ஜூன் 19 முதல் 30 வரை 12 நாட்கள் ஊரடங்கு யாருக்கு? கட்டுப்பாடுகள் என்ன ?
ஜூன் 19 அதிகாலை 12 மணி முதல் ஜூன் 30 இரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் மட்டும் பொது முடக்கம் அறிவிப்பு வந்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை மார்ச் 23 முதல் அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து பல கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
ஆனால் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறிப்பாக சென்னை மற்றும் சில மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரிப்பதால் முழு ஊரடங்கு தேவையென பலரும் சொல்லிவந்த நிலையில், இன்று அதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய் பரவலை கருத்தில்கொண்டு, இன்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொதுச் சுகாதார வல்லுனர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையிலும், அமைச்சரவைக் கூட்டத்தின் ஆலோசனை அடிப்படையிலும், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 கீழ்,
ஜூன் 19 அதிகாலை 12 மணி முதல் ஜூன் 30 இரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் மட்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வந்துள்ளது.
12 நாள் ஊரடங்கு எங்கு?
- பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதும்,
- திருவள்ளூர் மாவட்டத்தில் பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளிலும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,
- செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும், மற்றும் காட்டாங்களத்தூர் ஊராட்சி ஒன்றியப் பக்திகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,
- காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.
ஊரடங்கில் கட்டுப்பாடுகள் என்ன?
நான்கு மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள 12 நாள் ஊரடங்கின் போது கீழ்கண்ட அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாட்டுடன் தளர்வுகள் அளிக்கப்படுகிறது.
1. மருத்துவமனைகள் மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள் மருந்தகங்கள் ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகள்.
2. வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது, எனினும் அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.
3. மாநில அரசுத் துறைகள் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்படும். அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் தலைமை செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை காவல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மின்சாரத் துறை, கருவூலத்துறை, உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை போன்ற துறைகள் தேவையான பணியாளர்களுடன் செயல்படும்.
மத்திய அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படுவார்கள். அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் மத்திய அரசு அலுவலகங்கள் தேவையான பணியாளர்களுடன் பணிபுரிய அனுமதிக்கப்படும்.
5. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் (Containment zones) வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வரத் தேவையில்லை அதற்கான அனுமதியை சம்பந்தப்பட்டத் துறை அதிகாரிகளிடம் முன்கூட்டியே பெற்றுக்கொள்ள வேண்டும்.
6. வங்கிகள் 33 சதவீத பணியாளர்களோடு ஜூன் 29 மற்றும் ஜூன் 30 ஆகிய நாட்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும், தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் (ஏடிஎம்) அது சம்பந்தப்பட்ட வங்கிப் பணி மற்றும் போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும்.
7. பொதுவிநியோகக் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். பொது விநியோகத் திட்டத்திற்கு தொடர்புடைய இந்திய உணவுக் கழகம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகள் மற்றும் அதைச் சார்ந்த போக்குவரத்து அனுமதிக்கப்படும்.
8. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பொதுவிநியோகக் கடைகள் இயங்காது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு அரசு அறிவித்த நிவாரணங்கள், பணியாளர்களால் நேரடியாக வழங்கப்படும்.
9. காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு சமூக இடைவெளியுடன் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும். அதேபோல் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்க முடியும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் பொது மக்கள் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே அதாவது 2 கிலோமீட்டர் தொலைவிற்குள் மட்டும் சென்று பொருட்களை வாங்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
10. உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். தேனீர் கடைகள் இயங்க அனுமதி கிடையாது. தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைக்கு அனுமதி வழங்கப்படும். பொருட்களை வழங்கும் ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களிடமிருந்து அடையாள அட்டை பெற்று பணியாற்ற வேண்டும்.
11. முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள் வீட்டில் தங்கியிருக்கும் முதியோர், நோயாளிகளுக்கு உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி உண்டு.
13. அம்மா உணவகங்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் கம்யூனிகேஷன்ஸ் தொடர்ந்து செயல்படும்.
14. பொதுமக்களுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதியுடன் இயங்கலாம்.
15. அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் இயங்கலாம்.
15. நீதித்துறை மற்றும் நீதிமன்றங்கள் இயங்கும்.
16. மேற்கண்ட 12 நாட்களுக்கு பணியிட வளாகத்திலேயே தங்கியிருந்து பணிபுரியும் தொழிலாளர்களைக் கொண்ட கட்டுமானப்பணி அனுமதிக்கப்படும்.
17. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொழிலாளர்களுக்கு ஒரு முறை RTPCR பரிசோதனை செய்து மேற்கண்ட 12 நாட்களுக்குத் தொழிற்சாலை வளாகத்தில் அல்லது அவர்கள் தங்க வைக்கப்பட்டு பணிபுரிய அனுமதி வழங்கப்படும். அதேபோல் பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்து மற்ற இடங்களுக்கு சென்று பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒரு முறை RTPCR பரிசோதனை செய்து தொழிற்சாலை வளாகத்தில் அதன் அருகிலேயே தங்கி பணிபுரிய அனுமதிக்கப்படும்.
இந்த 12 நாட்களில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்து தினந்தோறும் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வர அனுமதிக்கப் படாது. எனினும் தொடர் செயல்பாடுகள் உள்ள மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.
18. இந்த ஊரடங்கின்போது சரக்கு போக்குவரத்துக்கும் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் எவ்வித தடையும் கிடையாது.
19. சென்னையிலிருந்து திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய காரணங்களுக்காக பிற மாவட்டங்களுக்குச் செல்ல தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
20. வெளிமாநிலத்தில் இருந்து வருகின்ற ரயில்களும் விமானங்களுக்கும் அதேபோல் வெளிநாட்டில் இருந்து வருகின்ற விமானங்களுக்கும் கப்பலுக்கும் தற்போதுள்ள நடைமுறையே தொடரும்.
இதைத்தவிர ஜுன் 21 மற்றும் ஜூன் 28 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கண்ட எந்த வித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.
அதாவது 20 ஜூன் அன்று நள்ளிரவு 12 மணி முதல் 22 ஜூன் காலை 6 மணி வரையிலும் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்படும். அதேபோன்று 27 ஜூன் அன்று நள்ளிரவு 12 மணி முதல் 29 ஜூன் காலை 6 மணி வரை எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்படும்.