இந்தியாவின் வளர்ச்சிக் கதை இப்போது தான் துவங்கியுள்ளது: அமிதாப் கந்த்
நகரமயமாக்கல் செயல்முறை, உள்கட்டமைப்பு உருவாக்கம் மற்றும் வளர்ச்சிப் பாய்ச்சலுக்கான தொழில்நுட்ப பயன்பாடு இப்போது தான் துவங்கியுள்ளது என நிட்டி ஆயோக் சி.இ.ஓ தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் மோடி அரசால் கொண்டு வரப்பட்டுள்ள தொலைநோக்குள்ள, லட்சிய சீர்திருத்தங்கள் நீண்ட கால நோக்கில் இந்தியாவை போட்டித்தன்மை மற்றும் உற்பத்தித் திறன் மிக்க நாடாக உருவாக்கும் என்று நிட்டி ஆயோக் சி.இ.ஓ அமிதாப் கந்த் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் பாஸ்டன், நியூயார்க், வாஷிங்டன் உள்ளிட்ட மூன்று நகரங்களில் சுற்றுப்பயணம் செய்து, கல்வியாளர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனர்கள், வர்த்தகத் தலைவர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து பேசிய அமிதாப் காந்த்,
"இந்தியா தொடர்பாக ஒரு நல்ல எண்ணம் இருக்கிறது, ஜி.எஸ்.டி, திவால் சட்டம், ரியல் எஸ்டேட் சீர்திருத்தம், நேரடி மானியம் உள்பட இந்திய பொருளாதாரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படையான சீர்திருத்தங்கள், நீண்ட கால நோக்கில் இந்தியாவை போட்டி மிக்கதாக, செயல்திறன் வாய்ந்த பொருளாதாரமாக உருவாக்கும் என இங்குள்ளவர்கள் நம்புகின்றனர்,” என்று பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார்.
இந்திய வளர்ச்சிக் கதை இப்போது தான் துவங்கியிருக்கிறது என்றும் அவர் கூறினார்.
"நம்முடைய நகரமயமாக்கல் செயல்முறை, உள்கட்டமைப்பு உருவாக்கம். வளர்ச்சிகான பாய்ச்சலுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது ஆகியவை இப்போது தான் துவங்கியுள்ளது. இப்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் அடிப்படையில் பெரிய வளர்ச்சியை அடுத்த 30 ஆண்டுகளில் நீங்கள் உணரலாம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சி தொடர்பான புள்ளி விவரங்கள் மிகவும் குறைவான வளர்ச்சியை சுட்டிக்காட்டுவது பற்றி கேட்ட போது, இவை குறுகிய கால காரணிகள் என்றும், இந்தியா 5 லட்சம் டாலர் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்றும் அமிதாப் கந்த் தெரிவித்தார்.
"2025ல் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உருவாக்குவது தான் அரசின் இலக்கு. அதை நோக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இதை நிறைவேற்றி இந்தியாவை உலகின் எளிதான, எளிமையான நாடாக உருவாக்குவோம்,” என்றார்.
"உலக வங்கியின் எளிதான வர்த்தகம் செய்யும் நாடுகள் பட்டியலில், அடுத்த ஆண்டு முதல் 50 இடத்திற்குள் முன்னேற உறுதியாக உள்ளோம். மூன்று ஆண்டுகளில் முதல் 25 இடத்திற்குள் முன்னேறுவோம். இந்த இலக்கு எட்டக்கூடியதே,” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
முன்னதாக, கூகுளுடன் இணைந்து, இந்திய அமெரிக்க வர்த்தகக் கவுன்சில் நடத்திய நிகழ்ச்சியில், அமிதாப் கந்த், இந்தியா இன்னவேஷன் இண்டக்சை வெளியிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், இந்தியா, எளிதாக வர்த்தகம் செய்யும் நாடாக முன்னேறிக்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
வர்த்தகம் செய்ய எளிமையான நாடுகள் பட்டியலில் அடுத்த ஆண்டுக்குள் முதல் 50 இடங்களை பிடிக்கவும், மூன்று ஆண்டுகளில் 25 இடங்களுக்குள் முன்னேறவும், அதிகாரிகளுக்கு பிரதமர் சவாலான இலக்கை கொடுத்துள்ளார், என்று அமிதாப் காந்த கூறினார்.
"உலக சப்ளை செயினில் இந்தியா ஒருங்கிணைந்த பங்கு வகிக்க வேண்டும் என்பதில் ஆழமான நம்பிக்கைக் கொண்டுள்ளோம். எனவே பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீடுகளுக்கு இந்தியா திறந்து விட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது,” என்றும் அவர் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பிறகு, இந்தியா உலக அளவில் மிகவும் முறைப்படுத்தப்பட்ட நாடுகளில் ஒன்றாக உருவாகிக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
திவால் சட்டம் மூலம் வேண்டியவர்களுக்கு உதவும் முதலாளித்துவத்தை நாட்டில் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம். ரியல் எஸ்டேட் துறையில் முக்கிய சீர்த்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவற்றுடன் பயோமெட்ரிக்ஸ் மற்றும் நேரடி மானியத் திட்டங்கள் ஆகியவை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
"பல்வேறு துறைகளில் இந்தியா டிஜிட்டல்மயமாகி இருக்கிறது. இது மிகப்பெரிய மாற்றமாக அமைந்துள்ளது”.
"இதன் காரணமாக இந்தியா, செல்வம் மிக்க நாடாக உருவாகும் முன்னரே, டேட்டா செழுமை மிக்க நாடாக உருவாகியுள்ளது. இந்த டேட்டா செழுமை காரணமாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்கள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் செயல்பட்டு வருகின்றன, என்று அவர் வாஷிங்டக்கில் பேசும் போது தெரிவித்தார்.
செய்தி : பிடிஐ | தமிழில் : சைபர்சிம்மன்