விரக்தியின் விளிம்பில் இருந்த குவாடனுக்கு மகிழ்ச்சியைப் பரிசளித்த உலக மக்கள்!
9 வயது குவாடன் கேலி கிண்டலுக்கு பயந்து தற்கொலை செய்ய வேண்டும் என்று கதறிய வீடியோ வைரலானது. விரக்தியான அந்த சிறுவனுக்கு உலக மக்கள் காட்டிய பாசம் என்ன?
“நான் சாக வேண்டும் எனக்கு கயிறு கொடுங்கள், என்னுடைய இதயத்தை கத்தியால் கிழிக்க வேண்டும் போல் இருக்கிறது என்று கதறிக் கொண்டே கழுத்தை கை நகத்தால் கீறிக்கொள்ளும் 9 வயது சிறுவனின் வீடியோவை கடந்த 2 தினங்களாக நாம் சமூக ஊடகங்களில் பார்த்து கலங்கி நின்றோம்.”
யார் இந்தச் சிறுவன் சின்னஞ்சிறு மழலைப் பருவத்தில் அவனுக்கு ஏன் தற்கொலை எண்ணம் வந்தது, என எல்லாரும் அவனைப் பற்றித் தேடத்தொடங்கினர்.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரத்தைச் சேர்ந்த யாராகா பெய்ல்ஸ்ன் மகன் குவாடன் பேல்ஸ். இவன், ‘Dwarfism' (குள்ள மனிதர்) என்ற வளர்ச்சிக் குறைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். Dwarfism என்பது தலை பெரிதாக உயரம் குறைவாக இருக்கும் ஒரு வகை வளர்ச்சிக் குறைபாடு.
குவாடனுக்கு தொடர் சிகிச்சைகள் தந்து அவனை பள்ளிக்கு அனுப்பி வருகிறார் யாரகா. பள்ளியில் குவாடனின் உயரத்தை சக மாணவர்கள் கேலி செய்துள்ளனர். இதனால், மனமுடைந்த அவன் பள்ளி முடிந்து வீடு திரும்புகையில் காரில் கதறி அழும் வீடியோவை அவருடைய தாய் அழுகையுடன் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வருத்தத்துடன் பகிர்ந்திருந்தார்.
அந்த வீடியோவில் குவாடன் அழுதுகொண்டே,
“எனக்கு கயிறு கொடுங்கள். நான் சாக வேண்டும். என்னுடைய இதயத்தில் கத்தியால் குத்த வேண்டும்போல் இருக்கிறது. யாராவது என்னைக் கொல்ல வேண்டும் என விரும்புகிறேன்..." என்று கதறுகிறார்.
இந்த வீடியோவின் இறுதியில் பேசும் குவாடனின் தாய் யாரகா
“என் மகனை பள்ளியிலிருந்து அழைத்துச் செல்வதற்கு முன்பாக அவனைக் கேலி செய்யும் காட்சி ஒன்றைக் கண்டேன். இதனால், ஏற்பட்ட விளைவை மக்களுக்குத் தெரியப்படுத்த விரும்பினேன். மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு குறித்து உங்கள் பிள்ளைகள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்குக் கற்றுக்கொடுங்கள். இல்லையென்றால் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கும்,” என்றார்.
எங்களால் முடிந்தவரை நேர்மறையான எண்ணங்களுடன் வாழ முயல்கிறோம் 9 வயது சிறுவனை கேலி செய்வது அவனது அன்றாட வாழ்வியல் நடைமுறைகளான கல்வி பெறுவது, மகிழ்ச்சியாக இருப்பது என எல்லாவற்றிலிருந்தும் விலக்கி வைக்கிறது. ஒவ்வொரு நாளும் தற்கொலை எண்ணத்தோடு வாழும் மகனை நான் பெற்றிருக்கிறேன். குவாடனின் இத்தகைய மனநிலையால் நான் எப்போதுமே அவனை கண்காணித்துக் கொண்டிருக்கிறேன்.
சொன்னால் நம்ப மாட்டீர்கள் குவாடன் 6 வயதிலேயே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறான். 6 வயதில் ஒரு சிறுவனுக்குத் தற்கொலை குறித்து எப்படி தெரியும் என்று எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் அதைப் பற்றி அவனுக்கு விளக்கமாகக் கூறினேன். எனினும் அவன் தொடர்ந்து தற்கொலை முயற்சிகள் செய்கிறான். இப்படியான சூழலில் இருந்து மீள தகுந்த ஆலோசனைகளை இந்த வீடியோவைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் வழங்க வேண்டும். நிறைய ஆலோசனைகளைப் பெற்றுவிட்டேன். இன்னும் வேண்டும்.
