#100Unicorns | 'யுனிக்' கதை 18 - Paytm Mall: கேஷ் பேக் மாடலில் கோலோச்சிய விஜய் சேகர் சர்மா!
இந்தியாவில் ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வாரி வழங்கி வாடிக்கையாளர்களிடையே ஆதிக்கம் செலுத்தி வரும் அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு போட்டியாக பேடிஎம் கொண்டுவந்த ஆன்லைன் ஷாப்பிங் தளமான ‘பேடிஎம் மால்’ (Paytm Mall) கதையே இந்த அத்தியாயம்.
#100Unicorns | 'யுனிக் கதை 18 | Paytm Mall
பேடிஎம் (
) என்ற வார்த்தையை சொன்னால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது, பில் பேமென்ட், ரீசார்ஜ் போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளே. ஆனால், இந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளைத் தவிர ஷாப்பிங் தளம் ஒன்றையும் பேடிஎம் கொண்டுள்ளது என்பது பலருக்குத் தெரியாது.இந்தியாவில் ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வாரி வழங்கி வாடிக்கையாளர்களிடையே ஆதிக்கம் செலுத்தி வரும் அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு போட்டியாக பேடிஎம் கொண்டுவந்த ஆன்லைன் ஷாப்பிங் தளமான ‘பேடிஎம் மால்’ (Paytm Mall) கதையே இந்த அத்தியாயம்.
Paytm Mall; 2016-ம் ஆண்டின் பணமதிப்பு நடவடிக்கைக்குப் பின் மக்கள் அனைவரும் டிஜிட்டலை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு பேடிஎம் உற்ற துணையாக இருக்க, பேடிஎம் அசுர வளர்ச்சி கண்டது. சூட்டோடு சூட்டாக அடுத்த வருடமே, பேடிஎம் மால் (Paytm Mall) கான்செப்ட்டை களமிறக்கினார் அதன் நிறுவனர் விஜய் சேகர் சர்மா. இதே 2017-ம் ஆண்டுதான் இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பிடித்திருந்தார் விஜய் சேகர் சர்மா. பேடிஎம் போன்று பேடிஎம் மாலுக்கும் இவரே சூத்திரதாரி.
Paytm Mall வளர்ச்சிக் கதை
பேடிஎம் மால் என்பது ஒரு இ-காமர்ஸ் தளமாகும். மற்ற இ-காமர்ஸ் தளங்களை போலவே ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு பிரபலமாக அறியப்படுகிறது. தொடக்கத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனையை மையமாகக் கொண்டு உருவான பேடிஎம், அதில் யூனிகார்ன் அந்தஸ்து பெற்ற நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் தனது பயனர்களுக்காக ஆன்லைன் ஷாப்பிங் தளமாக பேடிஎம் மால்-ஐ உருவாக்கியது.
ஒரு ஹைப்பர்லோகல் ஆஃப்லைன்-டு-ஆன்லைன் (O2O) வணிக மாதிரியில் இந்திய பயனர்களுக்கு மால் + லோக்கல் பஜார் கலவையில் ஷாப்பிங் அனுபவம் கொடுக்க வேண்டும் என்ற கான்செப்ட் உடன் பேடிஎம் மால் தனது தடத்தை இ-காமர்ஸ் துறையில் பதித்தது.
ஆரம்பத்தில் பேடிஎம் வசம் இருந்த வணிகர்களை மையப்படுத்தி அவர்களுக்கான இ-காமர்ஸ் தளமாக பேடிஎம் மால் வடிவமைக்கப்பட்டது. அதற்காக விற்கப்படும் பொருட்களில் 5 முதல் 20% வரை கமிஷன் வசூலிக்கப்பப்பட்டது. ஆனால், காலப்போக்கில் ஆஃப்லைன்-டு-ஆன்லைன் (O2O) வணிக மாதிரியை பயன்படுத்தி 35% வரை செலவுகளை மிச்சப்படுத்தியதுடன் வருவாயையும் பெருக்கியது. O2O மாடலுக்கு மாறியபின் பேடிஎம் மால் கண்ட முன்னேற்றம் அதிகம்.
முதலீடு...
2017ல் இந்தியாவில் ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வாரி வழங்கி வாடிக்கையாளர்களிடையே ஆதிக்கம் செலுத்திகொண்டிருந்தன அமேசானும், ஃப்ளிப்கார்ட்டும். இந்த நேரத்தில் இத்துறையில் கால்பதித்த பேடிஎம் மாலுக்கு தொடங்கப்பட்ட ஒரே மாதத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு கிடைத்தது எனலாம்.
