வரும் மார்ச்-க்குள் 13 செயற்கைக் கோள் மற்றும் ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்படும்- இஸ்ரோ தலைவர் கே.சிவன்
கார்ட்டோசாட– 3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு, ஸ்ரீஹரிகோட்டாவில் விஞ்ஞானிகளிடையே உரையாற்றினார் கே.சிவன்.
கார்ட்டோசாட்– 3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு, ஸ்ரீஹரிகோட்டாவில் விஞ்ஞானிகளிடையே உரையாற்றிய இந்திய விண்வெளி ஆய்வுக்கழகமான இஸ்ரோவின் தலைவர் டாக்டர்.கே.சிவன், பிஎஸ்எல்வி– சி 47 ராக்கெட் மூலம் கார்ட்டோசாட் – 3 செயற்கைக்கோள் திட்டமிட்டபடி விண்ணில் செலுத்தப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
கார்ட்டோசாட்– 3 மற்றும் அதனுடன் செலுத்தப்பட்ட அமெரிக்காவின் 13 நானோ செயற்கைக்கோள்களும் அவற்றின் புவி வட்டப்பாதையில் செலுத்தப்பட்டதாகக் கூறினார். கார்ட்டோசாட்– 3 செயற்கைக்கோளில் துல்லியமாக படமெடுக்கக்கூடிய அதிநவீன கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய திட்ட இயக்குநர் மற்றும் ஒட்டுமொத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் அவர் தமது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இஸ்ரோ விஞ்ஞானிகள் எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக நிறைவேற்றி முடிப்பார்கள் என்றும் டாக்டர்.சிவன் தெரிவித்தார்.
அடுத்தக் கட்டமாக, வருகிற மார்ச் மாதத்திற்குள் 13 திட்டங்களை செயல்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திரு.சிவன் குறிப்பிட்டார். 6 செலுத்து வாகனங்கள் மற்றும் 7 செயற்கைக்கோள்கள் மார்ச் மாதத்திற்குள் விண்ணில் செலுத்தப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவின் கார்ட்டோசாட்-3 செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 வர்த்தக ரீதியான நானோ செயற்கைக்கோள்களுடன், பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஷ் தவான் விண்வெளி மையத்தில் நேற்று காலை மணி 9.28-க்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்திய விண்வெளி ஆய்வுக்கழகம் –இஸ்ரோவால் தயாரிக்கப்பட்டுள்ள 1625 கிலோ எடைகொண்ட கார்ட்டோசாட்-3 செயற்கைக்கோள், ஐந்தாண்டுகளுக்கு செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெருமளவிலான நகர்ப்புற திட்டமிடல், கிராமப்புற வளங்களை கண்டறிதல், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், கடற்கரை நிலங்களின் பயன்பாடு உள்ளிட்டவற்றுக்காக இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கார்ட்டோசாட்டுடன் செலுத்தப்படும் அமெரிக்காவின் நானோ செயற்கைக்கோள்கள், இஸ்ரோவின் வணிக அமைப்பான நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்தின் மூலம் விண்ணில் செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.