‘சோலார் இஸ்திரி பெட்டி’ கண்டுபிடித்த திருவண்ணாமலை மாணவிக்கு ஸ்வீடன் நாட்டு விருது!
சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்துள்ள திருவண்ணாமலை மாணவி வினிஷா உமாசங்கருக்கு ஸ்வீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழலியல் அறக்கட்டளை சார்பில் இளம் கண்டுபிடிப்பாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்துள்ள திருவண்ணாமலை மாணவி வினிஷா உமாசங்கருக்கு ஸ்வீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழலியல் அறக்கட்டளை சார்பில் இளம் கண்டுபிடிப்பாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
வினிஷா உமாசங்கர் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். இவர் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
“எனக்கு சிறு வயது முதலே அறிவியலில் ஆர்வம் அதிகம். அப்பா எனக்கு நிறைய புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பார். அறிவியல் சார்ந்த புத்தகங்கள் படித்து பல தகவல்களைத் தெரிந்துகொண்டேன்,” என்றார் வினிஷா.
சூரிய சக்தியில் இயங்கும் இஸ்திரி பெட்டியை உருவாக்கவேண்டும் என்கிற எண்ணம் இவருக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்தார். இரண்டு மாதம் செலவிட்டு இதை வடிவமைத்தார்.
சூரிய சக்தியில் இயங்கும் இஸ்திரி பெட்டி 100 ஏ.ஹெச் திறன் கொண்ட மின்கலனுடன் இணைக்கப்பட்டிருக்கும். 5 மணி நேர சூரிய ஆற்றல் கிடைத்தால் முழுமையான மின்னேற்றம் அடைந்துவிடும். இதன் மூலம் 6 மணி நேரம் வரை தொடர்ந்து இஸ்திரி செய்ய முடியும்.
இந்த இஸ்திரி பெட்டியின் வடிவமைப்பை குஜராத்தில் உள்ள நேஷனல் இன்னோவேஷன் அறக்கட்டளையின் பொறியாளர்கள் வடிவமைத்து காப்புரிமை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் காப்புரிமை கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய கொரோனா பெருந்தொற்று சூழலைக் கருத்தில்கொண்டு வினிஷா தானாக இயங்கக்கூடிய அத்தியாவசியப் பொருட்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
வினிஷா சூரிய சக்தியில் இயங்கக்கூடிய இஸ்திரி பெட்டியைக் கண்டுபிடித்ததற்காக ஸ்வீடன் துணைப் பிரதமர் கலந்துகொள்ளும் இணைய வழி நிகழ்வில் இவருக்கு பட்டயமும் பதக்கமும் வழங்கப்பட உள்ளன.
கட்டுரை: Think Change India