பெண்களின் பீரியட்ஸ் நாட்களை மகழ்ச்சிகரமானதாக்கும் நிறுவனம்!
‘நாப்கின் ரேஷஸ்’, ‘பொதுகழிப்பறையால் தொற்றுநோய்’, போன்ற பாதிப்புகளில் இருந்து விடுபட்டு, பெண்கள் சுகாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பேட்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
- நாடெங்கிலும் உள்ள பெண்கள் பயன்படுத்தும் தீங்குவிளைவிக்கும் இரசாயனங்களும், சாயங்களும் கொண்டு தயாரிக்கப்படும் வழக்கமான நாப்கின்கள் ரேஷஸ்களை ஏற்படுத்துவதுடன், சிறுநீர் பாதையில் தொற்று நோயையும், துர்நாற்றத்தையும் ஏற்படுத்துகின்றன.
- பெண்கள் அந்தரங்க பகுதிகளை சுத்தம் செய்ய சோப்பு மற்றும் தண்ணீரை நம்பியிருக்கிறார்கள். இதனால் பிஹெச் சமநிலை மாறி நிலைமையை மோசமாக்கி தடிப்புகள், அலெர்ஜி மற்றும் அரிப்பு ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன...
- நாட்டின் பெரும்பாலான பெண்களும் வெளிஇடங்களுக்கு செல்கையில் அவர்களது வாழ்வில் ஒரு முறையேனும், சுகாதாரமற்ற பொது கழிப்பறைகளையே மூக்கை பிடித்து, சகித்துக் கொண்டு பயன்படுத்தும் நிலைக்கு உள்ளாகின்றனர்.
இவ்வாறாக பெண்ணின் சுகாதாரத்தைச் சுற்றியுள்ள தொடர்ச்சியான உரையாடல்கள் சமூகத்தில் விவாதங்களாவே முற்று பெற்றுவிடுகின்றனர். ஆனால், அதற்கு தீர்வாக களமிறங்கியுள்ளது ‘Sanfe’.
ஐஐடி டில்லி மாணவர்களால் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனம், ‘Sanfe’ ‘பெண்களை மேம்படுத்துவதற்கான எளிய மற்றும் புதுமையான தீர்வுகளை உருவாக்குதல்’ என்ற தொலைநோக்குடன் பெண்ணின் சுகாதாரத்தை மேம்படுத்த ஆர்கானிக் சானிட்டரி பேட்ஸ், பேன்டி லைனர்கள், டேம்பான்கள், மாதவிடாய் கோப்பைகள், இன்டிமேட் வாஷ் மற்றும் இன்டிமேட் வைப்ஸ் போன்ற அத்தியாவசிய இன்டிமேட் ஹைஜீன் பேணுவதற்கான தயாரிப்புகளை கண்டறிந்து அறிமுகப்படுத்தி வருகிறது.
சான்ஃப் -பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான எளிய, புதுமையான தீர்வுகளை உருவாக்கும் பெண்களுக்கான சுகாதார பிராண்ட் ஆகும். டெல்லி ஐ.ஐ.டியில் பட்டம் பெற்ற இருமாணவர்களால் படிக்கும் போதே தொடங்கப்பட்டது இந்நிறுவனம்.
நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆர்க்கிட் அகர்வாலும், சிஓஓ-வான ஹரி செஹ்ராவத்தும் கல்லூரியில் பி.டெக் இரண்டாம் படித்து கொண்டிருந்தபோது Sanfe நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். கல்லூரி காலத்தில் ஒருமுறை அவர்கள் மலையேற்ற பயணத்தை மேற்கொண்டபோது, அவர்களது நண்பர் ஒரு சுகாதாரமற்ற கழிவறையை பயன்படுத்தியதன் விளைவாய் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளார். பின்னர், இது இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் எதிர்கொள்ளும் ஒரு இக்கட்டான நிலை என்பதை அவர்கள் அறிந்தார்கள்.
அதற்குத் தீர்வு காண எண்ணிய மாணவர்கள்,
டாய்லெட் சீட்டில் அமராமல், பெண்கள் நின்றுகொண்டே சிறுநீர் கழிக்கக்கூடிய வகையிலான ’சான்ஃப் ஸ்டாண்ட் அண்ட் பீ’ என்ற உபகரணம் மற்றும் எந்த பக்க விளைவுகளும் ஏற்படுத்தாத மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பை உடனடியாக அகற்றுவதற்காக ’சான்ஃபே கிராம்ப் நிவாரண ரோல் ஆன்’ எனும் மருந்தையும் உருவாக்கி உள்ளனர். அதன் தொடர்ச்சியாய், அவர்களது சமீபத்திய தயாரிப்பு மறுபயன்பாடு செய்யக்கூடிய நாப்கின்கள். ஆம், கலப்பு வாழை நாரிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ள Sanfe சானிட்டரி பேட்கள், மீண்டும் பயன்படுத்தக் கூடிய வகையில் தயாரித்துள்ளனர்.
