‘வெடிகளை செடிகள்’ ஆக்குங்கள்; ஹபீஸ்கான் சென்னையில் செய்யும் ஓர் பசுமைப் புரட்சி!
COMMUNITREE தொடங்கிய ஹபீஸ்கான், காடுகளின் எண்ணிக்கையை நாடு முழுவதும் பெருக்குவதுதான். அதற்காக வெடித்த வெடி டப்பாக்களை சேகரித்து, அவற்றில் விதை போட்டு, செடிகளாக்கி, மரங்களாக்கி, காடுகள் உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
உலகம் முழுவதும் அமைதியும், சமாதானமும் நிலவ, சிறைச்சாலைகளை கல்விச் சாலைகளாக மாற்றுவோம். ஆயுதக் கூடங்களை பூந்தோட்டங்களாக மாற்றுவோம் எனப் பாடும் கவிஞர்களின் வார்த்தைகளை மெய்ப்பிப்பதுபோல ‘வெடிகளைச் செடிகளாக’ மாற்றும் ஓர் புதிய முயற்சியில் இறங்கியுள்ளனர் சென்னையைச் சேர்ந்த ஹபீஸ்கான் மற்றும் சுலைமான்.
COMMUNITREE என்ற பெயரில் டிரஸ்ட் ஓன்றை தொடங்கி நடத்திவரும் இவர்களின் பிரதான நோக்கமே மனிதர்களால் உருவாக்கப்படும் காடுகளின் எண்ணிக்கையை நாடு முழுவதும் பெருக்குவதுதான். அதற்கான முயற்சிகளில் இறங்கி, இன்று இந்திய அளவில் 5 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட செடிகளை நட்டு, மரங்களாக்கி, காடுகள் உருவாக்கத்தில் இந்தியாவிலேயே நம்பர் 1 ஆக இவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, ஹபீஸ்கான் நம்மிடம் பேசியபோது, பொறியியல் படித்த நான், பருவம் தவறி மழை பெய்வது, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது, வெயில் சுட்டெரிப்பது போன்ற பருவநிலை மாற்றக் காரணங்கள் மற்றும் சுற்றுச்சுழலை பாதிக்கும் பல்வேறு காரணிகளை குறித்தும், இவற்றைச் சீர் செய்ய என்ன செய்யவேண்டும் என்பது குறித்தும் சிந்தித்து வந்தேன்.
”அப்போது மரம் வளர்ப்பு ஓன்றே இதற்கான தீர்வு என்பதை முடிவு செய்தேன். இதையடுத்து, மனிதர்களால் மட்டுமே உருவாக்கப்படும் காடுகளின் பரப்பளவை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தேன்,” என்கிறார்.
நர்ஸரி ஓன்றை அமைத்து, அதன் மூலம் செடிகளை வளர்த்து, விரும்பி கேட்பவர்களுக்கு இலவசமாக வழங்கி வந்துள்ளார் ஹபீஸ்கான். பாலித்தீன் கவர்கள் மக்கா குப்பை, இவை மண்ணின் வளத்தை பாதிக்கும் என்பதால் மண்தொட்டி, மூங்கில் துண்டுகள் மற்றும் பேப்பர் தொட்டிகளில் செடிகளை வளர்த்துள்ளனர்.
ஆனால் இவை மிகுந்த செலவு பிடிக்கும் விஷயங்களாக இருந்ததால் எனன செய்வது என சிந்தித்து வந்தவர்களுக்கு கடந்தாண்டு தீபாவளியன்று வெளியே சென்றபோதுதான், வெடித்த வெடிகளின் காலி டப்பாக்களை நாம் ஏன் செடி வளர்க்கும் கலமாக பயன்படுத்தக் கூடாது என்ற யோசனை எழுந்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறும்போது,
“தீபாவளிக்கு மறுநாள் சாலைகளில் சென்றபோது, சாலைகள் முழுவதும் வெடித்த வெடிகளின் குப்பைகள் குவிந்து கிடந்தன. அவற்றில் பெரிய பெரிய வெடிகளை வெடித்தபின் குப்பையாக கிடக்கும் பெரிய டப்பாக்களைப் பார்த்தேன். அப்போதுதான் இவற்றை ஏன் நாம் செடிகளை வளர்க்கும் தொட்டியாக பயன்படுத்தக் கூடாது என்ற சிந்தனை தோன்றியது. உடனே வண்டியை எடுத்துக் கொண்டுபோய், சாலையில் கிடந்த அவற்றையெல்லாம் சேகரித்து வைத்தேன்,” என்கிறார்.
