TechSparks 2020 நிறைவு தினத்தில் அழுத்தமான கருத்துக்களுடன் உரை ஆற்றிய ரத்தன் டாடா!
ஸ்டார்ட் அப்களும் இளைஞர்களும் மனிதகுலத்திற்கு ஏற்படுத்தக்கூடிய மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டே வெற்றியை அளவிடவேண்டுமே தவிர பணத்தின் மதிப்பை கருத்தில் கொள்ளக்கூடாது என்கிற மையக்கருத்தை டெக்ஸ்பார்க்ஸ் 2020 நிகழ்வில் ரத்தன் டாடா வலியுறுத்தினார்.
ரத்தன் டாடா பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்பவர் அல்ல. அவ்வாறு கலந்துகொண்டு உரையாற்றினால் அனைவரும் அவரது வார்த்தைகளை மிகுந்த கவனத்துடன் கேட்பார்கள். குறிப்பாக இளைஞர்கள் அவரது அனுபவமிக்க உரைகளை மெய்மறந்து கவனிப்பதுண்டு.
யுவர்ஸ்டோரியின் டெக்ஸ்பார்க்ஸ் 2020 நிகழ்வு மூலம் ரத்தன் டாடா அவர்களின் உரையைக் கேட்கும் அரிய வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. பிரபல தொழிலதிபர், முதலீட்டாளர், கொடையாளி மற்றும் டாடா டிரஸ்ட் தலைவரான இவர் யுவர்ஸ்டோரியின் முக்கிய நிகழ்வான டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்வில் கலந்துகொண்டு நிறைவுரை ஆற்றினார். இந்த முக்கிய தொழில்நுட்ப மற்றும் தொழில்முனைவு நிகழ்வு முதல் முறையாக மெய்நிகர் வடிவில் நடைபெற்றது. இதில் உலகளவில் பலர் பங்கேற்றனர்.
மனித குலத்திற்கு நாம் செய்யக்கூடியவற்றில் கவனம் செலுத்தவேண்டும்; நம் நாட்டிற்கும், உலகிற்கும், ஒட்டுமொத்த பிரபஞ்சத்திற்கும் நாம் ஏற்படுத்தக் கூடிய மாற்றத்தை வைத்தே நம் வெற்றி அளவிடப்படவேண்டும்; பணத்தின் மதிப்பைக் கொண்டு அளவிடப்படக்கூடாது; இவையே ரத்தன் டாடா தனது நிறைவுரையில் வலியுறுத்திய மையக்கருத்தாக இருந்தது.
நம்மால் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? நம்மால் புதுமை படைக்க முடியுமா? நம் செயல்பாடுகளை பணத்தின் மதிப்பைக் கொண்டு அளவிடாமல் மனிதகுலத்திற்கு அதன் மூலம் கிடைத்துள்ள பலன்களை அடிப்படையாகக் கொண்டு நம்மால் அளவிடமுடியுமா? இந்தக் கேள்விகளை நாம் நம்மிடம் கேட்டுக்கொள்ளவேண்டும்.
”நாம் பணிவாக இருக்கவேண்டும். அதேசமயம் தேவைகளில் கவனம் செலுத்தி வாய்ப்புகளை கண்டறியவேண்டும்,” என்கிற கருத்தை உலகளவில் டெக்ஸ்பார்க்ஸ் 2020 நிகழ்வில் கலந்துகொண்ட 1 லட்சம் பார்வையாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.
மனிதகுலம் சந்திக்கும் சவால்களுக்கு தொழில்நுட்ப ரீதியான புதுமைகள் தீர்வளிக்கவேண்டும். ஹெல்த்கேர், விவசாயம், விண்வெளி தொழில்நுட்பம், மின்னணுவியல், பசுமை தொழில்நுட்பம் (கிளீன்டெக்) போன்ற வெவ்வேறு துறைகளின் வளர்ந்து வரும் தேவைகளையும் உணவுப் பற்றாக்குறை பிரச்சனைகளையும் பூர்த்திசெய்யும் வகையில் தீர்வுகள் அமையவேண்டும் என்று டெக்ஸ்பார்க்ஸ் 2020 நிகழ்வில் 82 வயது ரத்தன் டாடா குறிப்பிட்டார்.
“இவை ஒரு கலவையான, சிக்கலான புதுமைகள் எனலாம். சில புத்தாக்கங்கள் மிகச் சிறியது. ஆனால் வெற்றிகரமானது. மற்றவை பெரியளவில் இருக்கக்கூடியவை. அதற்கு அதிக மூலதனம் தேவைப்படும்,” என்று விவரித்தார் தனி நபராக டாடா குழுமத்தை உலகளவில் முன்னணி வகிக்கச் செய்த வெற்றிகரமான தொழிலதிபரான ரத்தன் டாடா.
நம் தலைமுறை காணக்கிடைத்த மிகவும் மரியாதைக்குரிய தலைவரான ரத்தன் டாடா இந்தியாவில் தொழில்நுட்ப உலகின் செயல்பாடுகளை பாராட்டியதுடன் நம்பிக்கையும் தெரிவித்தார். அதேசமயம் மனிதகுலத்தின் மேம்பாட்டில் பங்களித்து வருபவர்களின் முயற்சிகளை கொண்டாடி அங்கீகரிக்கும் மிகச்சிறந்த தளம் என்று டெக்ஸ்பார்க்ஸ் 2020 நிகழ்வை பாராட்டினார்.
இந்திய ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் இந்தியாவின் வருங்காலத்திற்கான மிகவும் சக்திவாய்ந்த பிரிவாக உருவெடுக்கும் என்கிற நம்பிக்கை வரிகளுடன் ரத்தன் டாடா தனது நிறைவுரையை முடித்துக்கொண்டார்.
“டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்வு சிறந்த செயல்பாடுகளை அங்கீகரிக்கிறது. இந்தக் குழுவின் வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஒருவர் இந்த நாட்டிற்காகவும் பிரபஞ்சத்திற்காகவும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மட்டுமே நான் வெற்றி என்று குறிப்பிட்டேன். உங்களில் பலர் அபார வெற்றியை வசப்படுத்தப்போகிறீர்கள். உங்களுடன் உரையாடியது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துக்கள்!
இந்தியாவின் வருங்காலத்திற்கு இது மிகவும் சக்தி வாய்ந்த பிரிவாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை நாம் சக்தி வாய்ந்ததாக மாற்றுவோம். அதேசமயம் மாற்றத்தை ஏற்படுத்துவோம், என்று குறிப்பிட்டார்.
ஆங்கில கட்டுரையாளர்: ஷ்ரத்தா ஷர்மா | தமிழில்: ஸ்ரீவித்யா