண்கள் அணியும் உடையை அணிவித்து, பயிற்சி மையம் ஒன்றில் சேர்த்து விட்டார். அங்கு போலியாக ஆண் பெயர் ஒன்றையும் ஷஃபாலிக்கு வைத்தார்.
ஒன்பது வயது என்பதால் ஷஃபாலியின் குழந்தைத்தனமான முகத்தில் அவர் பெண் என்பதை பயிற்சியாளர்களால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் சில காலம் ஆண் குழந்தையாகவே அங்கு பயிற்சி பெற்றார் ஷஃபாலி. பின்னர் உண்மை தெரிய வந்ததும் அங்கு பயிற்சியில் இருந்து நிறுத்தப்பட்டார். அதோடு அக்கம்பக்கத்தாரின் கண்டனத்திற்கும் ஆளானார். அதெப்படி ஒரு பெண்ணை கிரிக்கெட் பயிற்சிக்கு ஆண் வேடமிட்டு அனுப்பலாம் என ஆளாளுக்கு சஞ்சீவை வசைப் பாடினர்.
ஆனால், அதற்கெல்லாம் அவர் அசரவில்லை. எப்படியும் தன் மகளின் கிரிக்கெட் கனவை நிஜமாக்க வேண்டும் என தொடர்ந்து உழைத்தார். சொந்த ஊரில் பயிற்சி மையத்தில் சேர்க்காததால், ஷஃபாலியை பக்கத்து ஊரில் இருந்த பயிற்சி மையத்தில் சேர்த்து விட்டார்.
தினமும் 8 கிமீ தூரம் சைக்கிளில் சென்று பயிற்சி பெற்றார் ஷஃபாலி. மகளின் கனவுக்காக பையன்களுக்கு மத்தியில் துணிச்சலாக தன் மகளை நடிக்க வைத்து, தினமும் அவரது பயிற்சிக்காக நீண்ட பயணங்களை மேற்கொண்ட ஷஃபாலியின் தந்தையை நிச்சயம் இங்கு பாராட்டியே ஆக வேண்டும்.
இவ்வளவு கஷ்டப்பட்டு பெற்ற பயிற்சிகள் வீணாகி விடுமா? ஷஃபாலி தற்போது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் நம் தேசத்திற்காக விளையாடும் வீராங்கனை ஆகி இருக்கிறார். 15 வயதிலேயே சர்வதேச போட்டியில் அறிமுகமாகி, மிகக் குறைந்த வயதில் கிரிக்கெட் விளையாடிய 2வது நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது டி20- போட்டியில் 33 பந்தில் 46 ரன்கள் விளாசி ரசிகர்களை அசர வைத்தார்.
“மிகவும் இளம் வயது வீராங்கனை என்ற சாதனை மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அது பற்றி அதிக அளவில் நினைத்துக் கொண்டு என்னுடைய தூக்கத்தை தொலைத்துக் கொண்டிருக்கவில்லை. இது ஒரு தொடக்கம்தான். கிரிக்கெட்டின் அனைத்து வகை போட்டியிலும் விளையாட விரும்புகிறேன்,” என்கிறார் ஷஃபாலி.
டி20 கிரிக்கெட் போட்டிகள் தான் ஷஃபாலிக்கு பிடித்தமான ஆட்டமாம். தற்போது தன்னுடைய ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் அவருக்கு சச்சின் போன்று பேட்டிங் செய்யவும், தோனி போன்று கீப்பிங் செய்யவும் விருப்பமாம்.
சமீபத்தில் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து மிதாலி ஓய்வு பெற்று விட்டதால், ஷஃபாலிக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. மே மாதம் நடந்த பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் சேலஞ்ச் போட்டியில் நன்றாக ஆடியதால் ஷஃபாலிக்கு, தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பு முதன்முறையாக கிடைத்துள்ளது.
மேலும், கடந்த பிப்ரவரி மாதம் நாகலாந்துக்கு எதிரான போட்டியில், 56 பந்தில் 128 ரன்கள் விளாசி சாதனை படைத்திருந்தார் ஷஃபாலி. அப்போதே அவர் ஆட்டத்தின் மீது தேர்வாளர்களின் பார்வை பதிந்தது. தற்போது இந்திய அணியில் விளையாடும் இளம் வீராங்கனை என்ற சிறப்பு ஷஃபாலிக்கு கிடைத்து விட்டது.