சென்னையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பிரத்யேகப் பூங்கா!
மாற்றுத்திறனாளி குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடி அதே சமயம் தங்களது உணர் திறனை மேம்படுத்திக்கொள்ள இந்தப் பூங்கா உதவும்.
சென்னையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. சென்னை மாநகராட்சி சமீபத்தில் வெவ்வேறு வகையான குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான பூங்காவை முதல் முறையாக திறந்துள்ளது.
கவிதா கிருஷ்ணமூர்த்தி பன்னிரண்டு ஆண்டுகளாக நடத்தி வரும் அரசு சாரா நிறுவனமான Kilikili இந்த பூங்காவை வடிவமைத்துள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய விளையாட்டுப் பகுதியை உருவாக்கவேண்டும் என்பதில் குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோர் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த பெற்றோர் நெட்வொர்க் இதற்கு ஆதரவளித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி இந்த திட்டத்திற்காக 1.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
மூன்றாண்டுகள் முன்பு இத்தகைய பூங்காவிற்கான திட்டம் உருவானது. கவிதா கிருஷ்ணமூர்த்தி நிரந்தரமாக சென்னைக்கு மாற்றலானபோது பூங்காவை வடிவமைக்க மாற்றுத்திறனாளி உரிமைகள் கூட்டமைப்பு (Disability Rights Alliance) அவரை அணுகியது. வடிவமைப்பை செயல்படுத்த சிட்டி வொர்க்ஸ் என்கிற தனியார் கட்டிடக்கலை நிறுவனத்தையும் Kilikili இணைத்துக்கொண்டது.
1,529 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்ட பூங்கா சாந்தோமின் 4-வது ட்ரஸ்ட் லிங்க் சாலையில் அமைந்துள்ளது.
பூங்காவிற்குள் பிரகாசமான வண்ணங்களுடன் தொட்டு உணரும்படியான சுவரோவியங்கள் உள்ளன. குழந்தைகளின் தொடு உணர்வை ஊக்குவிக்கும் வகையில் டயர்கள், வளையல்கள், சிப்பிகள் மற்றும் இதர பொருட்களால் சுவர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மண், கூழாங்கற்கள், மரம், நார், கான்கிரீட் போன்ற பொருட்கள் நடைபாதை அமைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. சக்கர நாற்காலியில் இருக்கும் குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ப ஊஞ்சல்கள் அமைக்கப்பட்டுள்ளது. பார்வை குறைபாடு, ஆட்டிசம், மற்றும் சக்கர நாற்காலியில் இருக்கும் குழந்தைகளுக்காக ராட்டினம் தரைமட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
பூங்காவின் வடிவமைப்பு குறித்து கவிதா ’தி இந்து’விடம் தெரிவிக்கையில்,
“சென்னை போன்ற நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான பூங்கா முக்கியமானதாகும். குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், தெரபிஸ்டுகள், மாற்றுத்திறனாளிகள் துறை சார்ந்தவர்கள் போன்றோரிடம் பல முறை உரையாடல்கள் மேற்கொண்டு தகவல்களை சேகரித்தோம்,” என்றார்.
பூங்காவில் விளையாடுவோர் கீழே விழுந்தாலும் காயம் ஏற்படாத வகையில் தரை அமைக்கப்பட்டுள்ளது. கவனக்குறைவு குறைபாடு (ADHD) உள்ள குழந்தைகளுக்கு உகந்த வகையில் சறுக்குமரம் போன்றவை வடிவமைக்கப்பட்டுள்ளது.
தி நியூஸ் மினிட் உடனான நேர்காணலில் கவிதா குறிப்பிடுகையில்,
”பூங்காவில் உங்களது கைகளை ஈரமாக்கி தேய்த்தால் அதிர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு கல் உள்ளது. ஆரோவில்லைச் சேர்ந்த சில சிறுவர்கள் இதை உருவாக்கியுள்ளனர். காற்று வீசும்போதோ அல்லது நீங்கள் கடந்து செல்லும்போதோ இசையை ஏற்படுத்தும் பொம்மைகள் பூங்காவில் உள்ளது,” என்றார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு இத்தகைய பூங்கா திறப்பதற்கான காரணத்தை கவிதா விவரிக்கையில்,
“2005-ம் ஆண்டு பெங்களூருவில் இருக்கும் ஒரு பூங்காவிற்கு என்னுடைய நான்கு வயது மகனை அழைத்துச் சென்றேன். அப்போதுதான் மாற்றுத்திறனாளி குழந்தைகள் யாருமே அங்கு விளையாடவில்லை என்பதை உணர்ந்தேன். சக்கர நாற்காலியில் இருக்கும் குழந்தைகளோ பார்வை குறைபாடு உள்ள குழந்தைகளோ விளையாடும் வகையில் பூங்காவின் வடிவமைப்பு இருப்பதில்லை. ஆட்டிசம் அல்லது அறிவுத்திறன் குறைபாடு உள்ள குழந்தைகள் சமூகத்தில் ஒருங்கிணைய முடிவதில்லை. மற்ற குழந்தைகளுடன் பழக முடிவதில்லை. அப்போதுதான் அனைவரையும் உள்ளடக்கிய சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பொது இடங்கள் குழந்தைகளுக்காக இருக்கவேண்டிய தேவை இருப்பது அவசியம் என்பதை உணர்ந்தேன்,” என்றார்.
பெங்களூருவில் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று பூங்காக்கள் உள்ளன. மங்களூருவில் ஒரு பூங்காவும் நாக்பூரில் ஒன்றும் உள்ளது. இந்த நகரங்களின் வரிசையில் தற்போது சென்னையும் இணைந்துள்ளது.
கட்டுரை : THINK CHANGE INDIA