முதுகுத் தண்டு நோய் பாதிப்பை விரல் அசைவுகளால் வென்ற யாழினிஸ்ரீ!
முதுகுத்தண்டு நோய் பாதிப்பால் கழுத்துக்கு கீழ் விரல்களைத் தவிர எந்த உறுப்பும் செயல்படாத நிலையில் சக்கர நாற்காலியில் முடங்கிவிடாமல் வாசிப்பை விரல்களால் உறுதியாகப் பிடித்து கவிதை எழுதி புத்தகமாக வெளியிட்டுள்ளார் யாழினிஸ்ரீ.
இன்று கொரோனா பெருந்தொற்று காரணமாக நாம் சுதந்திரமாக வெளியில் சுற்றித்திரிய முடியாமல் தவிக்கிறோம். எல்லோரும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிட்டதே என்றும் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கிறோமே என்றும் புலம்பிக்கொண்டிருக்கிறோம். இந்த வார்த்தைகள் தொடர்ந்து நம் காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கிறது.
ஆனால் இருபதாண்டுகளுக்கு முன்பு துள்ளி ஓடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி ஒருவருக்கு திடீரென்று உலகமே வீட்டுக்குள் சுருங்கிவிட்டது. மனம் தளராத இவரோ சுருங்கிய தன் வாழ்க்கையை வார்த்தைகளால் அகலப்படுத்தி கவிதை வடித்துள்ளார். இவரது இரண்டு கவிதைத் தொகுப்புகள் புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பிறந்து வளர்ந்தவர் 30 வயதாகும் யாழினிஸ்ரீ. பத்து வயது வரை இவர் பட்டாம்பூச்சி போல் மகிழ்ச்சியுடன் பறந்து கொண்டிருந்தார். கைஃபோஸ்காலியாசிஸ் என்கிற முதுகுத்தண்டு நோய் இவரது ஓட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டது.
சிறுமியாக ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தவரின் கால் மூட்டுகளில் வீக்கமும் வலியும் ஏற்பட்டுள்ளது. இதனால் நடப்பதே சிரமமாகியுள்ளது. அப்போதுதான் மருத்துவப் பரிசோதனையில் இவருக்கு இந்தக் கொடிய நோய்தாக்கம் இருப்பது தெரியவந்தது.
“என்னால் ரொம்ப நேரம் ஒரே இடத்துல உட்காரவோ படுக்கவோ முடியாது. கழுத்துக்கு கீழ விரல்களை தவிர எந்த உறுப்பும் செயல்படாது. அசைக்க முடிஞ்ச விரல்களோட உதவியோட புத்தகங்கள் வாசிச்சேன். எழுதினேன். கம்ப்யூட்டர் கத்துக்கிட்டு இணையத்தை பயன்படுத்தின பிறகு என் உலகமே விரிவடைஞ்ச மாதிரி இருந்தது,” என்கிறார் யாழினிஸ்ரீ.
கம்ப்யூட்டர் பயின்ற பிறகு கவிதை வரிகளை தட்டச்சு செய்து முகநூலில் பகிர்ந்துகொள்ளத் தொடங்கியுள்ளார்.
இவரது முதல் கவிதைத் தொகுப்பை புத்தகமாக வெளியிட முகநூல் நண்பர்களும் வாசிப்பாளர் பலரும் உதவியுள்ளனர். 'மரப்பாச்சியின் கனவுகள்’, ‘வெளிச்சப்பூ’ ஆகியவை யாழினிஸ்ரீயின் இரண்டு கவிதைத் தொகுப்புகள்.
யாழினிஸ்ரீ கவிதைகள் மட்டுமல்லாமல் நாவல் எழுதவும் தொடங்கியுள்ளார். அடுத்து அதையும் புத்தகமாக வெளியிட உள்ளார். இலக்கு நோக்கிய மன உறுதியே மட்டுமே எத்தகைய சவால்களையும் கடக்க உதவும் என்பது இவரது தன்னம்பிக்கை வரிகள்.
கட்டுரை: Think Change India | தகவல் மற்றும் பட உதவி: பிபிசி தமிழ்