தமிழகத்தின் முதல் வேளாண்மை பட்ஜெட்: முக்கிய அம்சங்கள் என்னென்ன?!
`இயற்கை வேளாண்மை'க்கு தனிப்பிரிவு தொடக்கம்!
தமிழக நிதி நிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று தமிழக வேளாண்மை பட்ஜெட் 2021 தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றில் விவசாயிகளுக்கென தனியாக தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது.
அதன்படி, டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஓராண்டுக்கும் மேலாக உறுதியோடு போராடிவரும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட்டை அர்ப்பணிக்கிறேன் என்பதோடு பட்ஜெட் உரையை தொடங்கினார் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம். தொடர்ந்து பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!
* கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
* 280 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்ததப்பட இருக்கும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், அனைத்து கிராமங்களும் வளர்ச்சியடைந்து தன்னிறைவு பெறுவதே ஆகும்.
* இயற்கை வேளாண்மைக்கு என தனிப்பிரிவு தொடக்கம்.
* இயற்கை வேளாண் வளர்ச்சித் திட்டம் தொடங்கப்பட்டு விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் இடுபொருள்கள் வாங்க மானியம் வழங்க உத்தரவு.
* இயற்கை விவசாயிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கு ’இயற்கை விவசாயிகள்' என சான்றிதழ் வழங்க நடவடிக்கை.
* பனை உற்பத்தியை பெருக்கும் வகையில் பனை விதைகள், பனை விதைப்புக்கு மானியம் வழங்க அரசு திட்டமிட்டு வருகிறது.
* இளைஞர்களை வேளாண் தொழில்முனைவோராக்கும் வகையில் வேளாண் மாணவர்களுக்கு பயிற்சி.
* மேலும் இளைஞர்களை வேளாண்மையில் ஈடுபடுத்தும் வகையில் ‘ஊரக இளைஞர் வேளாண் மேம்பாட்டு திட்டம்' 5 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும். முதல்கட்டமாக 2500 இளைஞர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் பயிற்சி.
* நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் தொடங்க நடவடிக்கை.
* விதைப்பண்ணைகளில் சுமார் 200 ஏக்கரில் பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்து அரசு சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
* கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை இனி டன் ஒன்றுக்கு 42.50 ரூபாய் என்று அதிகரித்து வழங்கப்படும்.
* கரும்பு பிழித்திறனை அதிகரிக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு
* பனை வெல்லத்தை ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
* 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள் விதைக்கப்படும்.
* மானாவாரி நிலங்களில் மரக்கன்றுகளை வளர்கும் வகையில் நிதியுதவி திட்டம்.
* இருபோக சாகுபடி 10 ஆண்டுகளில் 20 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்க நடவடிக்கை.
* 11.5 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் சாகுபடி பரப்பு அதிகரிக்க நடவடிக்கை.
* 60 சதவிகிதமாக இருக்கும் சாகுபடி பரப்பு 75 சதவிகிமாக உயர்த்த நடவடிக்கை.
* இனி சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2060-க்கும், சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2015-க்கும் வழங்கப்படும்.
* ரூபாய் 52.02 கோடியில் விவசாயிகளுக்கு தார்பாய்கள் வழங்க நடவடிக்கை.
* சிறுதானிய மேம்பாட்டுக்காக சிறுதானிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு ரூ.12.44 கோடி அளவில் செயல்படுத்தப்படும்.
* பருத்தி இயக்கத்திற்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு.
* டெல்டா மாவட்ட தென்னை விவசாயிகளுக்காக தஞ்சாவூரில் தென்னை மதிப்புக்கூட்டு மையம் தொடங்க நடவடிக்கை.
* சென்னையில் வேளாண்மைக்கு என தனி அருங்காட்சியகம்.
* விவசாயத்திற்கான புதிய இயந்திரங்களைக் கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்கு 6 லட்ச ரூபாய் அளவில் பரிசு.
* உழவர் சந்தைகளின் தரத்தை மேம்படுத்த ரூ.12 கோடி ஒதுக்கீடு.
* சோலார் பம்ப்செட்களை உருவாக்க ரூ.114 கோடி ஒதுக்கீடு.
* இலவச மின்சாரம் வழங்க ரூ.4508 கோடி ஒதுக்கீடு.
இது போன்ற பல அறிவிப்புகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.