கட்டுப்பாடுகளை உடைத்து 1000 கோடி வருமானம் ஈட்டித் தந்த சிங்கப்பெண்!
இந்தியாவில் McDonalds உணவகத்தின் மாஸ்டர் பிரான்சைஸியான ஹார்ட்கேசல் ரெஸ்டாரன்டின் நிர்வாக இயக்குனர் ஸ்மிதா ஜாடியா-வின் வெற்றிக்கதை இது!
பாரம்பரிய மார்வாரி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஸ்மிதா ஜாடியாவை அவரது 18வது வயதில் திருமணம் செய்து கொடுத்தனர் அவரது பெற்றோர். அந்நேரத்தில் மும்பையில் சைடென் காலேஜ் ஆப் காமர்ஸ் மற்றும் பொருளாதாரத்தில் பயின்று வந்தார்.
22 வயதில், இரட்டைக் குழந்தைகள் பிறக்க, அவர்களை வளர்ப்பது தான் தனது வாழ்க்கையின் நோக்கம் என நினைத்தார். ஆனால் விதி அவருக்கு வேறு பாதை வகுத்திருந்தது.
நம்மிடம், எவ்வாறு மெக்டானல்ட்ஸ் என்ற சர்வதேசப் பிராண்டை இந்தியாவில் அனைவருக்கும் தெரிந்த ஒரு பெயராக மாற்றினார் என்பதை விளக்குகிறார்.
வாழ்க்கையில் ஒரு திருப்பம் :
1996 ஆம் ஆண்டு ஸ்மிதாவின் கணவர் அமித் ஜாடியா, வெஸ்ட்லைஃப் டெவலப்மென்ட் லிமிட்டட் நிறுவனத்தை நிறுவினார். இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மெக்டானால்ட்ஸ் உணவகங்கள் இந்நிறுவனம் மூலமே இயங்குகின்றன.
இந்தியாவிற்கு மெக்டானல்ட்ஸ் வந்து 2 ஆண்டுகளுக்குப் பின்பு ஸ்மிதா அதில் இணைந்தார்.
"இந்த தொழில் குறித்த அனுபவம் எனக்கு முன்னர் இருந்தது. காரணம் அமித்திற்கு முக்கிய உலக நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் தொடர்பாக நான் உதவி வந்தேன். அப்படி ஒரு நிகழ்வில் தான் உலக அளவில் உலகளாவிய கூட்டாளி ஒருவர், நிறுவனத்தில் இணைந்து விளம்பரங்களை மேற்பார்வை இடுமாறு கேட்டார்.
அந்நேரத்தில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் அதே சமயம் சிறிது படபடப்பாகவும் இருந்தது. காரணம் அதற்கு முன்பு நான் பணியாற்றியது இல்லை. பின்னர் அமித் தைரியம் கொடுக்க, அந்தத் தருணத்தை என் வாழ்க்கையை மாற்றும் தருணமாக அமைத்துக்கொண்டேன்.
அந்த முடிவு எடுத்த ஒரே ஆண்டில் சிகாகோவில் இருந்த ஹேம்பர்கர் பல்கலைகழகத்தில் சேர்ந்து விளம்பரத்துறையில் பயிற்சி எடுத்தார். அன்றில் இருந்து அனைத்தும் மாறிப்போனது என்கிறார் அவர்.
ஸ்மிதா ஹார்ட்கேசல் ரெஸ்டாரண்ட் பிரைவேட் நிறுவனத்தில் 1998 ஆம் ஆண்டு விளம்பரத்துறை தலைவராக இணைந்தார். மெக்டானல்ட்ஸ் என்ற பிராண்ட் இந்திய மக்களின் மனதில் பதியும் வண்ணம் அற்புத விளம்பரங்கள் உருவாகக் காரணமாக இருந்துள்ளார்.
