மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பு பிரிவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை - காரணம் என்ன?
மத்திய அரசின் அறிவிப்புக்கு உச்ச நீதிமன்றம் மார்ச் 21 வியாழக்கிழமை இடைக்கால தடை பிறப்பித்தது. லோக்சபா தேர்தலுக்கு முன், பத்திரிகை தகவல் பணியகத்தின் (பிஐபி) கீழ் உண்மைச் சரிபார்ப்பு பிரிவை அமைக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அறிவிப்புக்கு உச்ச நீதிமன்றம் மார்ச் 21 வியாழக்கிழமை இடைக்கால தடை விதித்தது. லோக்சபா தேர்தலுக்கு முன், பத்திரிகை தகவல் பணியகத்தின் (பிஐபி) கீழ் உண்மைச் சரிபார்ப்பு பிரிவை அமைக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் மத்திய அரசு குறித்து பகிரப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதற்காக அமைப்பதற்கான மத்திய அரசின் அறிவிப்பிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மத்திய அரசை பற்றிய போலிச் செய்திகளைக் கண்டறிய பத்திரிக்கை தகவல் பணியகத்தின் (PIB) கீழ் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவை அமைக்கும் அறிவிப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
உண்மை கண்டறியும் பிரிவு:
சமூக ஊடகங்களில் அரசு குறித்து தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கும் விதமாகவும், செய்திகளின் உண்மைத் தன்மையைக் கண்டறியும் வகையிலும், மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021ன் கீழ் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, மத்திய அரசு குறித்த தவறான தகவல்களை சம்பந்தப்பட்ட சோசியல் மீடியா நிறுவனம் நீக்க வேண்டும் என்றும், அதற்கு மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட சோசியல் மீடியா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வரும் சட்ட பாதுகாப்பு நீக்கப்படும் என்றும் பல்வேறு திருத்தங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இதுதொடர்பான அறிவிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதற்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு விசாரணையை மேற்கொண்ட மும்பை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு, இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்டது. இதனையடுத்து, பத்திரிகை தகவல் பணியகத்தின் (பிஐபி) கீழ் உண்மைச் சரிபார்ப்பு பிரிவை (ஃபேக்ட் செக்கிங் யூனிட்) அமைக்க மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு:
மத்திய அரசின் இந்த அறிவிப்பை அடுத்து, மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக காமெடி நடிகரான குணால் காம்ரா மற்றும் எடிட்டர் கில்ட் ஆஃப் இந்தியா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஜெ.பி. பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு நேற்று விசாரணை மேற்கொண்டது.
காமெடி நடிகர் குணால் கம்ரா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டேரியஸ் கம்பாடா,
“மத்திய அரசு தொடர்பான செய்திகளுக்கு மட்டுமே உண்மைச் சரிபார்ப்புப் பிரிவை ஏற்படுத்துவது நியாயமானது அல்லது. இதனால் மத்திய அரசின் நிலைப்பாடு மட்டுமே அனுமதிக்கப்படும். பொதுத் தேர்தல்கள் நெருங்கி வருவதால், வாக்காளர்களுக்கு என்ன தகவல் செல்கிறது என்பதைக் கட்டுப்படுத்த மத்திய அரசின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு ஒரு கருவியாக மாறும,” என வாதிட்டார்.
“போலி செய்திகளைத் தடுப்பதே நோக்கம் என்றால், போலிச் செய்திகளால் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். இது அரசாங்கத்தை விட தனிநபர்களைப் பாதிக்கிறது. தேர்தல் வரப்போகிறது. மத்திய அரசு தொடர்பான அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் அணுக வேண்டிய நேரம் இது,” என வாதிட்டார்.
மேலும், இதுதொடர்பான வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், PIB தலைமையில் உண்மைச்சரிபார்ப்பு பிரிவு அவசர, அவசரமாக மார்ச் 20ம் தேதி அறிவிப்பட்டதாக குற்றச்சாட்டினார். எடிட்டர்ஸ் கில்டுக்காக ஆஜரான வழக்கறிஞர் சதன் ஃபராசத்,
“அரசால் கட்டுப்படுத்தப்படும் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு, அரசியலமைப்பின் 19(1)(a) பிரிவின் கீழ் பேச்சுரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படை உரிமை மீதான தாக்குதல்,” என்றார்.
அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, “அரசியலமைப்பு பிரிவு 19(1)(a)-ன் கீழ் உள்ள பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரம் தொடர்பாக முக்கியக் கேள்வியை எழுப்புவதாகவும், எனவே, மும்பை உயர் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும் வரை மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்கப்படும்," என்றும் உத்தரவிட்டுள்ளது.