இந்த மாதிரியான சம்பவங்களால் ஒரு குடும்பம் எவ்வாறு மன உளைச்சலுக்கு ஆளாகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்," என்று அழுதபடியே கேட்டுக்கொண்டார் யாரகா.
யாராகாவின் இந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலானது. குவாடன் மாற்றுத் திறனாளிகள் குறித்து ஏற்படுத்தப்பட வேண்டிய விழிப்புணர்வு குறித்து உலக மக்களுக்கு பாடம் கற்பித்திருக்கிறான். அவனுக்கு ஆதரவாக ட்விட்டரில் #iStandWithQuaden என்ற ஹேஷ்டேகும் வைரலானது.
குவாடனுக்கு ஆதரவாகவும் பக்கபலமாகவும் பலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சிலர் ஒரு படி மேலே போய் குவாடனுக்கு மகிழ்ச்சியை பரிசளித்திருக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜெராட் உர்க்ஹார்ட் என்பவர் டெய்லி மெயில் ஊடகத்தின் வழியாக குவாடனுக்கு உதவி செய்ய விரும்புவதாக விருப்பம் தெரிவித்துள்ளார்.
“9 வயது சிறுவன் உடைந்து பேசுவதை பார்க்கும் போது மனம் வலிக்கிறது. நான் என்னுடைய குழந்தைகளிடம் குவாடனுடன் நண்பராக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளேன். எப்படியாவது இந்தக் குழந்தைக்கு உதவி செய்தால், தனிமையை உணரமாட்டான். தன்னை கஷ்டப்படுத்திக்கொள்ள மாட்டான்," என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த நகைச்சுவையாளர் வில்லியம்ஸ் குவாடனுக்காக க்ரவுட் ஃபண்டிங் முறையில் நிதித் திரட்டியுள்ளார். குவாடனைப் போலவே வளர்ச்சிக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வில்லியம்ஸ், குவாடனும் அவனுடைய தாயாரும் அமெரிக்காவிற்கு வந்து நல்ல ஓட்டலில் தங்க வேண்டும், டிஸ்னி லேண்டிற்கு செல்ல வேண்டும். அவனுக்கு எல்லா மகிழ்ச்சியையும் தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
வில்லியம்ஸ், குவாடனுக்காக $440,000 நிதி திரட்டியுள்ளார். இவர்கள் மட்டுமல்ல குவாடனுக்காக ஸ்காட்லாந்து, லண்டன் என உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்களது அன்பையும் பாசத்தையும் பரிசளித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரக்பி வீரர்கள் குவாடனுக்கு மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்தித் தந்துள்ளனர். National Rugby League வீரர்கள், குவாடனுக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதில் அவனை அவர்களோடு மைதானத்தில் அழைத்துக் கௌரவிக்க ஆசைப்படுவதாக தெரிவித்திருந்தனர். அதன்படியே மைதானத்தில் ஜெர்ஸி அணிந்த குவாடன், கேப்டன் ஜோயல் தாம்ப்சன் கையைப்பிடித்து முன்னே செல்ல, ஆல்ஸ்டார்ஸ் ரக்பி அணி பின்வந்தது.
முகத்தில் மகிழ்ச்சி, புத்துணர்ச்சியோடு ரக்பி வீரர்களுடன் துள்ளாட்டம் போட்டு வந்தான் குவாடன். வாழ்வின் மிக மோசமான நாளில் இருந்து அவனுடைய வாழ்க்கை சிறந்த நாட்கள் நிறைந்ததாக மாறி வருவதாக குவாடனின் தாய் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
குவாடனின் அழுகை வீடியோவால் அதிர்ந்து போன சமூக ஊடகங்கள் ரக்பி வீரர்களுடன் ஜெர்சி அணிந்தும், குறும்புத் தனத்தோடு வாயில் ரோஜாப்பூவை வைத்துக் கொண்டு இருக்கும் குவாடனின் புகைப்படங்களை மகிழ்ச்சியோடு பகிர்ந்து வருகின்றனர். சமூக ஊடகங்கள் மனித மனங்களை இணைத்து மாற்றங்களுக்கு விதையாகட்டும்.