செப் 23 முதல் இந்தியாவில் ‘ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர்’ - டிம் குக் அறிவிப்பு!
ஃபிளிப்கார்ட் போன்ற மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் மூலம் தனது சாதனங்களை இந்தியாவில் விற்பனை செய்து வரும் ஆப்பிள் நிறுவனம் முதல் ஆன்லைன் ஸ்டோரை அறிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம், தனது சாதனங்களை அனைத்தையும் விற்பனை செய்யும் வகையில் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நேரடி ஆதரவு அளிக்கும் வகையில் இந்தியாவில் ஆன்லைன் ஆப்பிள் ஸ்டோரை செப்டம்பர் 23ம் தேதி துவக்குவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் இந்த ஆண்டு ஆன்லைன் ஸ்டோர் துவக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு விற்பனை நிலையம் அமைக்கப்படும் என்றும் ஆப்பிள் சி.இ.ஓ டிம் குக் பிப்பரவரி மாதம் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், வாடிக்கையாளர்கள் தாங்கள் நேசிப்பவர்கள் மற்றும் தங்களைச் சுற்றியுள்ள உலகுடன் தொடர்பு கொள்வதை எத்தனை முக்கியமாக கருதுகின்றனர் என்பதை அறிவோம் என டிம் குக் ஒரு டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் மூலம் தனது சாதனங்களை விற்பனை செய்து வருகிறது.
ஒற்றை பிராண்ட் சில்லறை விற்பனைக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கடந்த ஆண்டு, அரசு நேரடி அந்நிய முதலீட்டிற்கான நெறிமுறைகளை மாற்றி அமைத்தது. ஆன்லைன் விற்பனையை துவக்கும் முன், பெளதிக விற்பனை நிலையம் அமைக்க வேண்டும் எனும் நிபந்தனை தளர்த்தப்பட்டது.
இதனையடுத்து ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஆன்லைன் விற்பனை நிலையம் அமைக்க ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தது. ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் மூலம் வாடிக்கையாளர்கள், ஆப்பிள் வல்லுனர்கள் வழிகாட்டுதலோடு, சாதனங்களை வாங்கலாம்.
உலகம் முழுவதும் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களின் பிரிமியம் அனுபவத்தை இந்திய வாடிக்கையாளர்கள் பெறுவார்கள் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள், சேவை தொடர்பான தகவல்களை ஆங்கிலம் மற்றும் இந்தியில் பெறலாம்.
“இந்தியாவில் விரிவாக்கம் செய்வதை பெருமையாகக் கருதுகிறோம். வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்கள் சமூகத்திற்கு தேவையான ஆதரவு அளிப்போம்,” என்று ரீடைல் பிரிவு துணைத்தலைவர் Deirdre O’Brien தெரிவித்துள்ளார்.
“தொடர்பு கொள்ளவும், கற்பதில் ஈடுபடவும், தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும் எங்கள் பயனாளிகள் தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதை அறிவோம். ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரை இந்தியாவுக்கு கொண்டு வருவதன் மூலம் இந்த முக்கியமான சூழலில் ஆப்பிளின் சிறந்த அனுபவத்தை அளிக்கிறோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
நிதி வாய்ப்புகள் மற்றும் டிரேட் இன் வாய்ப்புடன், ஆப்பிள் ஸ்டோர் பலவகையான வாய்ப்புகளை அளிக்கிறது. மாணவர்கள் மேக் அல்லது ஐபேடு வாங்கும் போது சிறப்பு சலுகைகள் பெறலாம்.
பண்டிகைக் காலத்திற்கு ஆப்பிள் குறிப்பிட்ட சாதனங்களுக்கு, ஆங்கிலம், வங்கம், தமிழ், குஜராத்தி, இந்தி உள்ளிட்ட மொழிகளில் தனிப்பட்ட வாசகங்கள் பொறித்த பேக்கிங்கை அளிக்க உள்ளது.
ஆதாரம்: பிடிஐ | தமிழில் –சைபர்சிம்மன்