பிரபல ‘தாமஸ் குக்’ நிறுவனம் திவால்: 22 ஆயிரம் ஊழியர்களின் வேலை கேள்விக்குறி!
178 ஆண்டு பாரம்பரியமிக்க பயண ஏற்பாட்டு நிறுவனமான தாமஸ் குக், கடன் சுமையால் திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் நிறுவனத்தில் பதிவு செய்த லட்சக்கணக்கான பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பயண ஏற்பாட்டு முன்னோடி நிறுவனமும், 178 ஆண்டுகள் பாரம்பரியமும் மிக்க ’தாமஸ் குக்’ நிறுவனம் கடன் சுமையால் நொடித்துப்போய் திவாலானது. இந்த திடீர் நடவடிக்கையால் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களான லட்சக்கணக்கான பயணிகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் 178 ஆண்டுகள் பழமை மிக்கது. இதன் நிறுவனரான தாமஸ் குக், பேக்கேஜ்டு டூர் எனப்படும் ஏற்பாடு செய்யப்பட்ட பயணத் திட்டத்தை அறிமுகம் செய்த முன்னோடியாக கருதப்படுகிறார்.
பயண ஏற்பாட்டுத்துறையின் முன்னோடியான தாமஸ் குக் நிறுவனம் கடந்த 78 ஆண்டுகளாக உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. இதன் பயண ஏற்பாடு திட்டங்கள் பிரபலமானவை என்பதோடு, இதன் பயண விமானங்களும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பிரபலமானவை.
இந்நிலையில், தாமஸ் குக் நிறுவனம் அண்மைக்காலமாக கடன் சுமையால் தவித்து வந்தது. பிரெக்ஸிட் சிக்கலுக்குப்பின் இதன் முன்பதிவுகள் குறைந்த பிரச்சனை உண்டானதாக கூறப்படுகிறது.
இதனிடையே, நிறுவனம் கடன் நெருக்கடியை சமாளிக்க தனது பங்குதாரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. பேச்சு வார்த்தை காரணமாக நிதி பெறுவதற்கான ஏற்பாடு சாத்தியமானாலும் கடைசி நேர நெருக்கடி காரணமாக, நிறுவனம் கடன் சுமையால் திவாலாகும் சூழ்நிலை உண்டானது.
நிறுவனம் 250 மில்லியன் டாலர் நிதியுதவியை எதிர்பார்த்து இருப்பதாகவும், இது தொடர்பாக பேச்சு நடைப்பெற்று வருவதாகவும் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்திருந்த நிலையில், இந்த முயற்சிகள் தோல்வி அடைந்து நிறுவனம் திவாலானது.
நிறுவன தலைமை அதிகாரி, பீட்டர் பிராங்க்ஹாசர், பயண ஏற்பாட்டை அறிமுகம் செய்து, லட்சக்கணக்கானோருக்கு சுற்றுலாவை சாத்தியமாக்கிய நிறுவன வரலாற்றில் இது மிகவும் சோகமான நாளாக அமைவதாக தெரிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மற்றும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாமஸ் குக் நிறுவன பங்குகள் வர்த்தகம் நிறுத்தப்படுவதாகவும், நிறுவன விமான சேவைகள் நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் திவாலானதால் லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பயணத் திட்டத்தை முன்பதிவு செய்து, சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் லட்சக்கணக்கான பிரிட்டன் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு நாடுகளில் உள்ள பிரிட்டன் பயணிகளை இலவசமாக நாட்டுக்கு அழைத்து வர பிரிட்டன் விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது. நிறுவனத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தங்கள் வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தாமஸ் குக், நிறுவனத்தின் இந்திய நிறுவனம் தனி நிறுவனமாக செயல்பட்டு வருவதால் இந்த திவால் நடவடிக்கையால் பாதிக்கப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தாமஸ் குக் இந்தியா நிறுவனம், கனடாவைச்சேர்ந்த பேரிபேக்ஸ் பைனான்சியல் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது,
தாமஸ் குக், நிறுவனர் தாமஸ் குக், 1841 ம் ஆண்டு இங்கிலாந்தில், ரெயில் போக்குவரத்து அறிமுகமான காலத்தில் ஒரு நாள் ரெயில் சுற்றுலாத் திட்டத்தை துவக்கினார். அதன் பிறகு நிறுவனம் மாபெரும் பயண ஏற்பாட்டு நிறுவனமாக உருவானது.
தொகுப்பு: சைபர்சிம்மன்