இந்திய ஆன்லைன் சில்லறை வர்த்தகம் கோலோச்ச துடித்துக்கொண்டிருந்த சீனாவின் அலிபாபா, பேடிஎம் மாலுக்கு பேக்கப் ஆக மாறியது. துவங்கப்பட்ட ஒரே மாதத்தில் அலிபாபா நிறுவனத்திடமிருந்து பேடிஎம் மால் பெற்ற முதலீடு எவ்வளவு தெரியுமா? 200 மில்லியன் டாலர். அன்றைய தேதிக்கு இதன் இந்திய மதிப்பு ஆயிரம் கோடிக்கும் அதிகம்.
இதற்கடுத்த ஆண்டு ஜப்பானின் சாப்ட்பாங்க் மூலம் 445 மில்லியன் டாலர், 2019ல் கார்ப்ரேட் சுற்று மூலம் 150 மில்லியன் டாலர்களைத் திரட்டியது. இதன்காரணமாக 2018ல் யூனிகார்ன் அந்தஸ்து பெற்ற 18வது இந்திய நிறுவனமாக புதிய உச்சம் தொட்டது.
கேஷ்பேக் ஆபர்...
பேடிஎம் மால்-ஐ பொறுத்தவரை நிதி திரட்டலுக்கு ஏற்ப ஆரம்பிக்கப்பட்ட சில காலங்களில் நல்ல வரவேற்பையும் பெற்றது. குறிப்பாக, இதன் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. ஏனெனில், மற்ற தளங்களில் இல்லாத வகையில் இது பயனர்களுக்கு சமீபத்திய மொபைல்கள் மற்றும் எலக்ட்ரானிக் கேஜெட்களின் மாடல்கள் முதல் விலை சலுகை வரை அனைத்தையும் கண்டறிய உதவுகிறது.
மேலும், வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் மடிக்கணினி வரை அனைத்தும் சிறந்த சலுகைகள் மற்றும் கேஷ்பேக் ஆபர்களுடன் பேடிஎம் மாலில் கிடைக்கும்.
குறிப்பாக பேடிஎம் மால் அதன் கேஷ்பேக் ஆபர்களுக்கு பெயர்போனது. போட்டியாளர்களான ஃப்ளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல் மற்றும் ஷாப்க்ளூஸ் ஆகிய நிறுவனங்கள் தள்ளுபடியில் கவனம் செலுத்தினால், பேடிஎம் மால் கேஷ்பேக் மூலம் விளையாடியது. மேலே சொன்ன நிறுவனங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் ஆயுதமாகவே கேஷ்பேக் சலுகையை பேடிஎம் மால் கையாண்டது.
கிராசரி வருவாய்...
சாப்ட் பேங்க் மற்றும் அலிபாபா பேடிஎம் மாலுக்கு நிதியளித்த ஒரு மாதத்திற்குப் பிறகு, இந்தியாவில் இ-காமர்ஸ் நிலப்பரப்பே சற்றே மாறியது. ஒரு பக்கம் அமெரிக்காவின் சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட், போட்டியாளரான ஃபிளிப்கார்ட்டை 16 பில்லியன் டாலருக்கு வாங்க முற்பட்ட நேரத்தில், மற்றொரு பக்கம் ஸ்னாப்டீல் மற்றும் ஷாப் க்ளூஸ் தங்கள் சொந்தப் பிரச்சினைகளை சமாளிக்க போராடிக்கொண்டிருந்தன.
எதிர்பாராத இந்த சமயத்தை நல்வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு வலுவான அடித்தளம் அமைத்தது பேடிஎம் மால். குறிப்பாக கிராசரி எனப்படும் மளிகைப் பொருட்கள் விற்பனையில் இந்த சமயத்தில் தான் புதிய உச்சம் தொட்டது.
தொடக்கத்தில் மற்ற தளங்களை போல் ஆபர்களை அள்ளி வீசி அனைத்து பிரிவுகளிலும் வாடிக்கையாளர்களை கவர்ந்தாலும், மளிகைப் பொருட்கள் விற்பனையில் தொய்வையே சந்தித்தது. இதனை சரி செய்ய, விஜய் சேகர் சர்மா மாற்றி சிந்திக்க ஆரம்பித்தார். மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறி விற்பனைக்காக பிரத்யேகமாக இருந்த பிக் பேஸ்கட் நிதி சிக்கலில் இருக்க, இதை அறிந்து அந்நிறுவனத்தை கைப்பற்ற அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆர்வம் காட்டின.