ஒரு முழுமையான பெண்பால் சுகாதாரத்திற்கான அடுத்த கட்டத்தை முன்னெடுத்துள்ள, சான்ஃப் மீண்டும் பயன்படுத்தக்கூடிய மாதவிடாய் கோப்பைகள், ரசாயனயமற்ற சானிட்டரி பேட்கள், பேன்டி லைனர், டேம்பான்கள் அத்துடன் சுகாதாரத்திற்கான அத்தியாவசிய (ஹைஜீன் எசென்ஷியல்ஸ்) பொருள்களான இன்டிமேட் வாஷ், இன்டிமேட் வைப்ஸ் அடங்கிய 'ஆர்கானிக் பீரியட் கேர் ரேஞ்ச்' -ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆர்கானிக் பீரியட் கேர் ரேஞ்ச், 100% ஆர்கானிக் பருத்தியால் ஆனது. குளோரின் ப்ளீச் மற்றும் வாசனை திரவியங்களின்றி பயனாளர்களுக்கு நல்ல அனுபவத்தை தரவல்லது. மேலும், ஆர்கானிக் பேட்ஸ், பேன்டிலைனர்கள் மற்றும் டேம்பான்களின் சிதைவு 6-12 மாதங்களில் தொடங்கி 2 ஆண்டுகளுக்குள் முழுமையாக சிதைவடைகிறது.
மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் தடிப்புகள், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், அரிப்பு மற்றும் ஒவ்வாமை போன்ற பிரச்னைகளை தீர்க்க சான்ஃப் முயற்சி செய்து வருகிறது.
இந்தியாவில் 336 மில்லியன் பெண்கள் மாதவிடாயை எதிர்கொள்கின்றனர். அவர்கள் பயன்படுத்தி வீசியெறியும் வழக்கமான சானிட்டரி பேட்கள் டன் கணக்கில் குவிவதால் மக்கும் அல்லாத கழிவுகளை உருவாக்குவதில் மறைமுகமாக பங்களிக்கின்றனர் பெண்கள். மேலும், உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் படி, சுமார் 50% பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் சிறுநீர் பாதை நோய்த்தொற்று மற்றும் ஒவ்வாமையால் பாதிக்கப்படுகின்றனர்.
இதற்கு முக்கியக் காரணம் முறையற்ற மாதவிடாய் சுகாதாரம் மற்றும் குளோரின் ப்ளீச், கலர் சேர்க்கைகள் மற்றும் வாசனை திரவியங்கள் அடங்கிய சந்தையில் கிடைக்கும் சானிட்டரி பேட்களே. மாதவிடாய் சுழற்சியின் போது அந்தரங்க பகுதியை சுத்தம் செய்ய வழக்கமான சோப்பைப் பயன்படுத்துவதை மருத்துவர்களே ஊக்குவிப்பதில்லை.
Sanfeன் நிறுவனர் ஆர்க்கிட் அகர்வால் கூறுகையில்,
“இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட நச்சற்ற சானிட்டரி பேட்களை வழங்கி பெண்களின் தேர்வை மட்டுப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. அதற்கு மாறாக, மாதவிடாய் கோப்பைகள் முதல் பருத்தி டேம்பான்கள் வரையிலான மாதவிடாய் காலத்திற்கு தேவையான பல ஆர்கானிக் பொருள்களை வழங்குகிறோம். எங்கள் புதிய சூழல் நட்புடைய மற்றும் ஆரோக்கியமான மாதவிடாய் சுகாதார தயாரிப்புகளுடன் அவர்கள் அதிகாரம் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சியை அசௌகரியமாக கருதுவதை, எங்கள் எளிய கண்டுபிடிப்புகளின் மூலம் மகிழ்ச்சியான மற்றும் வசதியான நாட்களாகக் கருதும் விதமாகவும் மாற்ற விரும்புகிறோம். பெண்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ற தயாரிப்புகளை உருவாக்குதே Sanfeன் நோக்கமாகும்.
மாதவிடாய் தொடர்பான உரையாடல்களைத் தூண்டுவதன் மூலமும், மக்களது மனநிலையை மாற்றுவதன் மூலமும், சிறந்த சுகாதார பொருட்கள் மற்றும் நிலையான தீர்வுகளைக் கொண்டுவருவதன் மூலமும் இந்தியாவில் பெண்களது சுகாதாரத்தில் நிலவும் மோசமான நிலையை மாற்றியமைக்க விரும்புகிறோம்,” என்றார்.
Sanfeன் இணை நிறுவனர் ஹரி செஹ்ராவத் கூறுகிறார்,
“பெண்ணின் சுகாதாரம் என்பது நம் நாட்டில் புறக்கணிக்கப் பட்ட தலைப்பு. அதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் அல்ல, ஆனால் இதைப் பற்றி யாரும் பொது இடங்களில் பேச விரும்பவில்லை என்பதால் அது புறக்ணிக்கப்பட்ட தலைப்பாக உள்ளது. நேபாளம், பூட்டான், அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் சந்தைகளிலும் எங்களது தயாரிப்புகளை நிலைநிறுத்தியுள்ளோம்.” என்றார் அவர்.
Sanfeன் தயாரிப்புகள் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் சந்தைகளிலும், நாட்டில் 1,500 வணிக வளாகங்களில் கிடைக்கின்றன. பெண்பால் சுகாதார சந்தையை கைப்பற்றுவதை நோக்கமாக கொண்டுள்ள இவர்கள் 2025ம் ஆண்டுக்குள் ஒரு பில்லியன் டாலர் வர்த்தகத்தை மேற்கொள்ள எதிர்நோக்கியுள்ளது.