"மெக்டானால்ட்ஸில் ஏதோ உள்ளது, உங்கள் அப்பாவின் கால விலையில் உங்களுக்கான உணவு," போன்ற வாக்கியங்கள் வாடிக்கையாளர்களை இந்த பிராண்டோடு இணைப்பதாக நம்புகிறார்.
சில வருடங்கள் இந்தத் துறையில் பயின்ற பிறகு, எதையும் முயற்சித்து பார்க்கும் ஸ்மிதாவின் ஆர்வம் அவரை மேலும் வளரத் தூண்டியது. ஹார்வர்ட் பல்கலையில் பொது மேலாண்மை பயின்றார்.
"அங்கு நான் கற்றவை மதிப்புமிக்கவை. வர்த்தக உலகின் அடிப்படைகள் மட்டுமன்றி வேறு எந்த வழியிலும் கிடைக்கமுடியாத கண்ணோட்டத்தையும் எனக்குக் கொடுத்தது," என்கிறார் அவர்.
படித்து முடித்து திரும்பிய பிறகு, மனித வளம், பயிற்சி மற்றும் இயக்கம் போன்ற துறைகளிலும் கவனம் செலுத்தினார். 2010 ல் மொத்த நிர்வாகத்தின் நிர்வாக இயக்குனர் பதவி அவரைத் தேடி வந்தது.
உருவாக்கிய மைல்கற்கள் :
இந்த நிறுவன வரலாற்றில் அப்போதில் இருந்து பல மைல்கற்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம். 40 நகரங்களில் எங்கள் தடம் பதித்தல், 1000 கோடி என்ற வருமான அளவை எட்டியது, மெக் கஃபே, மெக்பிரேக்பாஸ்ட், மெக்டெலிவரி போன்ற துணை பிராண்டுகளை உருவாக்கியது, 'எதிர்கால அனுபவத்தை பெற்றிடுங்கள்' போன்ற புதிய முயற்சிகளில் துணிந்து இறங்கியது," என அவர் மேலும் சேர்கிறார்.
1996 ஆம் ஆண்டு இந்தியாவில் மெக்டானல்ட்ஸ் வந்தபொழுது மேற்கிந்திய உணவு என்பது இந்தியாவில் இல்லாத காலமாக இருந்தது.
"இந்தியர்கள் பர்கர்கள் சுவைக்காத காலம் அது. எனவே முதல் சவால், இந்தியர்களை பர்கர்கள் சுவைக்க வைப்பதே. அதற்கான புதிய ஒரு சந்தையை உருவாக்க வேண்டிய சூழலில் நாங்கள் இருந்தோம். அது எளிதாக நடைபெறவில்லை. காரணம் முதலில் நாங்கள் சந்தித்தது, இந்திய சுவைக்கு ஏற்ப பர்கர்களை மாற்றுவது என்ற சவால். இதன் மூலம் உலகளாவிய அடையாளம் இந்திய மக்களுக்கு ஏற்றவாறு அவர்கள் மனதில் பதியவேண்டும்.
புதிய சுவைகளில் உணவுகளை அறிமுகம் செய்தோம், சைவம் மற்றும் அசைவம் என்பது தனித்தனி என்பதை மக்களுக்கு உணர்த்தினோம், உணவுகளுக்கு மக்களுக்கு ஏற்ற விலை நிர்ணயித்தோம், மேலும் மக்கள் மனதில் நிற்கும் வண்ணம் எங்கள் விளம்பரங்களை அமைத்தோம். இந்த முயற்சிகள் விரைவில் இந்தியாவில் மெக்டானல்ட்ஸை அனைவரும் அறிந்த ஒரு பிராண்டாக மாற்றியது.
வாடிக்கையாளர் தான் கடவுள் :
வாடிக்கையாளர் பார்வையில் இருந்து இந்தத் தொழிலை பார்ப்பதில் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளார் ஸ்மிதா. மெக்டானல்ட்ஸ் நிறுவனத்தின் வெற்றி என்பது, மக்களின் தேவை என்ன என்பதை அவர்கள் கேட்கும் முன்னரே அறிந்து அதை அவர்களுக்கு தருவதில் தான் உள்ளது என்பதையும் நம்புகிறார்.
