ஆதரவற்றக் குழந்தைகளின் கல்விக்கு உதவும் டீ கடை உரிமையாளர்!
கான்பூரில் தேநீர் கடை உரிமையாளரான மொஹமத் மஹ்பூப் மாலிக் தனது பகுதிக்கு அருகில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்காக ஒவ்வொரு மாதமும் சுமார் 20,000 ரூபாய் செலவிடுகிறார்.
கல்வி என்பது மனிதனின் அடிப்படை உரிமை. இருப்பினும் இந்தியாவில் உள்ள பல குழந்தைகளுக்கு இது எட்டாக் கனியாகவே உள்ளது. அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து, மாநில அளவிலான திட்டங்களை ஏற்பாடு செய்தாலும் முழுமையாக தீர்வுகாண முடியவில்லை. பொதுமக்கள் செய்யும் சிறு முயற்சிகளும் மிகப்பெரிய பங்களிப்பாக கருதப்படுகிறது.
உதாரணத்திற்கு ராஜேஷ் குமார் ஷர்மா ஒரு பாலத்தின் கீழே தற்காலிக பள்ளி அமைத்து சுமார் 300 மாணவர்களுக்கு வகுப்பெடுக்கிறார். ராஜேஷ் போன்றே மொஹமத் மஹ்பூப் மாலிக் குழந்தைகள் கல்வி கற்க உதவி வருகிறார்.
கான்பூரில் டீக்கடை ஒன்றின் உரிமையாளரான மொஹமத் அவரது பகுதிக்கு அருகாமையில் நான்காம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 40 குழந்தைகளின் படிப்பிற்கு உதவுகிறார்.
மொஹமத் குழந்தைகளின் படிப்பிற்காக ஒவ்வொரு மாதமும் 20,000 ரூபாய் செலவிடுகிறார். ’தனிக் பாஸ்கர்’ உடனான உரையாடலில் அவர் கூறுகையில்,
”2017-ம் ஆண்டு ஆதரவற்ற குழந்தைகளுக்காக என்னுடைய சேமிப்பைக் கொண்டு பயிற்சி மையம் ஒன்றைத் திறந்தேன். என்னுடைய முயற்சி குறித்து கேள்விப்பட்டதும் என்னுடைய நண்பர் நிலேஷ் பயிற்சி மையத்திற்கு ஆதரவு கிடைக்க அரசு சாரா நிறுவனம் ஒன்றை தொடங்குமாறு பரிந்துரைத்தார்,” என்றார்.
அதைத் தொடர்ந்து மொஹமத் ‘மா துஜே சலாம் அறக்கட்டளை’ என்கிற அரசு சாரா நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம் குழந்தைகளுக்கு கல்வி மட்டுமின்றி சீருடை, பைகள், எழுதுபொருட்கள் போன்றவற்றையும் இலவசமாக வழங்குகிறது. இதில் மூன்று ஆசிரியர்கள் இலவசமாக வகுப்பெடுக்கிறார்கள்.
பயிற்சி மையம் தொடங்குவதற்கு முன்பு 29 வயதான மொஹமத், சாரதா நகர் சந்திப்பில் உள்ள நடைபாதையில் தினமும் தேநீர் விற்பனை செய்து பள்ளி ஒன்றை தொடங்கினார். தேசிய மற்றும் மாநில அளவிலான பொறியியல் மற்றும் மருத்துவ தேர்வுகள் நடைபெறும் நேரத்தில் அவரது கடையில் இலவசமாக தேநீர் வழங்குகிறார்.
மொஹமத்தின் முயற்சிகளைக் கண்டு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லஷ்மண் தனது டிவிட்டர் பதிவில்,
”கான்பூரைச் சேர்ந்த தேநீர் விற்பனையாளரான மொஹமத் மஹ்பூப் மாலிக் 40 குழந்தைகளின் படிப்பிற்கு உதவுகிறார். இவர் சிறிய தேநீர் கடையை நடத்தி வருகிறார். தனது 80% வருவாயை இந்தக் குழந்தைகளின் கல்விக்காக செலவிடுகிறார். அனைவருக்கும் உந்துதலளிக்கிறார்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
கட்டுரை: THINK CHANGE INDIA