விதிமீறல் வாகன ஓட்டிகளே எச்சரிக்கை; அப்டேட்டட் e-challan வந்துவிட்டது!
வாகன ஓட்டிகள் எங்கு விதிமீறலில் ஈடுபட்டாலோ, வழக்கு பதிவு செய்து அபராதம் செலுத்தாமல் இருந்தாலோ எல்லாமே இனி e-challan வழியே தெரிந்துவிடும்.
சமீபத்தில், சென்னையில் ஒரு சிக்னலில் நிற்காமலோ அல்லது தொலைபேசியில் பேசிக்கொண்டே வண்டியை ஓட்டி, காக்கிச்சட்டைக்காரரிடம் பிடிபட்டு, ஃபைன் கட்ட கையில் காசில்லாததால் அங்கிருந்து தப்பி்ச்சென்றுவீட்டீரா? இனி அப்படி தப்பித்தாலும் அடுத்து மாட்டும் இடத்தில் உங்களை பற்றிய தகவலுடன் காத்திருப்பார் ட்ராபிக் போலீசார். ஜாக்கிரதை! அதேபோல் அபராதம் கட்ட கையில் காசில்லாவிட்டாலும் இனி ஆன் தி ஸ்பாட் ஃபைன்களை பேடிஎம் அல்லது ஆன்லைன் வழியாகவும் செலுத்திவிட்டு அந்த இடத்தைவிட்டு நகரமுடியும்.
சாலையில் செல்லும் அரை கோடிக்கும் மேற்பட்ட வாகனங்களுடன் கூடிய ஒரு நகரத்தில், ஒவ்வொரு நாளும் ஓவர்ஸ்பீடிங், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் ஹெல்மெட்டுகள் அணியாத காரணத்தில் 10,000க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. வாகனத்தின் எண்ணிக்கை விகிதத்திற்கு நிகராக போக்குவரத்து மீறல்கள் நடந்து வருவதால்,போக்குவரத்து மீறல்களைக் குறைப்பதற்காக ‘இ-சலான்’ (e-challan) எனும் ஒரு திட்டத்தை அமல்படுத்தி இருந்தது சென்னை போக்குவரத்து காவல்துறை.
இதுவரை, வாகன ஓட்டிகளிடமிருந்து அபராதத் தொகையை பிடிப்பட்ட இடத்திலேயே ஸ்பாட் ஃபைன் என்ற முறையில் ரொக்கமாக வசூலித்து அதற்கான ரசிதை வழங்கி வந்தனர் போக்குவரத்து காவல்துறையினர். இதில் சிலர் அபராத முழுத்தொகை இல்லாமல், பிடிக்கும் போலீசின் கையில் இருக்கும் பணத்தை அமுக்கிவிட்டு ரசீது பெறாமல், புகார் எழுதாமல் தப்பித்துவிடுவது வழக்கம். ரொக்கமாக கையில் இல்லாத பயணிகளுக்கும் போக்குவரத்து காவலர்களுக்கும் இடையே மோதல் சம்பவங்களும் அதிகரித்து வந்தது. அதோடு விதிமீறல் வாகன ஓட்டி யார் என்ற தகவல்களும், வழக்குப்பதிவு செய்த காவலர் எந்தப்பகுதியில் இருக்கிறார், அன்றைய அபராத தொகை விவரங்கள் பற்றி உயர் அதிகாரிகளுக்கு தெரியாத நிலையே இருந்தது.
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம், அபராதம் வசூலிக்க, 2011ம் ஆண்டு சென்னை மாநகர போலீசார், இ-சலான் கருவி வாயிலாக, மின்னணு ரசீது வழங்கும் திட்டத்தை, அறிமுகம் செய்தது. பின், அதை அப்டேட் செய்து 2018ல், டிஜிட்டல் முறையில், அபராதம் வசூலிக்கும் நடைமுறையை அமல்படுத்தினர். இப்போது அக்கருவியிலே, அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை பொருத்தி புதிய இ-சலான் கருவி நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளனர் காவல்துறை.