"இந்தியர்களுக்கு என்று புதிய ஒரு மெனுவை அறிமுகம் செய்தல், சரியான விலையில் அவற்றை தருதல், மேலும் வாடிக்கையாளர்கள் எங்கள் உணவகங்களுக்கு வருவதற்கு காரணங்களை உருவாக்குதல், 'குட் புட் ஜர்னி' - மெனுவை மொத்தமாக மாற்றி அமைத்து மேலும் சத்துள்ளதாகவும், முழுமையானதாகவும் மாற்றி அமைக்கும் முயற்சி என வாடிக்கையாளரை மனதில் வைத்து துவங்கியுள்ள முயற்சிகள் இவை," என்கிறார் அவர்.
இவர்களின் வாடிக்கையாளர்களாக மிலேனியல்கள் அதிக அளவில் உள்ளனர். எனவே அவர்களுக்கு ஏற்ற வண்ணம், அதிக அளவில் தொழில்நுட்பத்தை இந்த தொழிலில் புகுத்த ஸ்மிதா முயற்சித்து வருகிறார்.
எதிர்கால அனுபவத்தை கொடுக்கும் உணவகங்களில் தானியங்கி கியாஸ்குகள், டேபிள் டிராக்கர்ஸ், டிஜிட்டல் மெனு, கேமிங் பேட்ஸ், ஏர் சார்ஜர்கள் ஆகியவை வாடிக்கையாளர்களை ஈர்க்க வைக்கப்பட்டுள்ளது.
தேவையான ஆதரவு :
QSR தரப்பில் உள்ள ஒரே பெண் தலைவர் என்றாலும், அதனால் தனக்கு எந்தவித சவாலும் ஏற்படவில்லை என்கிறார் ஸ்மிதா.
"ஒரு பெண் என்ற காரணத்தால், எந்தவித தடையும் எனக்கு நிகழவில்லை. மேலும் உங்கள் குடும்பத்தின் ஆதரவு மற்றும் ஊக்கம் உங்களுக்கு இருந்தால் எப்போதும் ஜெயிக்கலாம். எனக்கு அது இருந்தது. வேலை காரணமாக வளரும் எனது குழந்தைகளை விட்டு இருக்கும் நிலை ஏற்பட்டது. இருப்பினும் எனது கணவர் மற்றும் ஒட்டுமொத்த குடும்பமும் இந்த கடினமான முடிவுகளை எளிதாக மாற்ற உதவியாக இருந்தனர்," என்கிறார் அவர்.
இந்த நிதியாண்டில் 3வது காலாண்டில் 4,329.3 மில்லியன் வருமானம் ஈட்டியுள்ளது இந்நிறுவனம். இது சென்ற ஆண்டை விட 16.8% அதிகமாகும். மேலும் ஆசியாவின் 'சக்திவாய்ந்த பெண் தொழிலதிபர்கள்' பட்டியலில் இடம் பெற்ற 4 இந்திய பெண்களில் ஐவரும் ஒருவர்.
2022 ஆண்டில் தங்கள் லட்சியம் என இந்நிறுவனம் கொண்டுள்ளது, மேற்கு மற்றும் தென் இந்தியாவில் 400-500 உணவகங்கள் வரை இருக்கவும், அவற்றில் இருந்து 2000-2500 கோடி வரை வருமானம் ஈட்டவேண்டும், மிட் டீன் மார்ஜின் ஆரோகியமானதாகவும், எஸ்எஸ்எஸ்ஜி சதவீதம் 7-9 இருக்கவேண்டும். எங்கள் லட்சியத்தை நிறைவேற்றும் பாதையில் நாங்கள் உள்ளோம்," என்கிறார் ஸ்மிதா.