கேரள, வங்காள மக்களின் 'ஒரே நாயகன்' மக்கள் மனதில் மறையாத 'மரடோனா'
கேரளமும், வங்காளமும் மரடோனாவைக் கொண்டாட காரணம் என்ன?
கேரளமும், வங்காளமும் மரடோனாவைக் கொண்டாடக் காரணம் என்ன?
மரடோனா மறைந்து நாட்கள் நகர்ந்தாலும், அவரது புகழ் நாளுக்கு நாள் ஓங்கிக் கொண்டேதான் இருக்கிறது. அண்மையில் ட்விட்டரில் பதிவிடப்பட்டிருந்த ஒருத்தருடைய ட்வீட் மரடோனா யார் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருந்தது. அது,
’கேரளாவும், வங்காளமும் நாடுகளாக இணைந்து இருந்திருந்தால், அவற்றின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருக்கும்’ என்ற ட்வீட் தான் அது.
உண்மை தானே! மரடோனாவை இந்த இரண்டு மாநிலத்தவர்களும் அந்த அளவில் கொண்டாடித் தீர்க்கின்றனர். மரடோனா மறைவுக்கு இரண்டு நாள் கேரள அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இந்தியாவில் மற்ற எந்த மாநிலங்களிலும் இப்படி இல்லை. குறிப்பாக இந்த இரண்டு மாநிலங்கள் மட்டும் இப்படிக்கொண்டாட என்ன காரணம்?
மரடோனா பொதுவுடைமைக் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர். சே குவாராவை தன் குருவாக ஏற்றுக்கொண்டவர். ஃபிடல் காஸ்டோரோவின் ரசிகன். கேரளா மற்றும் வங்கத்துடன் மரடோனா இணைய இது ஒரு முக்கியக்காரணமாக பார்க்கப்படுகிறது.
1986ல் ஃபிஃபா உலகக் கோப்பையின்போது, கடவுளின் கையின் உதவியுடன் அடிக்கப்பட்ட கோல், கேரளா மற்றும் வங்காளத்தின் கருப்பு வெள்ளை தொலைக்காட்சிகளில் மின்னியது.
அடிப்படையில் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் கால்பந்துக்கும் தீரா பந்தம் உள்ளது. கேரளாவின் மூலை முடுக்குகளிலெல்லாம் கால்பந்தின் சத்தங்கள் ஒலித்துக்கொண்டேயிருக்கும். அம்மக்கள் அதை நேசிக்கிறார்கள். படங்களில் கூட இதன் எதிரொலியை நாம் காண முடியும். மரடோனா அவர்கள் இதயங்களில் நுழைய இந்த காரணம் போதாதா என்ன.
2008ம் ஆண்டு மேற்கு வங்கத்துக்கு வருகிறார் மரடோனா என்ற செய்தி கேட்டதும் மாநிலமே உற்சாகமானது. முன்னாள் முதல்வர் ஜோதிபாசு தனது வீட்டுக்கே அழைத்து மரடோனாவை கௌரவித்தார். அந்த மக்களின் அன்புக்கு சாட்சியாக 12 அடி நீளமுள்ள மரடோனா சிலை இன்றளவும் கொல்கத்தாவில் ஓங்கி நிற்கிறது.
இந்த பக்கம் கேரளாவுக்கு 2012ம் ஆண்டு மரனோடா வருகை தந்தார். கண்ணூருக்கு அவர் வந்து சென்ற ஹோட்டல் இன்று அருங்காட்சியமாகியுள்ளது.
அந்த ஹோட்டலில் அவர் பயன்படுத்திய சிகரெட் துண்டுகள் உள்ளிட்ட அனைத்தும் கண்ணாடி பெட்டிக்குள் வைத்து பாதுகாகப்படுகின்றன. இப்படியெல்லாமா செய்வார்கள் என்றால் ஆம்!
மரடோனா கேரள மக்களின் எல்லையில்லா அன்புக்கு உரித்தானவர். கேரளா, வங்காளம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் கம்யூனிசம் ஓங்கியிருந்ததும், மரடோனா அடிப்படையில் ஒரு கம்யூனிஸ்ட் என்பதும், அந்த மாநில மக்கள் கால்பந்து பிரியர்கள் என்பதும் தான் இந்த அன்பை ஒரே நேர்கோட்டில் இணைத்தது.
ஏழ்மைப் பின்னணியிலிருந்து வந்த மரடோனாவுக்கு அந்த வலி தெரியும். அதனாலோ என்னவோ, அவர் ஏழைக் குடும்பத்திலிருந்து வரும் இளம் வீரர்களை ஊக்கப்படுத்துவார். அவர்களின் சொந்த திறமையின் மீது நம்பிக்கை வைக்கும்படி, அடிக்கடி கூறுவாராம். அவர் சிறந்த கால்பந்து வீரர் என்பதையும் கடந்து நல்ல மனிதராக விளங்கியதும் மக்கள் அவருக்காக கண்ணீர் சிந்த காரணம்.