கேரள இன்ஜினியர் விவசாயி ஆகி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது எப்படி?
பொறியியல் படித்த கேரளாவைச் சேர்ந்த சுதீஷ் பசுமை விவசாயத்திற்கு மாறி சில ஆச்சரியமூட்டும் சாதனைகளைச் செய்ததன் மூலம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
ஐக்கிய அரபு நாடான ஷார்ஜாவில் பாலைவன மணலுக்கு நடுவில் பச்சை பசேல் என நெற்கதிர்கள் விளைந்து நிற்பதை கற்பனை செய்து பார்க்கவே சற்று கடினமாக இருக்கும். ஆனால் பொறியாளராக இருந்தும் ஆர்வம் காரணமாக இயற்கை விவசாயத்திற்கு மாறிய கேரளாவைச் சேர்ந்த சுதீஷ், இதை சாத்தியமாக்கியுள்ளார்.
விவசாயத்தை வெற்றிகரமாக செய்ததோடு தன் குடும்பத் தேவைக்கான பலவகை காய்கறிகளையும் சுதீஷ் வெற்றிகரமாக விளைவித்து காட்டியுள்ளார்.
சுதீஷ் 1997ம் ஆண்டு கல்ஃப் நாட்டிற்கு இடம் பெயர்ந்துவிட்டார், ஆனால் விவசாயம் மீது அவருக்கு இருந்த தீவிர காதலால் மண்ணில் கை வைத்து அழுக்காக்கிக் கொண்டாலும், தனது கடின உழைப்பாலும் மாற்று விவசாய முறையாலும் நல்ல விளைச்சலையும் செய்து காண்பித்தார்.
கடந்த மாதம் சுதீஷின் பெயர் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தன்று அதிக அளவிலான மரக்கன்றுகளை விநியோகித்ததன் மூலம் சுதீஷ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட 4914 கறிவேப்பிலை செடிகளை ஷார்ஜா இந்தியன் பள்ளியின் மாணவர்களுக்கும் சுதீஷ் வழங்கியுள்ளார். கறிவேப்பிலைச் செடிகளை விநியோகிக்க சுதீஷ் முடிவு செய்ததற்கு முக்கியக் காரணம் அதிக அளவில் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுவதாக ஐக்கிய அரபு நாடுகளில் கறிவேப்பிலை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்காக பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட கறிவேப்பிலை செடிகளை மாணவர்களுக்கு வழங்கியுள்ளார். இதனால் நீண்ட காலமாக சமையலில் கறிவேப்பிலை சேர்க்க முடியாத தாய்மார்கள் தற்போது அதனை சமையலில் சேர்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
2018ம் ஆண்டு சயீது நினைவு ஆண்டாக கொண்டாடப்படுகிறது. ஐக்கிய அரபு நாடுகளை தோற்றுவித்த தந்தை என்று அழைக்கப்படுபவர் மறைந்த ஷேக் சயீது பின் சுல்தான் அல் ரேயான். அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக சுதீஷ் இந்த கின்னஸ் சாதனை முயற்சியை செய்துள்ளார்.
“என்னுடைய வாழ்க்கையின் கனவு நினைவாகியுள்ளது. சயீது நினைவு ஆண்டு மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தில் இது நடந்தது எனக்கு மேலும் மகிழ்ச்சியை அளிக்கும் தருணம்,” என சுதீஷ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கின்னஸ் சாதனைகளுக்கு முன்னரும் இயற்கை விவசாயத்தில் சுதீஷ் மேலும் சில சாதனைகளைச் செய்துள்ளார். தன்னுடைய வீட்டு தோட்டத்தில் 41.91செ.மீ அளவில் நீளமான வெண்டைக்காயை விளைவித்தற்காக 2012ல் சுதீஷ் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் 3.81 செ.மீட்டரில் சிறிய அளவிலான வெண்டைக்காயையும் வளர்த்து சாதனை படைத்துள்ளார்.
2014ம் ஆண்டு முதன்முதலில் சுதீஷ் நெல் விளைவிக்க முயற்சித்த போது அவரின் விவசாய முயற்சிக்கு அவருடைய ஊழியரும், ஷார்ஜா மின்சாரம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரியும் முழு மனதோடு ஆதரவு தெரிவித்தனர்.
2 ஆண்டுகளுக்குப் பிறகு ஷார்ஜாவில் உள்ள 3 இந்தியப் பள்ளிகளின் மாணவர்களுக்கு நெல் அறுவடை பற்றி சுதீஷ் விளக்கம் அளித்தார் கடந்த ஜூன் மாத இறுதியில் 70 மாணவர்களுக்கு கேரள முறைப்படி நடந்த முதல் அறுவடைத் திருவிழாவான நாடனை அனுபவிக்கும் வாய்ப்பை சுதீஷ் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். சுதீஷ் தற்போது இயற்கை முறையிலான விவசாயம் சார்ந்த சேவைகளை தன்னுடைய க்ரீன்லைஃப் ஆர்கானிக் பார்மிங் நிறுவனம் மூலம் செய்து வருகிறார்.
மாணவர்கள் வீட்டுத் தோட்டத்தில் ஆர்வம் காட்ட தன்னுடைய கிரீன்லைஃப் ஆர்கானிக் பார்மிங் மூலம் சுதீஷ் உதவி செய்து வருகிறார்.
“மாணவர்களுக்கு விதைகள் மற்றும் செடிகளைக் கொடுத்து அவற்றை வளர்க்கச் செய்கிறோம். ஒரு போட்டி போல நடத்தி சிறந்த முறையில் செடிகளை வளர்ப்பவர்களுக்கு பரிசுகளை வழங்க வேண்டும் என்பதே என்னுடைய திட்டம். இதன் மூலம் பசுமை விவசாயத்திற்கான முயற்சி தொடர்ந்து மக்கள் மத்தியில் இருந்து கொண்டே இருக்கும்,”
என்று சுதீஷ் கல்ஃப் நியூஸ்க்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.