மாதம் 21கிராம், ஆண்டுக்கு 250கிராம்; பிளாஸ்டிக் உண்ணும் மனிதர்கள்..!
சராசரியாய் ஒரு நபர் ஒவ்வொரு வாரமும் 2,000 சிறிய பிளாஸ்டிக் துண்டுகளை உண்பதாக சர்வதேச ஆய்வறிக்கை ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது மாதத்திற்கு 21 கிராம் பிளாஸ்டிக் துகள்கள் வீதம் ஆண்டிற்கு 250கிராம் பிளாஸ்டிக் துகள்களை மனிதர்கள் உட்கொள்ளுகின்றனர்.
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் தொடங்கி ஆழமான பெருங்கடல்கள் வரை, பூமியின் எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக் குப்பைகள் பரவி கிடப்பதை நாம் அறிவோம். இப்போது அவை நமக்குள்ளும் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்வோம். ஆம், வாரந்தோறும் கிரெடிட் கார்டு அளவிலான பிளாஸ்டிக்கை மனிதர்கள் உண்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது சர்வதேச ஆய்வறிக்கை ஒன்று!
![plastics](https://images.yourstory.com/cs/18/7be54820-08d9-11e9-bb47-3d9d98ed1e05/Imagefqbe1562135902904.jpg?fm=png&auto=format)
ஆஸ்திரேலியாவில் உள்ள ‘நியூ காஸ்டில்’ பல்கலைகழகம் சமீபத்தில் இயற்கை அழிவிலிருந்து மனித குலத்தை அழிக்க ஆயத்தமாகியுள்ள பிளாஸ்டிக் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ஆய்வின் முடிவில், நீரிலும், உணவிலும் கலந்துவிடும் 2,000 சிறு பிளாஸ்டிக் துகள்களை மனிதர்கள் உட்கொள்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
நீர் பருகுகையில், உணவு உண்ணுகையில் என அறியாமலே உணவிலும், நீரிலும் கலந்துள்ள பிளாஸ்டிக் துகள்களை உண்டு வருகிறோம். அப்படி, வாரத்திற்கு கிரெடிட் கார்டு அளவிலான 5 கிராம் பிளாஸ்டிக்கை உண்ணுகிறோம் என்கிறது அந்த ஆய்வு. இந்த ஆய்வு உட்பட பிளாஸ்டிக் குறித்து மேற்கொள்ளப்பட்ட 50 வகையான ஆராய்ச்சி தகவல்களை கெண்டு உலக வனவிலங்கு நிதி அமைப்பு ஆய்வு செய்துள்ளது.
“இந்த ஆராய்ச்சியில் கிடைத்துள்ள அதிர்ச்சித் தகவல்கள் அரசாங்கங்கள் விழித்து கொள்வதற்கான எச்சரிக்கை ஒலி. பிளாஸ்டிக்குகள் நமது பெருங்கடல்களையும் நீர்வழிகளையும் மாசுபடுத்தி கடல் வாழ் உயிரினங்களையும் கொல்வதோடு மட்டுமல்லாமல் - இப்போது அவைகள் நம் அனைவருக்குள்ளும் இருக்கின்றன. மேலும் பிளாஸ்டிக்குகளை உட்கொள்வதிலிருந்து நம்மால் தப்ப முடியாது. நம் உடலுக்கு பிளாஸ்டிக் வேண்டாமெனில், ஒவ்வொரு ஆண்டும் இயற்கையுடன் கலக்கும் மில்லியன் டன் கணக்கான பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவேண்டும்.”
என்று சிஎன்என் பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ளார் உலக வனவிலங்கு நிதியத்தின் இயக்குனர் மார்கோ லம்பெர்டினி. மேலும் அவர், ஐந்து மில்லி மீட்டருக்கும் குறைவான அளவில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக்ஸ் மனிதர்கள் உண்ணும் உணவிலும், குடிநீரிலும், ஏன் காற்றிலும் கலந்துவிடுகின்றன என்கிறார் அவர்.
இந்த ஆய்வை மேற்கொண்ட நியூகாஸ்டில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வின் துணை தலைவரும் மைக்ரோபிளாஸ்டிக் ஆராய்ச்சியாளருமான தவ பழனிசாமி கூறுகையில்,
“மைக்ரோபிளாஸ்டிஸ் பற்றிய விழிப்புணர்வும் சுற்றுச்சூழலில் அவற்றின் தாக்கமும் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆய்வு முதன்முறையாக மனிதர்கள் உட்கொள்ளும் விகிதங்களை துல்லியமாக கணக்கிட உதவியுள்ளது,” என்றார்.
![plastics 1](https://images.yourstory.com/cs/18/7be54820-08d9-11e9-bb47-3d9d98ed1e05/Image8ope1562135924237.jpg?fm=png&auto=format)
ஆய்வின்படி, நாம் உட்கொள்ளும் பிளாஸ்டிக் துண்டுகள் பெரும்பாலானவை குடிநீரிலிருந்தும், சிப்பி மீன்கள் மற்றும் உணவுகளின் வாயிலாகவே வயிற்றுக்கு செல்கின்றது. மனித உடலில் பிளாஸ்டிக் உட்கொள்வதால் ஏற்படும் நீண்டகால விளைவுகள் இன்னும் சரியாக ஆவணப்படுத்தப்படவில்லை என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதேபோல், நமது ஆரோக்கியத்தில் பிளாஸ்டிக் ஏற்படுத்தும் தாக்கங்களை நன்கு புரிந்துகொள்வதற்கான ஆய்வுகள் நடந்து வருவதாகவும் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
![plastics 2](https://images.yourstory.com/cs/18/7be54820-08d9-11e9-bb47-3d9d98ed1e05/Imagelezv1562135880517.jpg?fm=png&auto=format)
உடலுக்குள் சென்றுவிடும் பிளாஸ்டிக் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து டாக்டர் குமார் இந்தியன் எக்ஸ்பிரசிடம் கூறுகையில்,
“பிளாஸ்டிக் நம் உயிரணுக்களுக்குள் சென்றுவிடும்போது, அவை ஆஸ்டியோபோரோசிஸ், தைராய்டு புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம், அடிசனின் நோய், குறைந்த டெஸ்டோஸ்டிரோன் மற்றும் உடல் பருமன் போன்ற நோய்களை ஏற் படுத்தும்,” என்றுள்ளார்.
“பிளாஸ்டிக்கில் உள்ள வேதிப்பொருட்கள் ஆண்களுக்கு இரண்டு வழிகளில் பாதிக்கும்- விந்தணுக்களின் டி.என்.ஏ துண்டாக்குதல் மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும். அதே போல் பெண்கள் வெகு விரைவில் பருவமடைவர் மற்றும் வயது வந்தவருக்கு புரோஸ்டேட் அல்லது மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும். இது ஒரு பெண் கருவின் எதிர்கால கருவுறுதல் அளவையும் பாதிக்கலாம்,” என்று டாக்டர் நாயர் கூறியுள்ளார்.
தகவல் உதவி: Indianexpress & usatoday| கட்டுரையாளர் : ஜெயஸ்ரீ