Trans Kitchen - வட சென்னையை கலக்கும் திருநங்கைகள், திருநம்பிகள் இணைந்து நடத்தும் உணவகம்!
திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கும், அவர்கள் சமூகத்துடன் ஒன்று கலப்பதற்கும் உதவும் விதமாக நகரின் முக்கிய பகுதிகளில் உணவகங்களை திறக்க உள்ளதாக ஜீவா தெரிவித்துள்ளார்.
திருநங்கைகள் என்றாலே பிச்சை எடுப்பவர்கள், பாலியல் தொழிலில் ஈடுபடுவர்கள் என்ற மக்களின் எண்ணத்தை மாற்றும் வகையில், கல்வி, கலை, இலக்கியம், மருத்துவம், சட்டம் என பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர்.
அதற்கு ஏற்றார் போல் மத்திய, மாநில அரசுகளும் கல்வி, வேலைவாய்ப்பு, கடன் உதவி ஆகியவற்றை வழங்கி வருகின்றன. தற்போது அடுத்தக்கட்டமாக சொந்தமாக தொழில் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
தற்போது பரபரப்பான சென்னை மாநகரின் கொளத்தூர் பகுதியில் அமைந்துள்ள திருநங்கைகளும், திருநம்பிகளும் இணைந்து நடத்தி வரும் 'Trans Kitchen' என்ற உணவகம் கவனம் ஈர்த்து வருகிறது.
ட்ரான்ஸ் கிச்சன்:
நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறக்கூடிய மக்கள் அதிகம் வசித்து வரும் வடசென்னையின் புறநகர் பகுதியான கொளத்தூரில் சுத்தமாகவும், குறைவான விலையிலும் தரமான உணவை 'Trans Kitchen' என்ற உணவகம் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். இந்த உணவகத்தில் 5 திருநம்பிகளும், 5 திருநங்கைகளும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
கடந்த ஜனவரி 18ம் தேதி ஜீவா தனது 10 பணியாளர்களுடன் திறந்தார். திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் பணியாற்றுவதை விடவும், உணவகத்தின் சுவையும், தரமும் வாடிக்கையாளர்களை அதிக அளவில் கவர்ந்திழுந்துள்ளது. இதன் விளைவாக தற்போது ஓட்டலில் மட்டுமல்ல, திருமணம், திருவிழா போன்ற ஸ்பெஷல் தினங்களில் சமைப்பதற்கான ஆர்டர்களும் குவிந்து வருகிறது.
தனது 13 வயதில் குடும்பத்தை பிரித்த ஜீவா, திருநங்கைகள் உரிமைகள் சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். சைதாப்பேட்டையில் உள்ள சாய் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மூலம் 80 பேரை முதலில் தேர்வு செய்து, அங்கு அளிக்கப்பட்ட பயிற்சியில் நன்கு தேறிய 5 திருநங்கைகள் மற்றும் 5 திருநம்பிகளை ஜீவா தனது ட்ரான்ஸ் கிச்சனில் இணைத்துள்ளார்.
நிதியுதவி கிடைத்தது எப்படி?
சென்னை டிரான்ஸ் கிச்சனை தொடங்க எச்எஸ்பிசி, யுனைடெட் வே ஆஃப் சென்னையின் நட்ஜ் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் உடனடியாக நிதியளிக்க ஒப்புக்கொண்டுள்ளது.
“எங்கள் பாலினத்தின் காரணமாக எந்த வீட்டு உரிமையாளரும் தங்கள் கடையை எங்களுக்கு வாடகைக்கு விட முன்வரவில்லை. மாதவரம், பெரம்பூர் மற்றும் பிற சுற்றுப்புறங்களில் பொருத்தமான இடத்தில் நிறைய இடங்களில் கடை வைக்க இடம் தேடினோம். எங்களது விடாமுயற்சியால் கொளத்தூரில் உள்ள ஜிகேஎம் காலனியில் உள்ள கடை கிடைத்தது,” என்றார்.
ஒதுக்கப்பட்டவர்களாக சமூகத்தால் புறக்கணிக்கப்படும் ட்ரான்ஸ் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு நிலையான வருமானம் தருவதை ட்ரான்ஸ் கிச்சன் முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது.
ஓரங்கட்டப்பட்ட சமூகங்களின் நல்வாழ்வுக்காக செயல்படும் ’ஸ்வஸ்தி’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஜீவா இந்த உணவகத்தை உருவாக்கியுள்ளார்.
ஸ்வஸ்தியின் பிராந்திய திட்ட மேலாளரான ப்ரியா பாபு, 2019 ஆம் ஆண்டில் கோயம்புத்தூரில் முதல் டிரான்ஸ் கிச்சனை அமைத்துள்ளர். அதேபோல், 2021ம் ஆண்டு மதுரையில் மற்றொரு உணவகமும் திறக்கப்பட்டுள்ளது. தற்போது மூன்றாவது உணவகம் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.
வியாபாரம் செய்ய ஆர்வமுள்ள ட்ரான்ஸ் சமூகத்தினருக்கு உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறும் பிரியா பாபு,
“இப்போது திருநங்கைகள் மருத்துவம், சட்ட அமலாக்கம் மற்றும் அரசியல் உள்ளிட்ட பல துறைகளில் பணிபுரிகின்றனர். இதன் மூலம் திருநங்கைகள் குறித்து பொதுமக்களின் பார்வை மற்றும் அவர்களின் பாலினம் குறித்த தரக்குறைவான பேச்சுக்களிலும் மாற்றம் நிகழும் என நம்புகிறோம்,” எனக்கூறுகிறார்.
திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கும், அவர்கள் சமூகத்துடன் ஒன்று கலப்பதற்கும் உதவும் விதமாக நகரின் முக்கிய பகுதிகளில் உணவகங்களை திறக்க உள்ளதாக ஜீவா தெரிவித்துள்ளார்.
தகவல் உதவி - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
‘கரண்டி முதல் கல்லா வரை’ - மதுரையில் திருநங்கைகள் நடத்தும் ‘ட்ரான்ஸ் கிட்சன்’