பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இலவச சானிட்டரி பேட்களை வழங்க பேட்வங்கி தொடங்கிய நபர்!
உத்திரப்பிரதேசத்தின் பரேலியில் உள்ள சித்ரான்ஷ் சக்சேனாவின் ’பேட்பேங்க்’ ஏழைப் பெண்களுக்கு சானிட்டரி பேட்களை இலவசமாக வழங்குகிறது. இதுவரை 148 பெண்கள் இந்த வங்கியில் பதிவு செய்து துணி பேட்களுக்கு பதிலாக சானிட்டரி பேட்களை பயன்படுத்துகின்றனர்.
அருணாச்சலம் முருகானந்தம் இந்திய கிராமப்புறங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மலிவு விலையில் சானிட்டரி பேட்களை தயாரித்து வழங்குகிறார். இதைப் பின்னணியாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட படம்தான் அக்ஷய்குமார் நடிப்பில் வெளியான ‘பேட்மேன்’. தற்போது இந்தத் திரைப்படத்தைக் கண்டு உந்துதல் பெற்ற 26 வயது சித்ரான்ஷ் சக்சேனா பேட்வங்கி (PadBank) ஒன்றைத் திறந்துள்ளார்.
உத்திரப்பிரதேசத்தின் பரேலியைச் சேர்ந்தவர் சித்ரான்ஷ். இவர் பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இலவசமாக சானிட்டரி பேட்களை வழங்க 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் ‘மை பேட்பேங்க்’ என்கிற அறக்கட்டளையைத் துவங்கினார். கிராமப்புறங்களில் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த வங்கி துவங்கப்பட்டதாக ’Patrika’ தெரிவிக்கிறது.
இந்த வங்கி 15 உறுப்பினர்கள் அடங்கிய குழுவாக வளர்ந்துள்ளது. தனிநபர்கள், கார்ப்பரேட்கள், பகுதி நேரமாக பணிபுரியும் மாணவர்கள் போன்றோர் அடங்கிய இந்தக் குழு சித்ரான்ஷின் முயற்சிக்கு உதவியது. சித்ரான்ஷ் சக்சேனா ’மை பேட்பேங்’ குறித்து என்டிடிவி உடனான உரையாடலில் தெரிவிக்கையில்,
”சமூகப் பணியில் ஈடுபடுவதற்கு முன்பு தகவல் தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தேன். நலிந்த சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு உதவவுவதிலும் சமூக நலனில் பங்கேற்பதிலும் எனக்கு எப்போதும் அதிக ஆர்வம் இருந்து வந்தது. பேட்மேன் திரைப்படத்தைப் பார்த்த தருணம் எனக்கு உந்துதல் ஏற்பட்டது. சமூகத்தில் நிலவும் கட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிவதில் ஆண்கள் பங்களிக்கமுடியும் என்பதை அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கை எனக்கு உணர்த்தியது,” என்றார்.
மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை அதிகளவிலான பெண்களுக்கு ஏற்படுத்தவேண்டும் என்பதே சித்ரான்ஷின் நோக்கம்.
இவரது பேட் வங்கிக்கு யார் வேண்டுமானாலும் சானிட்டரி பேட்களை நன்கொடையாக வழங்கலாம். அல்லது பணமாகவும் கொடுக்கலாம். சித்ரான்ஷ் இந்த முயற்சி குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்டார். அத்துடன் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் வாயிலாகவும் அதிகம் பேரைச் சென்றடைந்தார்.
பேட்பேங்க் பள்ளிகள், குடிசைப்பகுதிகள், வீடுகள் போன்ற பகுதிகளை இலக்காகக் கொண்டு மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு திட்டங்களை ஏற்பாடு செய்கிறது. மூன்று மணி நேர பயிற்சி பட்டறைக்குப் பிறகு சானிட்டரி பேட் வாங்கும் வசதி இல்லாத பெண்களுக்கு இக்குழுவினர் ஒரு பாஸ்புக்கை வழங்குகின்றனர்.
பதிவு செய்த உறுப்பினரின் வீட்டிற்கு இக்குழுவினர் ஒவ்வொரு மாதமும் சென்று எட்டு சானிட்டரி பேட்களை இலவசமாக வழங்குகின்றனர். இதுவரை 148 பெண்கள் வங்கியில் பதிவு செய்துள்ளனர். இவர்கள் துணி பேட்கள் பயன்படுத்துவதில் இருந்து சானிட்டரி நேப்கின்கள் பயன்பாட்டிற்கு மாறியுள்ளனர்.
தன்னார்வலராக செயல்படும் அனுபவம் குறித்து நிகிதா சிங் கவுர் என்டிடிவி உடன் பகிர்ந்துகொள்கையில்,
”நான் பேட்பேங்க் செயல்பாடுகளில் பங்களிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களிடையே மாதவிடாய் என்பது வழக்கமான ஒன்றுதான் என்றும் அதில் வெட்கப்பட ஏதும் இல்லை என்றும் எடுத்துரைக்கிறோம். மாதவிடாய் சமயத்தில் பயன்படுத்த சானிட்டரி பேட் வாங்கித் தருமாறு அம்மாவிடம் கேட்பதற்கு பதிலாக அப்பாவிடம் கேட்கும் துணிச்சல் ஒவ்வொரு பெண்ணுக்கும் வரவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்,” என்றார்.
சித்ரான்ஷ் சக்சேனா ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளார். இதில் ஆண்களுக்கான பயிற்சிப் பட்டறைகள் ஏற்பாடு செய்யப்படும். மேலும் ’மாதவிடாய் குறித்து பேசுவோம்’ (Let’s Talk About Periods) என்கிற ஆன்லைன் பிரச்சாரத்தையும் துவங்கியுள்ளார். இதில் பின்தொடர்பவர்கள் 30 விநாடி வீடியோவை உருவாக்கி மாதவிடாய் சுகாதாரம் குறித்து பேசலாம். சுற்றுச்சூழலுக்கு உகந்த சானிட்டரி நாப்கின்கள், மாதவிடாய் கழிவுகள், மாதவிடாய் குறித்த தகவல்கள், மாதவிடாய் தொடர்பான பழங்கதைகள் போன்றவற்றை மையமாகக் கொண்டு வீடியோ தயாரிக்கலாம். சித்ரான்ஷ் சக்சேனா தனது பயணம் குறித்து விவரிக்கையில்,
”ஆரம்பத்தில் எங்களது முயற்சியை பலர் ஏளனம் செய்து அவமானப்படுத்தினார்கள். இன்று எங்களது வங்கி செயல்பாடுகளில் பங்களிக்க பலர் ஆர்வம் காட்டுகின்றனர். எங்களது இந்தப் பயணம் பிரம்மாண்டமானதாகும்,” என்றார்.
கட்டுரை : THINK CHANGE INDIA