புதிய இ-சலான் கருவிகளில் உள்ள மென்பொருளானது, அனைத்து பிராந்திய போக்குவரத்து அலுவலகங்களுடனும், (ஆர்.டி.ஓக்கள்) வாகன பதிவிற்கான இணையதளமான ‘வாகன்’ மற்றும் ஓட்டுனர் உரிமத்திற்கான இணையதளமான ‘சாரதி’யுடனும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதனால், விதிமீறலில் ஈடுப்பட்ட வாகன ஓட்டியின் ஓட்டுனர் உரிம எண் மற்றும் வண்டியின் எண்ணை இ-சலான் கருவியில் பதிவிட்ட உடன், வாகன ஓட்டியின் முழுவிவரமும் புகைப்படத்துடன் கிடைக்கும்.
மேலும், இந்த மென்பொருள் வழியாக பிற மாநில வாகனங்களின் மீதும் வழக்கு பதிவு செய்யலாம். ஒரு வாகனம் பிற மாநிலங்களில் வழக்கு செய்யப்பட்டு அவ்வழக்கு நிலுவையில் இருந்தால், அதையும் அணுகமுடியும். ஒரு குறிப்பிட்ட வாகன ஓட்டியின் ஓட்டுனர் உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தால், அதையும் இம்மென்பொருள் உதவியுடன் தெரிந்து கொள்ளலாம்.
விதிமீறலில் ஈடுப்பட்ட நபர் அபராதத் தொகையை கட்டாமல் எஸ்கேப் ஆகிவிட நினைத்தால், பின்பு மென்பொருளின் வசதியால் இந்தியா முழுவதும் உள்ள ஆர்டிஓ’க்களில் புதுப்பித்தலோ, பெயர் மாற்றம் செய்யவோ அனுமதிக்கப்பட மாட்டாது. விதிமீறிலில் ஈடுப்பட்டவரை பிடிக்கும் போலீசார், குற்றச்சாட்டை பதிவு செய்யும் நேரத்திலே அவரது ஓட்டுனர் உரிமத்தை இடைநீக்கம் செய்யவும் பரிந்துரைக்கலாம்.
முந்தைய இ-சலான் கருவியிலிருந்து பெறப்பட்ட ரசீது வாயிலாக, வாகன ஓட்டிகள், டெபிட், கிரெடிட் கார்டு வாயிலாகவும், நீதிமன்றத்திலும் அபராதம் செலுத்தி வந்தனர். புதிய முறைப்படி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் இணையதளத்தை பயன்படுத்தியும், பேடியும் வாயிலாகவும் அபராதத்தை செலுத்தலாம்.
இதுகுறித்து திருவல்லிகேணி போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் தி இந்துவிடம் கூறுகையில்,
“இனிமேல், விதிமீறியவரிடம் அபராதம் குறித்து வாக்குவாதம் செய்யத் தேவையில்லை. ஆன் தி ஸ்பாட்டில் பிடிப்படும் நபரின்மீது ஏற்கனவே ஏதேனும் குற்றம்சாட்டப்பட்டிருந்தால், அதையும் இக்கருவி காட்டிக்கொடுக்கும். இது தேசிய ஓட்டுநர் தரவுத்தளத்துடன் முழுமையாக இணைக்கப்பட்டிருப்பதால், விதிமீறல் செய்த நபரின் பெயர், முகவரி, மொபைல் எண் மற்றும் புகைப்படம் போன்ற அனைத்து விவரங்களை பெற முடியும். அவர் வைத்திருக்கும் ஓட்டுனர் உரிமம் ஒரிஜினலா அல்லது நகலா என்றும் சரிபார்க்கமுடியும்.” என்றார்.
தகவல் உதவி : தி இந்து |கட்டுரையாளர்: ஜெயஸ்ரீ