67 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் டாடா வசம் வந்த ‘ஏர் இந்தியா’ - ரூ.18,000 கோடிக்கு ஏலம் முடிவு!
`வெல்கம் பேக் ஏர் இந்தியா' என வரவேற்று உணர்ச்சிவசப்பட்ட ரத்தன் டாடா!
பொதுத்துறை விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டே மத்திய அரசு வெளியிட்டது. மத்திய அரசுக்கு சொந்தமான, ஏர் இந்தியா நிறுவனம், நீண்ட காலமாக கடன் சுமையில் தடுமாறி வருகிறது. அதற்கு 60,000 கோடி கடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், நாள்தோறும் ஏர் இந்தியா இழப்புகளை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2020 நிதியாண்டில் மட்டும் ஏர் இந்தியாவுக்கு 25 ஆயிரத்து 509 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது போன்ற நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்கக் கடந்த 2018ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. நிறுவனத்தின் 76 சதவீத பங்குகளை விற்பனை செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டும், இதை வாங்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை.
இதன்பின், ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை விற்பனை செய்ய அரசு முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டது. மத்திய அரசின் ஏலத்தில் பங்கேற்பதற்காக விண்ணப்பம் அளிப்பதற்கான அவகாசம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், பங்குகளை வாங்க டாடா மற்றும் ஸ்பைஸ் ஜெட் குழுமங்கள் மட்டுமே விண்ணப்பித்து இருந்தன.
இதனிடையே, சில தினங்கள் முன் ஊடகங்களில் இந்த ஏலம் தொடர்பாக சில தகவல்கள் வெளியாகி இருந்தன. அது,
"நிதி ஏலத்தின் குறைந்தபட்ச தொகையான ரூ.15 ஆயிரம் கோடிக்கு டாடா நிறுவனம் முன்வந்ததாகவும், இதற்கு மத்திய அரசு சம்மதம் தெரிவித்து இந்த இரண்டு மாதங்களுக்குள் டாடா குழுமத்திடம் ஏர்இந்தியாவை முழுமையாக ஒப்படைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு செய்யும் என்றும்," தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மத்திய அமைச்சர்கள் குழு இதற்கு ஒப்புதல் தெரிவித்துவிட்டன என்றும் சொல்லப்பட்டன.
இதுதொடர்பான செய்திகள் தீயாகப்பரவ, மத்திய அரசு சார்பில் உடனடியாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில்,
"ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலம் விடுவது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழு இறுதி முடிவெடுத்து பின்பு முறையாக அறிவிக்கப்படும்," என்று விளக்கம் கொடுத்தனர்.
இதனிடையில், தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆம்,
ஏர் இந்தியாவை டாடா குழுமம் அதிகாரப்பூர்வமாக கைப்பற்றியிருக்கிறது. ஏர் இந்தியா நிறுவனம் ரூ.18,000 கோடிக்கு டாடா நிறுவனத்துக்கு விற்கப்பட்டதாக மத்திய அரசு சில மணி நேரங்கள் முன் அறிவித்துள்ளது. இதையடுத்து ரத்தன் டாடாவும் தனது டுவிட்டரில், ‘வெல்கம் பேக் ஏர் இந்தியா' என வரவேற்று ஒரு குறிப்பையும் வெளியிட்டுள்ளார்.
அதில், ”ஏர் இந்தியா நிறுவனத்திற்கான ஏலத்தில் டாடா குழுமம் வென்றது ஒரு சிறந்த செய்தி. ஏர் இந்தியாவை மீண்டும் கட்டியெழுப்ப கணிசமான முயற்சி எடுக்கும் என்றாலும், டாடா குழுமத்திற்கு விமானத் துறையில் ஒரு வலுவான சந்தை வாய்ப்பை அது வழங்கும், என்று தெரிவித்துள்ளது.
”ஏர் இந்தியா ஒரு காலத்தில் ஜே ஆர் டி டாடா தலைமையில் உலகின் மிகவும் மதிப்புமிக்க விமான நிறுவனங்களில் ஒன்றாக புகழ் பெற்று இருந்தது. டாடாஸ் முந்தைய ஆண்டுகளில் அனுபவித்த உருவத்தையும் நற்பெயரையும் மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது. ஜே ஆர் டி டாடா இன்று நம் மத்தியில் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பா,ர்" உணர்வுப்பூர்வமாக எழுதியுள்ளார்.
மீண்டும் டாடா கைகளிலேயே ஏர் இந்தியா!
1932-ம் ஆண்டு டாடா குழுமத்தால் தொடங்கப்பட்ட விமான நிறுவனமே ’ஏர் இந்தியா’. ஆனால் கடந்த 1953-ம் ஆண்டு, மத்திய அரசு டாடா விமான நிறுவனத்தை கைப்பற்றி தேசிய மயமாக்கியது. தற்போது வரை 67 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மீண்டும் டாடா வசம் ஏர் இந்தியா வந்துள்ளது.
தகவல் உதவி: பிடிஐ