2020-யை வளர்ச்சிக்கான நம்பிக்கையுடன் எதிர்நோக்கும் ஆட்டோமொபைல் துறை!
பொருளாதாரம் தேக்க நிலையில் இருந்து மீளும் எனும் நம்பிக்கை சார்ந்து இந்திய ஆட்டோமொபைல் துறையும் வளர்ச்சிக்கான திருப்பத்தை எதிர்நோக்கியுள்ளது.
வரலாறு காணாத தேக்க நிலையின் தாக்கத்தை எதிர்கொண்ட, இந்திய ஆட்டோமொபைல் துறை, சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய மற்றும் மேம்பட்ட மாடல்களின் உதவியுடன், அடுத்த நிதியாண்டில் வளர்ச்சியை எதிர் நோக்கியுள்ளது.
பொருளாதாரமும் தேக்க நிலையில் இருந்து மீளும் எனும் நம்பிக்கை சார்ந்து அமைந்துள்ள இந்த எதிர்பார்ப்பு, வாடிக்கையாளர்களை மீண்டும் ஷோரூம்கள் நோக்கி ஈர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், BS-VI நெறிமுறைக்கு மாறுவதில் உள்ள சவால்கள் மற்றும் புதிய வாகனங்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிப்பது, வாகனங்கள் விலையை அதிகரிக்கச்செய்யும் என்று கருதப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தியாவின் முன்னணி ஆட்டோ கண்காட்சி நடைபெற உள்ள நிலையில், ஆட்டோமொபைல் துறை, இந்த கண்காட்சியை வளர்ச்சி மாற்றத்திற்கான மேடையாக எதிர்நோக்குகிறது. கடந்த பண்டிகைக் காலத்திற்கு முன் இத்துறையில் தேக்க நிலை துவங்கி தொடர்கிறது.
இரு சக்கர வாகனங்கள், கார்கள், டிரக்குகள் என அனைத்து வாகன பிரிவுகளிலும் தேக்க நிலை நிலவுகிறது. இதன் காரணமாக, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2019-20ல் வாகனங்கள் அனுப்பப் பட்டது 13 முதல் 17 சதவீத சரிவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விற்பனை சரிவு, பல நிறுவனங்களுக்கு சிக்கலை ஏற்படுத்து, அவற்றின் உற்பத்தி திட்டங்களை பாதித்தது. டீலர்ஷிப் நிறுவனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் நிறுவனங்கள் உள்பட இத்துறையில் 3.5 லட்சம் பேர் வேலை இழந்தனர்.
தொடரும் சிக்கல்களை மீறி இத்துறைக்கு நம்பிக்கை கீற்று இல்லாமல் இல்லை. இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (எஸ்.ஐ.ஏ.எம்) 2020-21 ல் நல்ல திருப்பத்தை எதிர்பார்க்கிறது.
"BS-VI நெறிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு, புதிய மேடைகள் உலகம் முழுவதும் கிடைக்க உள்ள நிலையில் 2020 சுவாரஸ்யமான ஆண்டாக இருக்கும்,” என்று எஸ்.ஐ.ஏ.எம் தலைவர் ராஜன் வதேரா கூறினார்.
நம்பிக்கை அடிப்படை
"இந்திய பொருளாதாரம் புத்தாண்டின் துவக்கத்தில் மீட்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிய மாடல்கள் அறிமுகம் ஆக உள்ளது வளர்ச்சிக்கு வலு சேர்க்கும்’ என்று வதேரா கூறினார்.
அடுத்த நிதியாண்டின் 2வது காலாண்டு முதல் சேவைத்துறை வளர்ச்சியை சந்திக்கும் என்றும், இதன் தாக்கத்தை 3வது காலாண்டு முதல் உணரலாம் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக வாகனங்கள் விலை 10 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ள சூழலில், இதன் காரணமாக மேலும் தாக்கம் இருக்கலாம் என கருதப்படுகிறது.
"இந்த கூடுதல் விலையின் தாக்கத்தை சமாளிக்க, ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும், வாகனங்களை மாற்றுவதற்கான சலுகை சார்ந்த கொள்கைகளையும் அறிமுகம் செய்ய அரசிடம் எஸ்.ஐ.ஏ.எம் கோரிக்கை வைத்துள்ளதாக வதேரா கூறுகிறார்.