பொதுவாக வெடி வெடித்த பின்பும் சிறிதளவு பாஸ்பரஸ், கந்தகம் போன்ற வேதிப் பொருள்கள் அந்த வெடி டப்பாக்களில் எஞ்சியிருக்கும். இவை செடியின் வளர்ச்சியை பாதித்துவிடக்கூடாது என்பதற்காக, அவற்றை முதலில் பசுஞ்சாணத்தை தண்ணீரில் கரைத்து சுத்தம் செய்து, பின் அந்த டப்பாக்களில் மண் நிரப்பி, விதை போட்டு பராமரித்து, செடி வளர்க்கிறோம்.
3 அடி வரை செடி வளர்ந்தபின், அதனை அப்படியே மண்ணில் வைத்துவிட்டால் நாளடைவில் நன்றாக வளரத் தொடங்கிவிடும். அந்த வெடி டப்பாவும் மண்ணோடு மண்ணாகச் சேர்ந்து மக்கி விடுகிறது என்கிறார்.
இந்த யோசனையை நாடு முழுவதும் உள்ள மக்கள் செயல்படுத்தினால் மண்ணுக்கு கேடு விளைவிக்கும் பாலித்தின் பையின் பயன்பாடு, மரக்கன்று வளர்ப்பில் தடுக்கப்படுகிறது.
மண்ணின் வளம் பாதுகாக்கப்படுகிறது. குப்பைகளாக குவியும் வெடிகளின் ஓர் பகுதி மறுசுழற்சியாக செடி வளர்க்கும் தொட்டியாக மாறுகிறது. மரம் வளர்க்கும் பணியையும் மேற்கொண்டது போல் ஆகிறது என்கிறார் ஹபீஸ்கான்.
இதுவரை 5.6 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ள இவர்கள், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 34 பகுதிகளைத் தேர்ந்தெடுத்து காடுகளை உருவாக்கி வருகின்றனர்.
இப்பணியில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இவர்கள் நடும் மரக்கன்றுகளை குறைந்தது மூன்று ஆண்டுகள் வரை, முறையாக பராமரித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2018ஆம் ஆண்டு 1 லட்சத்து 70 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டோம். 2019ல் 3 லட்சம் மரக்கன்றுகளை நட்டோம். நிகழாண்டு 4 லட்சம் மரக்கன்றுகளை நடுவதை இலக்காக கொண்டிருந்தோம். ஆனால் கொரானா ஏற்படுத்திய பாதிப்பால் இதுவரை 1 லட்சம் மரக்கன்றுகளை மட்டுமே நட முடிந்துள்ளது.
மேலும், கடந்தாண்டு மட்டும் சுமார் 27 ஆயிரம் பெரிய வெடி டப்பாக்களை மரக்கன்று நடும் கலயங்களாக மாற்றியுள்ளோம். நிகழாண்டும் அதுபோல, வெடி வெடித்த டப்பாக்களை சேகரிக்கும் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்கிறார்.
சுற்றுச்சூழல் தொடர்பான அனைத்து விசயங்களிலும் கவனம் செலுத்தும் ஹபீஸ்கான், குப்பைகளை பெற்றுக் கொண்டு அரிசி வழங்குவது, குப்பைகளைக் கொண்டு கலைப் பொருள்களை உருவாக்குவது, வண்ணத்துப்பூச்சிகளை வீடுகளை நோக்கி வரச் செய்வது என பல்வேறு வித்தியாசமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
காடுகள் உருவாக்கத்தில் இந்திய அளவில் ஓர் புரட்சியையே ஏற்படுத்தி விடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் இவர், எதிர்கால தலைமுறைகளின் நல்வாழ்வுக்கு, நம் அனைவரின் இன்றியமையாத பொறுப்பும்கூட இது என அனைவரும் உணரும் வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்கிறார்.
உங்கள் வெடி டப்பாக்களை இவர்களிடம் கொடுக்க அழைத்திடுங்கள்: Communitree - 9840575555
ஹேப்பி தீபாவளி... நீங்களும் உங்கள் வெடிகளை செடிகள் ஆக்குங்களேன்...