ஆனால், விற்க மனமில்லாத பிக் பேஸ்கட் இருபெரு நிறுவனங்களும் கொடுத்த ஆபர்களுக்கு செவிசாய்க்கவில்லை. இதனை பயன்படுத்திக்கொள்ள நினைத்த விஜய் சேகர் சர்மா, பிக் பேஸ்கட்டுக்கு 200 மில்லியன் டாலர் முதலீட்டை கொடுத்து அதனை பேடிஎம் மால் இணைத்துக்கொண்டார்.
சாமர்த்தியமான இந்த மூவ், பேடிஎம் மாலுக்கு நிரந்தர வருவாய்க்கு அடித்தளமிட்டது. தற்போது பேடிஎம் மாலின் மொத்த வருவாயில் 25 சதவீதம் மளிகைப் பொருட்கள் விற்பனை மூலமே கிடைக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் இந்த சாமர்த்தியம் எப்படிப்பட்டது என்று.
இதுபோன்ற இந்தியாவின் ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் பேடிஎம் மால் மூன்றாவது பெரிய நிறுவனமாக இருந்து வருகிறது. வருவாயும் விரைவில் இரட்டிப்பாகியது. 2019ம் ஆண்டில் 200% க்கும் அதிகமான வளர்ச்சியைக் கண்ட இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.893 கோடி.
அலிபாபா வெளியேற்றம்...
தொடங்கிய ஒரு சில ஆண்டுகளில் இ-காமர்ஸ் துறையில் அசுர வளர்ச்சி கண்ட பேடிஎம் மால் கொரோனா தொற்றுநோய் காரணமாக 2020ல் நஷ்டத்தை சந்தித்தது. இந்த அதிர்ச்சியில் மீண்டுவர முயன்ற நேரத்தில் முக்கிய முதலீட்டாளரான அலிபாபா மற்றும் ஆன்ட் ஃபைனான்சியல்ஸ் நிறுவனங்கள் பேடிஎம் மாலில் இருந்து கடந்த ஆண்டு மே மாதம் வெளியேறியது.
இரண்டு முக்கிய முதலீட்டாளர்களும் 43.32 சதவீத பங்ககுளை விற்றிருக்கின்றனர். அலிபாபா நிறுவனத்திடம் இருந்த 28.3 சதவீத பங்குகள் மற்றும் ஆன்ட் ஃபைனான்சியலின் 15 சதவீத பங்குகள் இதில் அடக்கம். அலிபாபாவின் ‘டி-மால்’ மாடலிலேயே இந்தியாவில் ‘பேடிஎம் மால்’ வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்நிறுவனமே வெளியேறிய நிலையில் பேடிஎம் மாலின் பங்கு மதிப்பும் சரிவை சந்தித்தது. அதேநேரத்தில் மோசடி விற்பனையாளர்கள் போன்ற புகார்கள் கெட்ட பெயரை பெற்றுக்கொடுத்தன.
ஹூரூன் யூனிகார்ன் பட்டியலில் 2020-ம் ஆண்டு பேடிஎம் நிறுவன மதிப்பு 3 பில்லியன் டாலர் என அறிவிக்கப்பட்டது. அதுவே, 2022 ஹூரூன் யூனிகார்ன் பட்டியலில் பேடிஎம் நிறுவனத்தின் மதிப்பு 1 பில்லியன் டாலருக்கு குறைவாகச் சரிந்து, யூனிகார்ன் மதிப்பையும் இழந்தது.
யூனிகார்ன் மதிப்பை இழந்தாலும் ஆன்லைன் சில்லறை வர்த்தகக் களத்தில் அந்நிய நிறுவனங்களுக்கு எதிராக சண்டை செய்துகொண்டிருக்கிறது பேடிஎம் மால். இப்போது பேடிஎம் மாலே மூன்றாவது பெரிய இந்திய இ-காமர்ஸ் தளம் என்பது மறுப்பதற்கில்லை.
"கேஷ்பேக் மாடலே எங்களின் ஆயுதம். நாங்கள் தொடர்ந்து கேஷ்பேக் கொடுப்போம், இழந்த வணிகத்தை மீண்டும் மீட்டெடுப்போம்" என்று சமீபத்திய பேட்டியில் சூளுரைத்துள்ளார் விஜய் சேகர் சர்மா.
கட்டுரை உதவி: ஜெய்
#100Unicorns | 'யுனிக்' கதை 17 - OYO Rooms: பயணங்கள் காட்டிய பாதையில் 18 வயதில் வென்ற ரித்தேஷ் அகர்வால்!