இந்த இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட்டால், ஆட்டோ துறை வளர்ச்சிக்கு உதவும் என்று அவர் கூறினார்.
வதேராவின் நம்பிக்கையை ஆதரிக்கும், மாருதி சுசூகி இந்தியா நிர்வாக இயக்குனர் கெனிச்சி அயுகவா, 2020ம் ஆண்டு சிறப்பானதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார்.
இருப்பினும் அயுகவா எச்சரிக்கை கருத்தையும் தெரிவிக்கிறார்.
"எப்போது வளர்ச்சி மீட்சி உண்டாகும் என்பதை கணிப்பது கடினமாக இருந்தாலும், இந்தியா ஆட்டோமொபைல் துறையின் நீண்ட கால வளர்ச்சி கதை தொடர்கிறது,” என்கிறார் அவர்.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குனர் மற்றும் சி.இ.ஓ எஸ்.எஸ்.கிம், “BS-VI நெறிமுறைகள் நிறைவேற்றம் காரணமாக, முதல் சில மாதங்களுக்கு, வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிகள், சூழலை புரிந்து கொள்ள அவகாசம் தேவைப்படும். எனவே இரண்டாம் காலாண்டில் இருந்து வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்,” என்கிறார்.
ஹோண்டா கார்ஸ் இந்தியா தலைவர், சி.இ.ஈ ககு நகானிஷி, துறை ஏற்கனவே சரிவின் இறுதியை தொட்டுவிட்டதாக கூறுகிறார்.
"வளர்ச்சி மீட்சியின் வேகம் எப்படி இருக்கும் என்பது தெரியாவிட்டாலும், அடுத்த நிதியாண்டு முதல் நிலைமை மேம்படும். BS-VI நெறிமுறைகளுக்கு மாறிய பிறகு, அடுத்த பண்டிகைக் காலம் முதல் துறை வளர்ச்சியை சந்திக்கும்,” என்கிறார் அவர்.
BS-VI மாற்றத்திற்கான முதலீடுகள் டாடா மோட்டார்சின் மிகப்பெரிய முதலீடாக அமைந்துள்ளது. BS-VI மாற்ற திட்டம் தயாராக உள்ளது. எங்கள் புதிய BS-VI மாடல்கள் ஜனவரி மாதம் முதல் அறிமுகம் ஆகும், என்கிறார் டாடா மோட்டார்ஸ் சி.இ.ஓ குயேண்டர் பட்ஷெக்.
BS-IV கையிருப்பு 2020 மார்ச் 31க்கு பிறகு தேங்கியிருக்காத வகையில் நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் உற்பத்தியைத் திட்டமிட்டுள்ளன. மேலும், பிப்ரவரி 5ம் தேதி துவங்க உள்ள ஆட்டோ கண்காட்சியில் புதிய மாடல்கள் அறிமுகம் ஆக உள்ளன.
"ஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சி, ஆட்டோ துறைக்கான திருப்பத்தின் அடித்தளமாக அமையும் என்று வதேரா நம்பிக்கை தெரிவிக்கிறார். தூய்மையான வாகனங்கள் தவிர, மின் வாகனங்கள் மற்றும் ஹைபிரீட் வாகனங்கள் இந்த கண்காட்சியின் ஈர்ப்பாக அமையும் என்கிறார்.
இந்த கண்காட்சியில் மொத்தம் 60 புதிய அறிமுகங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் கிரேட் வால் மோட்டர் கம்பெனி மற்றும் பர்ஸ்ட் ஆட்டோமேட்டிவ் ஒர்க்ஸ், எம்ஜி மோட்டார்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் அறிமுகம் ஆக உள்ளன.
மாரூதி சுசூகி, ஹுண்டாய், எம்&எம், டாடா மோட்டார்ஸ், கியா உள்ளிட்ட நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்க உள்ளன. எனினும், ஹோண்டா, டோயோட்டா, போர்டு, ஆடி, வோல்வோ உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்கவில்லை. பஜாஜ் ஆட்டோ மற்றும் டிவிஎஸ் மோட்டார் உள்ளிட்ட இரு சக்கர வாகன நிறுவனங்களும் பங்கேற்கவில்லை.
செய்தி: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்