பங்குகள் (ESOP) மூலம் ஊழியர்களுக்கு 300 கோடி ரூபாய் வழங்கிய Tekion!
Tekion சுமார் 300 கோடி ரூபாய் அளவில் பணியாளர்களின் பங்குகள் விற்பனை செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டன. சுமார் 400 பணியாளர்கள் இதில் கலந்துகொண்டார்கள். 250 நபர்களுக்கு கோடி ரூபாய் அளவுக்கு தொகையை ஈட்டியிருக்கிறார்கள.
டெக்னாலஜி பணியாளர்களை பொருத்தவரை சம்பளம் என்பது முக்கியம். அதனை விட முக்கியம் பங்குகள் (ESOPs). ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பணிபுரிவர்களுக்கு இசாப் இல்லை என்றால் முக்கியமான டெக்னாலஜி பணியாளர்களை தக்க வைக்க முடியாது.
ஆனால், இதில் சிக்கல் என்னவென்றால் பங்குகளின் மதிப்பு அதிகமாக இருந்தாலும் அதனை விற்பதற்கான வாய்ப்பு உடனே கிடைக்காது. ஒரு நிறுவனத்தை மற்றொரு நிறுவனம் வாங்க வேண்டும், பெரிய முதலீடு கிடைக்க வேண்டும் அல்லது ஐபிஒ ஆகிய சமயங்களில் மட்டுமே இந்த பங்குகளை விற்பனை செய்ய முடியும். சில சமயங்களில் அந்த பங்குகளை விற்பனை செய்வதற்கான வாய்ப்பு கூட கிடைக்காமல் போகலாம். சமயங்களில் சந்தை மதிப்பும் குறையலாம்.
ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் பங்குகள் இருக்கும் பட்சத்தில், அந்த பங்குகள் பணமாக மாறினால் மட்டுமே நிஜம் என்பதுதான் சூழல். அதுவரை பணியாளர்கள் காத்திருக்க வேண்டும். ஆனால்,
நிறுவனம் ஊழியர்களைக் காத்திருக்க வைக்காமல் அவ்வப்போது வெளியேறுவதற்கான வாய்ப்புகளை வழங்கி இருக்கிறது.சென்னையைச் சேர்ந்த ஜெய் விஜயன் அமெரிக்காவில் டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்றினார். அதன்பிறகு, அமெரிக்காவிலே ’டெகியான்’ என்னும் நிறுவனத்தை தொடங்கினார். 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், 2020-ம் ஆண்டு யுனிகார்ன் நிலையை அடைந்தது. அடுத்த ஓர் ஆண்டுக்குள்ளாகவே நிறுவனத்தின் சந்தைமதிப்பு மூன்று மடங்குக்கு மேல் உயர்ந்து 3.5 பில்லியன் டாலராக மாறியது.
சென்னையில் புதிய அலுவலகம்
கோவிட் காரணமாக இந்தியாவுக்கு வர முடியாத சூழல் இருந்தது. இந்த நிலையில் டெகியான் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தை திறப்பதற்காக சென்னை வந்திருந்தார் ஜெய் விஜயன். சென்னை மற்றும் பெங்களூருவில் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. சென்னையில் 200க்கும் மேற்பட்டவர்களும், பெங்களூருவில் 1000க்கு மேற்பட்டவர்களும் பணியாற்றுகின்றனர். மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 2000த்தை நெருங்குகிறது.
ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பங்குகள் குறித்த முக்கியமான விஷயத்தை ஜெய் பகிர்ந்தார்.
“நாங்கள் பெரும்பாலான பணியாளர்களுக்கு பங்குகளை வழங்கி இருக்கிறோம். தவிர அந்த பங்குகளை விற்பதற்கான வாய்ப்புகளையும் நாங்கள் வழங்கி இருக்கிறோம். 2020-ம் ஆண்டு நாங்கள் நிதி திரட்டும்போது அப்போதும் ஊழியர்கள் வெளியேறுவதற்கு வாய்ப்பு கொடுத்தோம். கடந்த முறை நிதி திரட்டும்போதும் பணியாளர்கள் வெளியேறுவதற்கு வாய்ப்பு வழங்கினோம்,” என்றார்.
நிறுவனத்தின் ஐபிஒ வரும்போதுதான் பணியாளர்களுக்கு வெளியேறுவதற்கு வாய்ப்பு கொடுப்பதுதான் வழக்கம். ஆனால், அதனை நாங்கள் மாற்ற வேண்டும் எனக் கருதினோம்.
கடந்த முறை சுமார் 300 கோடி ரூபாய் அளவில் பணியாளர்களின் பங்குகள் விற்பனை செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டன. சுமார் 400 பணியாளர்கள் இதில் கலந்துகொண்டார்கள். இதில், சுமார் 70 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் இந்தியாவில் உள்ளனர். 250 நபர்கள் பெரும் பணத்தை (கோடி ரூபாய் அளவுக்கு) தொகையை ஈட்டியிருக்கிறார்கள்.
“தற்போது சென்னையில் சுமார் 200 நபர்கள் இருக்கிறார்கள். இன்னும் ஓர் ஆண்டில் சென்னையில் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 500க்கு மேல் இருக்கும். மேலும் வழக்கமான டெக்னால்ஜி நிறுவனங்கள் கொடுக்கும் ஆரம்பகட்ட சம்பளத்தை விட மூன்று மடங்குக்கு மேல் நாங்கள் கொடுக்கிறோம்,” என்று தெரிவித்தார்.
மேலும், தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் எங்களுடைய செயல்பாடுகள் இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஐரோப்பாவில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். இந்தியாவிலும் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் இதற்காக பேசி வருகிறோம் எனக் கூறினார்.
ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்குத் தேவையான சாப்ட்வேரை வழங்குகிறது Tekion. ஜெனரல் மோட்டார்ஸ், பிஎம்டபிள்யூ, நிசான் உள்ளிட்ட பல சர்வதேச நிறுவனங்கள் டெகியான் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக உள்ளனர் என கூறினார்.
ஐபிஓ குறித்த கேள்விக்கு,
“ஐபிஓ என்பது இலக்கல்ல. அது பயணத்தின் ஒரு அங்கம். இப்போதுதான் முதலீட்டை பெற்றிருக்கிறோம். தற்போதைக்கு தேவையான நிதி இருக்கிறது. தவிர முதலீட்டாளர்கள் வெளியேறுவதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. அதனால் இன்னும் சில ஆண்டுகளுக்கு ஐபிஒ இல்லை. கடந்த சில ஆண்டுகளாக 250 சதவீத வளர்ச்சி அடைந்துவருகிறோம். அடுத்த சில ஆண்டுகளுக்கு இதே வளர்ச்சியை தக்க வைக்க வேண்டும். 2030-ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் நிறுவனமாக மாற இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறோம்,” என ஜெய் தெரிவித்தார்.
ஏற்கெனவே வெளியேறியவர்கள் தவிர மேலும் சுமார் 700 நபர்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வைத்திருக்கிறார்கள்.
பணியாளர்களுக்கு உடனுக்குடன் வெளியேறும் வாய்ப்பு வழங்குவது பணியாளர்களுக்கு மட்டும் நல்லதல்ல. இதன் மூலம் பணியாளர்களை தக்க வைக்க முடியும் என்பதால் நிறுவனங்களுக்கும் நல்லதுதான்.