‘உலகின் சிறந்த மம்மி’ விருதை பெற்ற சிங்கிள் டாடி!
ஒரு பெண் மட்டும்தான் சிறந்த அம்மா ஆக முடியுமா? டவுன் சிண்ட்ரோம் குறைபாடுள்ள குழந்தையை தத்தெடுத்து வளர்த்துவரும் 33வயதான இளைஞருக்கு ‘உலகின் சிறந்த மம்மி’ விருது வழங்கப்பட்டுள்ளது.
உலகிலுள்ள மில்லியன் கணக்கான மக்களில் சில கருணையுள்ளங்கள் அவர்களது சிறுசிறு அன்பான செயல்களால் பல உ யிர்களின் வாழ்வில் நன்மாற்றங்களை ஏற்படுத்திவருகின்றன. அவர்களுள் ஒருவரான புனேவைச் சேர்ந்த ஆதித்யா திவாரி, டவுன் சிண்ட்ரோம் குறைபாடுள்ள குழந்தைகளின் மேம்பாட்டிற்காக தனது முழு வாழ்வினையும் அர்பணித்துள்ளார்.
2016ம் ஆண்டு டவுன் சிண்ட்ரோம் குறைபாடுள்ள குழந்தையை தத்தெடுத்து சிங்கிள் தகப்பனாக வளர்த்துவரும் அவருக்கு, மகளிர் தினத்தில் ‘உலகின் சிறந்த மம்மி’ என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
மகாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த ஆதித்யா ஒரு மென்பொறியாளர். ஆனால், மகன் அவ்னீஷை தத்தெடுத்ததிலிருந்து முழுதாய் மாறிபோனது ஆதித்யாவின் வாழ்வு. டவுன் சிண்ட்ரோம் குழந்தையை தத்தெடுத்து வளர்த்துவரும் ஆதித்யா, உலகின் பல நாடுகளுக்கும் பயணம் செய்து சிறப்புக் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
“2014ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி எனது தந்தையின் பிறந்தநாளன்று முதன்முதலில் ஒரு அனாதை இல்லத்திற்குச் சென்றபோது, அவ்னிஷைச் சந்தித்தேன்.
ஆறு மாத வயதுடைய ஒரு ஊனமுற்ற குழந்தையைத் தவிர அனைத்து குழந்தைகளும் தத்தெடுக்கப்பட்டன என்பதை அறிந்தேன். குழந்தையை தத்தெடுக்க யாரும் விரும்பவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். யாரும் அவரை தத்தெடுக்க விரும்பவில்லை என்றால் நான் தத்தெடுக்கலாம் என்று நினைத்தேன்,” என்று அவ்னிஷை சந்தித்த தருணத்தை பகிர்ந்தார் அவர்.
அவ்னிஷை தத்தெடுக்க முயற்சிக்கும்போது, தத்தெடுப்பு மற்றும் அதன் சட்டங்களைப் பற்றி நிறைய கற்றுக்கொண்ட அவர்,
இந்தியாவில் எந்தவொரு குழந்தையையும் தத்தெடுக்க அவர் தகுதி பெறவில்லை. ஏனெனில், ஒரு குழந்தையை சட்டப்பூர்வமாக தத்தெடுக்க பெற்றோருக்கு குறைந்தபட்சம் 30வயதாக வேண்டும். அச்சமயத்தில் ஆதித்யாவின் வயது 27.
“இந்தியாவில் உள்ள தத்தெடுப்புச் சட்டங்களைப் பற்றி கற்றுக்கொண்டேன். பிரதமர் உட்பட அனைத்து தேசிய தலைவர்களுக்கும் மின்னஞ்சல்களை எழுதினேன். எனது வழக்கை விதிவிலக்காகக் கருதுமாறு கேட்டுக்கொண்டேன். அரசுத் துறைகள் ஆரம்பத்தில் எனது வேண்டுகோளை நிராகரித்தன.
“சட்டசிக்கல்கள் ஒரு புறம்இருக்க நான் ஏன் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க விரும்புகிறேன்? உயிரியல் ரீதியாக ஒரு குழந்தையை உருவாக்க முடியவில்லை என்பதாலா? போன்ற கேள்விகள் என்னைத் துளைத்தன. அதுமட்டுமில்லாமல் ஒரு பெண்ணால் மட்டுமே ஒரு குழந்தையை கவனித்துக் கொள்ள முடியும் என்று என்னிடம் கூறினர்,” என்றார்.
இறுதியாக, ஒன்றரை வருடங்களுக்கு மேலான தொடர்முயற்சிக்குபின் அவரது மகனை 22 மாத குழந்தையாக வீட்டிற்கு வரவேற்றார் ஆதித்யா. மகனுக்கு தாயாக, தந்தையாக விளங்கும் ஆதித்யா, குழந்தை வளர்ப்பு பாலின அடிப்படையானதல்ல என்று நம்புகிறார்.
“2016ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அவ்னிஷை சட்டப்படி தத்தெடுத்தேன். அப்போதிருந்து எங்களுடைய பயணம் சாகசம் நிறைந்துள்ளது. கடவுள் எனக்கு அளித்த சிறந்த பரிசுகளில் ஒன்று அவ்னிஷ். நான் பாக்கியசாலியாக உணர்கிறேன்.
