பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு அறிவித்துள்ளது Zomato!
திருநங்கைகள் உட்பட பெண் ஊழியர்களுக்கு ஆண்டிற்கு 10 நாட்கள் மாதவிடாய் விடுப்பு வழங்கியுள்ளது ஜோமேட்டோ.
டெல்லியைச் சேர்ந்த உணவு தொழில்நுட்ப யூனிகார்ன் நிறுவனமான ஜோமேட்டோ அனைத்து பெண் ஊழியர்களுக்கும் மாதவிடாய் விடுப்பு அறிவித்துள்ளது.
திருநங்கைகளுக்கும் இந்த விடுப்பு பொருந்தும். இதன்படி ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சிக்கும் ஒரு நாள் விடுப்பு என மொத்தம் ஒரு ஆண்டில் 10 நாட்கள் விடுப்பு எடுக்கலாம்.
நம்பிக்கை, உண்மைத்தன்மை, ஏற்றுக்கொள்ளுதல் போன்றவை நிரம்பிய கலாச்சாரத்தை உருவாக்கி, அனைவரையும் உள்ளடக்கிய செயல்பாடுகளை ஊக்குவிக்கவேண்டும் என்பதே இந்த ஸ்டார்ட் அப்’பின் நோக்கம். எனவே இந்தப் புதிய கொள்கையினை தவறாக பயன்படுத்திக்கொள்ளவேண்டாம் எனவும் இந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
“உடல் ரீதியான தேவைகளுக்கு ஏற்றவாறு உரிய வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டியது நம் கடமை. அதேசமயம் இதனால் பணியின் தரமும் நாம் ஏற்படுத்தும் தாக்கமும் பாதிக்கப்படக்கூடாது,” என்று நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான வலைப்பதிவில் ஜோமேட்டோ இணை நிறுவனர் மற்றும் சிஇஓ தீபிந்தர் கோயல் பதிவிட்டுள்ளார்.
பெரும்பாலான பெண்களுக்கு ஒரு வருடத்தில் 14 மாதவிடாய் சுழற்சி ஏற்படும். வார இறுதி நாட்களில் மாதவிடாய் வரவும் வாய்ப்புள்ளது என்பதால் அதையும் கருத்தில் கொண்டே 10 நாட்கள் வழங்கப்பட்டுள்ளதாக இந்த ஸ்டார்ட் அப் விளக்கமளித்துள்ளது.
ஊழியர்கள் மாதவிடாய் விடுப்பு கோரி இ-மெயில் மூலம் தெரிவிக்கும்போது வெளிப்படையாக காரணத்தைக் குறிப்பிட்டே விடுப்பு கேட்கலாம் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மாதவிடாய் விடுப்பு கோருவதற்கு வெட்கப்படவோ, தயக்கம் காட்டவோ வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளது.
விடுப்பிற்கு விண்ணப்பிக்கும்போது தேவையற்ற தொந்தரவு கொடுத்தாலோ அருவெருக்கத்தக்க முறையில் நடந்துகொண்டாலோ ஊழியர்கள் புகாரளிக்கலாம். ஜோமோட்டோ நிறுவனத்தின் பாலியல் வன்முறை தடுப்பு குழு (POSH) உரிய நடவடிக்கைகள் எடுக்கும்.
பெண் ஊழியர்கள் மாதவிடாய் விடுப்பு எடுப்பதாக தெரிவிக்கும்போது அவர்களுக்கு சங்கடமான சூழல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று ஆண் ஊழியர்களிடம் இந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
“இது வாழ்க்கையின் ஒரு அங்கம். பெண்களுக்கு இந்த சமயத்தில் என்ன நடக்கிறது என்பதை நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் ஓய்வு தேவை என்று கூறும்போது நாம் அவர்களை நம்பவேண்டும். பலருக்கு மாதவிடாய் சுழற்சி என்பது வலி நிறைந்ததாகவே இருக்கும். ஒருங்கிணைந்த கூட்டு கலாச்சாரத்தை நான் உருவாக்க அவர்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டும்,” என்றார் தீபிந்தர்.
பாலின சமத்துவத்தை உறுதிசெய்ய பணியிடங்களில் மாதவிடாய் விடுப்பு அளிக்கப்படவேண்டும் என்பது நீண்ட நாட்களாகவே விவாதப்பொருளாக இருந்துவருகிறது. 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் மும்பையைச் சேர்ந்த ‘கல்ச்சர் மெஷின்’ டிஜிட்டல் மீடியா ஸ்டார்ட் அப் மாதவிடாய் விடுப்பை நடைமுறைப்படுத்தத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
தகவல்: பிடிஐ