வாட்ஸ் அப்'க்கு மாற்றாக 'அரட்டை’ மெசேஜிங் செயலி அறிமுகம் செய்ய Zoho திட்டம்!
இந்திய மேசேஜிங் செயலியான அரட்டை இப்போது நண்பர்கள் வட்டத்தில் பரிசோதனையில் இருப்பதாக ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப், டெலிகிராம், சிக்னல் போன்ற மேசேஜிங் செயலியை ஜோஜோ கார்ப்பரேஷன் நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். வாட்ஸ் அப் செயலி அதன் புதிய பிரைவசி கொள்கையால் சர்ச்சைக்கு உள்ளான சூழலில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வாட்ஸ் அப் புதிய நிபந்தனைகளால் அதிருப்தி அடைந்துள்ள பயனாளிகள் பலர், மாற்று மேசேஜிங் செயலிகளை நாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஜோஹோ நிறுவனம் 'அரட்டை' எனும் பெயரில் மெசேஜிங் செயலியை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
"எங்கள் உடனடி மேசேஜிங் சேவை பற்றி இப்போது என்னால் பேச முடியாது. இந்த ஆப் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் சோதனையில் உள்ளது. சில வாரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் ஆகும்,” என ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
மேசேஜிங் பிரிவில், பயனாளிகள் பல்வேறு மாற்று செயலிகளை பரிசீலித்து வரும் நிலையில், இந்த பிரிவில் ஜோஹோவும் நுழைகிறது.
மேசேஜிங் பிரிவில் வாட்ஸ் அப் முன்னணி சேவையாக இருக்கிறது. அரசியல்வாதிகள் முதல் இல்லத்தலைவிகள் வரை பலரும் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே இந்த பிரிவில் புதிய செயலி நிலை பெறுவது சவாலாக அமையும்.
மென்பொருளை ஒரு சேவையாக வழங்கி வரும் ஜோஹோ நிறுவனம், இந்தத் துறையில் எல்லைகளை விரிவாக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து உலகலாவிய நிறுவனத்தை உருவாக்குவது சாத்தியம் என ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறி வருகிறார்.
கிராமங்களுக்குத் தகவல் தொழில்நுட்பத்தைக் கொண்டு செல்வதில் கவனம் செலுத்தி வரும் ஜோஹோ, அரட்டை மேசேஜிங் செயலியை அறிமுகம் செய்ய இருப்பது இணைய உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொகுப்பு: சைபர் சிம்மன்