நான் ஒருபோதும் ஒரு தாய் அல்லது தந்தை என எந்தவொரு கதாபாத்திரத்திலும் என்னை ஈடுபடுத்தி அவன் முன் என்னை முன்னிறுத்தவில்லை. அவனுக்காக ஒரு நல்ல பெற்றோராகவும், ஒரு நல்ல மனிதனாகவும் மாற நான் எப்போதும் முயற்சித்து வருகிறேன். அவ்னிஷ் எனக்கு எப்படி ஒரு பெற்றோராக ஆக வேண்டும் என்று கற்றுக் கொடுக்கிறான். ஒரு பெண் மட்டுமே ஒரு குழந்தையை வளர்க்க முடியும் என்பது ஒரு ஸ்டீரியோடைப். இதன் காரணமாக தத்தெடுப்பின் போது நான் நிறைய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், அவ்னிஷ் என்னை முழுமையாக ஏற்றுக்கொண்டான் என்பது மகிழ்ச்சியானது,” என்று ஏஎன்ஐ-யிடம் தெரிவித்தார் ஆதித்யா.
அவ்னிஷை வீட்டிற்கு அழைத்து வந்த பிறகு, குழந்தையை பராமரித்து கொள்ளவேண்டி, பணியை துறந்தார் ஆதித்யா. அதன்பிறகு, சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டும் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினார். தத்தெடுப்பு மற்றும் டவுன் சிண்ட்ரோம் பற்றிய விழிப்புணர்வையும் பரப்பினார்.
ஆனால், அவையனைத்தையும் ஆதித்யா தனி ஒருவராக செய்யவில்லை. இப்போது ஆறு வயதாகும் அவ்னிஷூம் ஆதித்யாவின் பணிகளில் பங்கு போட்டுக்கொள்கிறார்.
“சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்களை ஊக்குவிக்கும்போது அவ்னிஷ் முன்னால் அமர்ந்துகொள்வார். அவ்னிஷ் பேசமாட்டார். ஆனால், அவருடைய இருப்பு அவரைப் பார்க்கும் மற்ற பெற்றோர்களுக்கு உந்துதலாக இருக்கும்,” என்கிறார் ஆதித்யா.
இந்த தந்தை-மகன் ஜோடி இதுவரை 22 மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து கிட்டத்தட்ட 400 இடங்களில் கூட்டங்கள், பயிற்சிகள், மாநாடுகள் மற்றும் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.
“நாங்கள் உலகம் முழுவதுமுள்ள 10,000 பெற்றோர்களுடன் தொடர்பில் உள்ளோம். மாநாடுகளில் பங்கேற்று சிறப்புக் குழந்தைகள் வளர்ப்பு குறித்த ஆலோசனைகளை வழங்க ஐக்கிய நாடுகள் சபையால் அழைக்கப்பட்டுள்ளோம்,” என்றார் ஆதித்யா.
பள்ளிக்குச் செல்லும் அவ்னிஷ்க்கு தொடக்கத்தில் இதயத்தில் துளைகள் இருந்துள்ளது. ஆனால், இப்போது எந்த மருத்துவ தலையீடும் இல்லாமல் துளைகள் மறைந்துவிட்டன என்றும் குறிப்பிட்டார். எனினும், அவ்னிஷ் எதிர்கொண்ட சில உடல் பிரச்சினைகளால் இரண்டு அறுவைசிகிச்சைகளைச் செய்ய வேண்டிய நிலையில் உள்ளான். விரைவில், அவனுக்கு அறுவைசிகிச்சை செய்யப்படும் என்றும் கூறினார்.
ஆதித்யாவின் வாழ்க்கையில் மகனின் வருகைக்கு பிறகுதான் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு உதவ தனியான சலுகைகள் எதுவுமில்லை, அவர்களுக்கு மாற்றுத்திறன் சான்றிதழ்களையும் அரசாங்கம் வழங்குவதில்லை என்பதை தெரிந்து கொண்டுள்ளார். அதற்காக மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கக்கோரி மனு ஒன்றையும் அனுப்பினார். முயற்சியின் வெற்றியாய் இப்போது, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சான்றிதழ்களையும் அரசாங்கம் வழங்குகிறது என்று கூறினார் அவர்.
ஆதித்யாவின் இத்தகு செயல்கள் பாராட்டத்தக்க ஒன்று அல்லவா? அதனால் தான் அவரது முயற்சியை பாராட்டும் வகையில் ஆதித்யாவிற்கு கடந்த மார்ச் 8ம்தேதி அன்று சர்வதேச மகளிர் தினத்தில் பெங்களூரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் ‘உலகின் சிறந்த மம்மி’ என்று விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். இது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுடன் பேசிய ஆதித்யா,
“உலகின் சிறந்த மம்மிகளில் ஒருவராக கரவிக்கப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,”என்றுள்ளார்.
அவ்னிஷுக்கு ஒரு குடும்பத்தைக் கொடுக்க ஆதித்யா அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக நின்றார். நாங்கள் உங்களைப் எண்ணி பெருமைப்படுகிறோம், ஆதித்யா!